ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

6 comments

Dallas-ல் மணி இப்போது 12:09 நடு இரவு. வீட்டில் New Jersey-யில் 1:11 AM. அலுவல் விஷயமாக ஒரு வாரம் Texas-ல் உள்ள Dallas என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன். இன்றோடு மூன்று நாள் ஆகிறது. இன்னும் மூன்று நாள் செல்லும் வீட்டில் போய் சேர...

பொதுவாக அமெரிக்காவில் Texas மக்களை குறித்து நல்ல பெயர் உண்டு - விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்று. அது உண்மை தான். Airport-ல் இருந்து வெளியில் வந்தவுடனே taxi-க்காக line-ல் நிற்கும்போது குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு குளிர்ந்த ஒரு பாட்டில் தண்ணீர் கையில் கொண்டு தருவார்கள். வேறு எந்த இடத்திலும் இப்படி ஒரு உபசரிப்பை நான் பார்த்தது கிடையாது.

மக்களும் கூட New York போல ஆடம்பரம் இல்லை. முடி, நகம், முகம், பல், உதடு எல்லாம் உள்ளது உள்ளது போல் தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை முடி என்றால் வெள்ளை முடி. உடைந்த பல் என்றால் உடைந்த பல். ஒடிந்த நகம் என்றால் ஒடிந்த நகம். இப்படி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் காணப்படுகிறார்கள். அதனால் தானோ என்னவோ New York மக்களை விட கொஞ்சம் வயதில் கூடினவர்களாக தெரிகிறார்கள். 

நான் ஒரு Conference-க்காக வந்திருக்கிறேன். Germany, France, Canada, மற்றும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் வந்திருக்கிறார்கள்.

நன்றாகத்தான் இருக்கிறது மாநாடு. இருந்தாலும் பிள்ளைகளை விட்டுவிட்டு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அடிக்கடி தோன்றத்தான் செய்கிறது.

நான் மட்டும் இல்லை. வந்திருக்கிற எல்லா அம்மாக்களும் இதைத்தான் பேசிக்கொள்கிறோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம்.

அப்பாக்கள் ஏனோ வீட்டைப் பற்றி ஒரு கவலையையும் காட்டிக்கொள்வது இல்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் எல்லாம் தானாய் நடக்கும் என்பது போலத்தான் இருக்கிறார்கள். வேலை ஒன்றே அவர்கள் வாழ்க்கை போலும்.

பாவம் தான் அம்மாக்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று. வீடும் வேண்டும் வேலையும் வேண்டும் என்று. குடும்பமும் வேண்டும் பதவியும் வேண்டும் என்று. அங்கேயும் இங்கேயுமாக...

ஆனாலும் கூட எவ்வளவு சந்தோஷமாய் சிரித்த முகத்துடன் conference-ன் ஒவ்வொரு காரியங்களிலும் பெண்கள் முன் நிற்பதையும், புதிய பாடங்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதையும், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையையுமாய் உலாவுவதையும் பார்க்கும்போது ஒரு புதிய உற்சாகம் தானாய் தோன்றத்தான் செய்கிறது.

எதையும் சாதித்துவிடலாம் என்ற துணிச்சல் எழும்பத்தான் செய்கிறது. ஒரு முறையேனும் ஏணியின் உச்சி வரை சென்றே தீர்வதென்று மனம் ஏங்கத்தான் செய்கிறது. எல்லைகளை விரிவாக்கியே ஆவது என்ற ஆசை நிறையத்தான் செய்கிறது.

எல்லாம் பொறுங்கள் இந்த இரண்டு மூன்று நாட்களுக்குத்தான். விரிந்த சிறகுகளை சுருட்டத்தான் வேண்டி வரும் வெகு விரைவில். ஏணியில் எடுத்து வைத்த அடிகளை மீட்கத்தான் வேண்டும் சிறு பொழுதில். ஆற்றின் கால் கொஞ்சம் இழுக்கத்தான் போகிறது நொடியில்.

போகட்டும் விடுங்கள். கனவுகள் எல்லாம் கலையத்தானே?!

வீடு ஒன்றே எங்கள் வாழ்க்கை. நான் என்றில்லை, எல்லா அம்மாக்களும் இதைத்தான் சொல்லுவார்கள், கேட்டுப்பாருங்கள்...

Dallas-ல் நேரம் அதிகாலை ஒரு மணி பன்னிரெண்டு நிமிடம். வீட்டில் New Jersey-ல் இரண்டு மணி பதின்மூன்று நிமிடம். 

கொஞ்சம் உங்களோடு பகிர்ந்ததில் சந்தோஷம்...

விரைவில் மீண்டும் உங்களோடு,

~NRIGirl

Algebra படுத்தும் பாடு...

1 comments

இரண்டு நாட்களுக்கு முன் என் இரண்டாவது மகள் தன் வீட்டுப்பாடத்தை (home work) நான் சரி பார்க்க என்னிடம் கொண்டு வந்தாள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அல்ஜீப்ரா. புது பாடம்.

பரவாயில்லை நன்றாக புரிந்திருக்கிறாளே என்று யோசித்து முடிக்கவே ஒரு தவறு கண்ணில் பட்டது.

y=mx+b then what is b? என்பது தான் கேள்வி.

அவளது பதில்: b=mx+y / mx என்று இருந்தது.

அந்த கணக்கை மீண்டும் செய்யச் சொன்னேன். மீண்டும் அதே பதில் தான் எழுதினாள். ஏதோ தன் steps-ஐ explain-ம் செய்தாள்.

சரி பிள்ளைக்கு புரியவில்லை என்று கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.

இல்லை. நீங்கள் சொல்வது தவறு. இது தான் சரி. இப்படித்தான் எங்கள் டீச்சர் சொல்லித் தந்தார்கள், என்று அடம் பிடித்தாள்.

நானும் விடுவதாய் இல்லை. என் விளக்கத்தை மீண்டும் எடுத்துரைத்தேன். b=y-mx என்று.

எங்கள் டீச்சர் சொல்லியிருக்கிறாங்க, multiplied numbers-ஐ equavation-க்கு அடுத்த side கொண்டு போணும்னா divide பண்ணனும், என்று நிறைய பேசினாள்.

இதில் வேறு, 'உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்கள் இந்தியாவில் படித்திருக்கிறீர்கள். இது அமெரிக்கா. இங்கு வேறு மாதிரி', என்று விளக்கம்.

எதுவும் பலிக்காத பட்சத்தில் நோட்டை தூக்கிக்கொண்டு பத்தாம் வகுப்பில் படிக்கும் தன் அக்காவிடம் கொண்டு சென்றாள்.

அக்கா என்ன படித்திருந்தாளோ என்னவோ, "ஆமாம் நீ சொல்வது தான் சரி" என்று சொல்லி விட்டாள்.

எனக்கு தலையே சுற்றி விட்டது, 'நீயுமா?' என்று.

அவளை விட்டு விட்டு இனி இவளுக்கு விளக்க ஆரம்பித்தேன். இவள் புரிந்து கொண்டால் அவளை விளக்கி விடுவாளே என்ற யோசனையில்.

சரி, 100 = 25+b என்று இருந்தால், what is b? என்றேன்.

அது 75 என்றார்கள் டான் என்று.

சரி, அப்படியானால், y=mx+b என்பதும் அதே ரீதியில் செய்ய வேண்டியது தானே என்றேன்.

Mommy, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? mx means m is multipled by x. It is not a single whole number என்றார்கள்.

சரி, அப்படியானால், 100= 5X5 +b என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போ பதில் என்ன? என்றேன். பதில் இல்லை.

இது அக்கா காரியை கொஞ்சம் யோசிக்க வைத்தது. "ம்ம்ம்... நீங்கள் சொல்வதும் சரி போல் தான் இருக்கிறது. Sharon சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது", என்றாள்.

Sorry Mommy, எனக்கு தலை ஓடமாட்டேங்கிறது. தூக்கம் வருகிறது" என்று தப்பிக்க பார்த்தாள்.

"இதை புரிந்து கொண்டு தூங்கினால் போதும்", என்று ஒரு பேப்பரும் pen-னுமாய் அவளை தொடர்ந்தேன்.

ம்ஹூம் கொஞ்சமும் பயன் இல்லை. குழம்பித்தான் போயிருந்தார்கள்.

திடீரென்று flash back-ல் கணக்கு பாடம் படிக்க அம்மாவை நான் படுத்திய பாடு வந்து போகவே சத்தமாய் சிரித்தே விட்டேன்.

அவளைத்தான் சிரிப்பதாக எண்ணிக்கொண்டு, கோபமாய் "உங்களை விட Daddy-க்கு கணக்கு நல்லா தெரியும்", என்று Daddy-யிடம் கொண்டு சென்றாள்.

மற்றவள் இது தான் சாக்கு என்று தப்பித்தாள்.

டாம் டூம் என்று கீழிருந்து பலவித சத்தங்கள் கேட்டன. Daddy-யாச்சு மகளாச்சு என்று விட்டு விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தாள் முகத்தை நீளமாக வைத்துக்கொண்டு.

'என்ன மக்களே ஆச்சு. புரிஞ்சிச்சா பிள்ளைக்கு' என்றேன்.

அவ்வளவு தான். அழுதே விட்டாள்.

"Daddy-யும் நீங்கள் சொல்வது தான் சரி என்கிறார்கள். நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன்" என்றாள்.

'I hate Algebra. I hate Math. I don't understand anything' என்று ஆரம்பித்தாள்.

சரி சரி இனியும் ஏதாவது சொல்லி விஷயம் விபரீதமாக மாறி விடக்கூடாதே என்ற பயத்தில், 'That's alright மக்களே. Go to bed now. Ask your teacher to explain it to you tomorrow' என்றேன்.

மறு நாள் மாலையில், 'So, what happened with that problem?' என்று வினவினேன்.

'Yeah. She explained it' என்றாள்.

'Wasn't I right?' என்றேன் ஆர்வமாய்.

'No! Daddy was!' என்றாள் அழுத்தமாய்.

கவலையே வேண்டாம். இவள் பிழைத்துக்கொள்வாள். என்று நிம்மதி பெருமூச்சொன்று தானாய் வந்தது.

மூத்தவள்? அவளும் பிழைத்துக்கொள்வாள். கவலையை விடுங்கள்.

சின்னவன்? அவனும் தான். கட்டாயமாய்.

~ NRIGirl

வட்டத்தின் மையம்

2 comments

வட்டம் வட்டமாய் நம் உலகம்... என்ற பதிவின் தொடர்ச்சி...

வட்டங்களின் விளிம்புகளில்
சுழல்கிறோம் சரி, வட்டத்தின் மையம் தான் என்ன? நானா? நீங்களா?

நல்ல கேள்வி. இரண்டும் இல்லை என்பது தான் சரியான பதில்.

நானும் இல்லை, நீங்களும் இல்லை, வட்டத்தின் மையத்தில்.

ஒவ்வொரு வட்டத்தின் மையமும் வட்ட உறுப்பினர்களின் பொதுவான
கருத்துக்களே. எந்த காரியத்தை அடிப்படையாக கொண்டு அந்த வட்டம் வரையப்பட்டதோ அந்த பொதுவான காரியமே, வட்டத்தின் மையம்.

கல்லூரி வட்டங்களின் மையம் கல்லூரி. சபை வட்டங்களின் மையம் இறைவன்.

கல்லூரி மேல் உள்ள பற்று தானே கல்லூரி நண்பர்களை கூடி வர செய்தது? கல்லூரி தானே அவர்கள் வட்டத்திற்கு காரணமாயிருந்தது? கல்லூரி காலங்கள் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த வட்டத்தின் உறுப்பினர்கள் கூடி வரும்போது அதிகம் பேசப்படுவது அந்த கல்லூரி நாட்களே. அவர்கள் உரையாடல்கள் பெரும்பாலும் கல்லூரியும் அதை சுற்றியுமே. கூட படித்தவர்களின் கதைகள், சேர்ந்து திரிந்த நாட்கள், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பற்றியே.

இப்படியாக தெரு முனைகளில் கூடும் நம் அண்டை வீட்டாரின் வட்டம் - அதின் மையம் அந்த தெரு தானே. குப்பை லாரி வந்ததா? நல்ல தண்ணீர் வருகிறதா? அடுத்த வீட்டில் புதிதாக குடிவந்திருப்பவர் எந்த ஊர் காரர்? என்று தெருவை சுற்றியே அவர்கள் பேச்சு.

ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒவ்வொரு மையம்.

ஒவ்வொரு வட்டத்திற்கும் வெவ்வேறு உறுப்பினர்கள்.

அனைத்து வட்டங்களிலும் ஒற்றை பொது அம்சம் நாம் ஒவ்வொருவரும் தான்.

அதனால் தான் நாம் வட்டங்களின் விளிம்புகளில் சுழல்கிறோம்.

நம்முடைய இந்த வட்டங்களே நம் முகவரி. நம் வட்டங்களே நம் அடையாளம். இந்த வட்டங்கள் தானே நம் சந்தோஷம்.

வட்டத்தில் இருந்து மீண்டு புள்ளியாய் நிற்பது கூடாத காரியம். அப்படியே கூடினாலும் நம் முகவரியை தொலைத்திருப்போம். அடையாளத்தை களைந்திருப்போம். சந்தோஷத்தில் குறைந்திருப்போம்.

அதனால் சுழல்வோம் சந்தோஷமாய். நம் வட்டங்களில் உற்சாகமாய். ஓட்டமும் நடையுமாய்.

அப்படியே நானும்,
~ NRIGirl