கண்ணாடி உன் முன்னாடி ஒரு கேள்வி

5 comments

கண்ணாடி உன் முன்னாடி ஒரு கேள்வி...
பலருக்கும் உன் மீது சிநேகம் ஏன்?
உன்னைக் காண தினம் தவறாதது ஏன்?

நாள்தோறும் உன்னைத்தான்
பார்த்தாலும் தான்
வேகத்தில் உன் சாயல் மறைவது ஏன்?

நெற்றியின் சுருக்கம் நரைகளின் பெருக்கம்
கண்களில் துழாவும் வயோதிப துவக்கம்
எதுவும் உன்னில் பொலிவது ஏன்?

கேசத்தின் கலைவு நேசத்தின் நிறைவு
பாசத்தின் பதிவு சோகத்தின் சுவடு
எதிலும் நீ மிளிர்வது ஏன்?

அன்பான நீ அறிவுள்ள நீ
கைகோர்த்து குலாவ மறுப்பது ஏன்?
பண்பான நீ பரிவுள்ள நீ
பாசமாய் பொழிய மறப்பது ஏன்?

நான் பார்க்க நீ பார்க்க
சாய்ந்தாட அசைந்தாட
கை ஓங்க மாறு கை ஓங்க
எப்போதும் எனை நீ
விமர்சனம் ஏன்?

கண் மூட நீ மறைய
கண் திறக்க நீ விழிக்க
சிறு பிள்ளை விளையாட்டும்
வேடிக்கையும் இன்னும் ஏன்?

அகத்தின் அழகை முகங்கள் காட்ட
முகத்தின் அழகை நீயும் பார்க்க
உன் முகம் மட்டும் நீ
மறைப்பது ஏன்?

ஒரு கேள்வி நான் கேட்க
மறுமொழி நீ மறுக்க
தொடரும் இந்த அம்புகளை
தவிர்க்காமல் வெறும் சிரிப்பு ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காலம் ஓடுகிற வேகம்...

0 comments

அன்புள்ள உங்களுக்கு, அன்புடன் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்.

நலம். நலம் அறிய ஆவல்.

காலம் ஓடுகிற வேகத்தைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது தான் இந்த வருடம் புது வருடமாகியிருந்தது. அதற்குள் ஐந்தாவது மாதமாகி அதிலும் பாதிக்குமேல் முடிந்து விட்டது. எதற்காக இத்தனை வேகம் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

Virginia Woolf-ன் To The Lighthouse புத்தகத்திலும் அதே வேகம் தான். கோடை விடுமுறைக்கு தங்கள் விடுமுறை வீட்டிற்கு வந்திருக்கிற குடும்பத்தில் எப்படியும் பிள்ளைகளை அவர்கள் கடலுக்கு மறுகரையில் இருக்கும் கடற்கரை விளக்குக்கு கூட்டிப் போக அம்மா Mrs. Ramsey பெரிதும் முயற்சிக்கிறார்கள்.

காற்று விட்ட பாடில்லை, மனதின் உள்ளேயும் வெளியேயும். ஆனாலும் அந்த அம்மா கடற்கரை விளக்கு பொறுப்பாளரின் மகனுக்கு வீட்டிலிருந்து என்ன கொண்டு போகலாம் என்று படங்கள், புத்தகங்கள் சில தேடி எடுத்து வைக்கிறார்கள். விடிய விடிய அமர்ந்து ராத்திரியும் பகலுமாக குளிருக்கு அவனுக்கு ஒரு stockings பின்னுகிறார்கள்.

கணவர் எப்போதும் எதிராகவே பேசுகிறார். நீங்கள் போக முடியாது. காற்று நிற்கப் போவதில்லை என்று. அவர்கள் வீட்டில் பல நண்பர்களும் தங்கி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அவர்களும் விடுமுறைக்காக வருகிற நண்பர்கள். அந்த வீட்டில் தங்கி அருகிலிருக்கும் கடலில் போய் விளையாடுவதும், மரநிழலில் அமர்ந்து சிலர் கவிதைகள் எழுதுவதும், சிலர் படங்கள் வரைவதுமாக விடுமுறையை கழிக்கிறார்கள்.

தன் கணவர் தன் ஆசைக்கு எதிர்ப்பாய் பேசினாலும் Mrs. Ramsey அவரை மதித்து நடந்து கொள்ளுகிறார்கள். பிள்ளைகளை அன்பாக கவணித்துக் கொள்கிறார்கள். கடைக்குட்டி ஜேம்ஸ்-க்கு எப்போதும் புத்தகங்களில் இருந்து படங்களை வெட்டுவது தான் பொழுதுபோக்கு. அவனை மடியில் அமர்த்தி ஜன்னலோரம் அமர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறார்கள். ஜேம்ஸ்-ம் அவனுக்கு முந்தின பிள்ளை Cam-ம் வளர்ந்துவிடாமல் இப்படியே சின்ன பிள்ளைகளாக இருந்து விட மாட்டார்களா என்று ஆசை படுகிறார்கள்.

வேலைக்காரர்களிடம் பொறுமையாய் இருக்கிறார்கள். விருந்தாளிகளை நன்றாக உபசரிக்கிறார்கள். அவர்கள் தான் வீட்டில் எல்லோரையும் இயக்கும் ஒரு இயந்திரம். பூச்செடிகள் வளர்ப்பதும், சமயம் கிடைக்கும்போது கடற்கரையில் ஒரு பாறையின் மேல் அமர்ந்து கடிதங்கள் எழுதுவதும், துணிகளை துவைத்து, காய வைத்து, மடித்து வைப்பதும், விருந்தாளிகள் ஒவ்வொருவரையும் உற்சாகப் படுத்துவதுமாக ஓய்வின்றி வேலை செய்கிறார்கள்.

இப்படியாக விடுமுறை கழிகிறது. கடற்கரைக்கு போகாமலே. அதற்கும் வருத்தப்பட்டதாக காட்டிக்கொள்ளவில்லை அவர்கள்.

அடுத்த காட்சியிலேயே பத்து வருடங்களாகி விடுகிறது. பத்து வருடம் கழித்து தான் மீண்டும் இந்த விடுமுறை வீட்டிற்கு வருகிறார்கள் அந்த குடும்பம். வீட்டை பார்த்துக்கொள்ளும் வயதான ஒரு பெண்மணி வீட்டை சுத்தம் செய்து, துணிமணிகள் மற்றும் புத்தகங்களை வெயிலில் காய வைத்து, கண்ணாடிகளை துடைத்து, வீட்டை ஒட்டிரை அடித்து, உதவிக்கு ஆட்களை அமர்த்தி, புல் பூண்டுகளை சுத்தம் செய்து ஆயத்தம் செய்கிறார்கள்.

அவர்களின் ஒரே வருத்தம், இந்த பத்து வருடங்களில் அந்த குடும்பம் இந்த வீட்டை எட்டிப் பார்க்கவில்லையே என்பது தான். பிள்ளைகளோ, தாயாரோ ஒரு கடிதம் கூட எழுத வில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் ஒரு கடிதம் வந்திருக்கிறது. "நாங்கள் வருகிறோம், வீட்டை ஆயத்தம் செய்யுங்கள்" என்று ஒரு வரியில் எழுதியிருந்தார்கள்.

எப்படியும் குடும்பம் வருகிறது. Mrs. Ramsey வரவில்லை. இந்த பத்து வருடங்களில் அவர்கள் மரித்துவிடுகிறார்கள். பழைய மாதிரி உற்சாகம் பிள்ளைகளிடமோ, வந்திருக்கிற ஒரு சில பழைய நண்பர்களிடமோ இல்லை. Mr. Ramsey-யிடமும் தளர்ச்சி தெரிகிறது. ஜேம்ஸ்-ம், Cam-ம் வளர்ந்துவிட்டார்கள். 16, 17 வயதாகிறது அவர்களுக்கு.

Mr. Ramsey எப்படியும் இந்த இரு பிள்ளைகளை-யும் Mrs. Ramsey ஆசை பட்டபடி கடற்கரை விளக்குக்கு கூட்டிப்போக விரும்புகிறார். பிள்ளைகளிடம் ஒரு உற்சாகமும் இல்லை. அப்பா என்கிற அன்பும் இல்லை. ஆனால் எதிர்த்து பேசுகிற நிலையிலும் இல்லை. கொஞ்சம் சாப்பாடும் கைகளில் எடுத்துக்கொண்டு அப்பா பின் செல்கிறார்கள்.

படகில் கடலில் செல்ல வேண்டும். கடற்கரை விளக்கு பொறுப்பாளரின் மகன் வந்திருக்கிறான் படகில் கூட்டிச்செல்ல. ஜேம்ஸ் தான் தண்டு வலிக்கிறான். ஜேம்ஸ்-ஓ Cam-ஓ ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை அப்பாவிடம். Mr. Ramsey புத்தகம் ஒன்றை வாசித்தவாறு வருகிறார்.

எப்படியும் கடற்கரை துறைமுகத்திற்கு வந்து சேருகிறார்கள். 'Well done James!' என்று தன் மகனை பாராட்டுகிறார். முதன் முறையாக தன் தந்தையின் பாராட்டை கேட்ட James நெஞ்சம் நெகிழ்கிறான். இப்படியாக கதை முடிகிறது...

இப்படித்தான் நம் கதைகளும் என்று நினைத்துக்கொண்டேன். இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்ய வேண்டும். தள்ளிப்போடுவதில் அர்த்தம் ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன். பாராட்டோ, பரிந்துரையோ, ஆறுதலோ, அரவணைப்போ, இன்றே கொடுப்பது நன்று.

காலம் ஓடுகிற வேகத்தில் நம் பிள்ளைகளை, துணைவரை, பெற்றோரை, உடன்பிறப்புகளை, நண்பர்களை ஆதாயம் செய்ய வேண்டுமானால் நாமும் கொஞ்சம் ஓடியே ஆக வேண்டும்.

கொஞ்சம் பிரயாசப்படத்தான் வேண்டும் - நம் அன்பை வெளிக்காட்ட. முடிந்தவரை நம் அன்பர்களின் ஆசைகளை நிறைவேற்றத்தான் வேண்டும் - நம் விருப்பங்களுக்கு மாறாக இருந்தாலும் கூட. மற்றபடி வேகமான இந்த வாழ்க்கையில் பிரயோஜனம் தான் என்ன? என்று உணர்ந்து கொண்டேன்.

உங்களின் ஆசைகள் நிறைவேற என்றும் என் வாழ்த்துக்கள். உங்களவர்களின் ஆசைகள் நிறைவேற மேலும் என் வாழ்த்துக்கள்.

சந்தோஷமாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் உங்களுக்கு சொல்லுகிறேன் (பரிசுத்த வேதாகமம்).

என்றும் அன்புடன்,

~NRIGirl

வெந்து நொந்து வீதியில்...

1 comments

அன்புள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அறிய.

எப்படி இருக்கிறீர்கள்?

அன்று New York-ல் நடந்து வரும்போது ஒரு homeless நபரை பார்த்தேன். கண்டுகொள்ளாமல் தாண்டி வந்தும் விட்டேன். ஐந்தாறு அடிகள் நடந்தபின் மனசு கேட்கவில்லை. அவசரமாய் திரும்பி விரைந்தேன்.

மதிய உணவுக்காக வைத்திருந்த பழங்களை அவருக்கு தரலாம் என்று நினைத்து, "குட் மார்னிங்! வுட் யூ லைக் ஸம் ஃப்ரூட்ஸ்?" என்று வினவிவேன். நிமிர்ந்து என் கைகளில் உள்ள பழங்களை பார்த்தார். ஒரு ஆப்பிளும், ஒரு வாழைப்பழமும் இருந்தது.

"மிக்க நன்றி. ஆப்பிள் வேண்டாம், என் பல் உடைந்திருக்கிறது. வாழைப்பழத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று நன்றியுடன் வாங்கிக்கொண்டார். அப்படியானால் என்னிடம் இன்னும் ஒரு வாழைப்பழம் இருக்கிறது. தயவுசெய்து அதையும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று நீட்டினேன். மிக சந்தோஷமாக பெற்றுக்கொண்டார்.

ஆச்சரியமாகத்தான் இருந்தது அவரின் நேர்மை.

நான் மிக காலையிலேயே அதாவது ஏழு மணிக்கெல்லாம் New York-க்கு வந்துவிடுவதால், பல homeless நபர்களை பார்க்க நேரிடும். தெரு ஓரங்களில் படுத்திருப்பார்கள். அப்பொழுதுதான் தூங்கி எழுந்துகொண்டிருப்பார்கள். தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும்.

என்னைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் பொதுவாக ஓட்டமும் நடையுமாக ஆஃபீஸ்-க்கு வந்து விடுவேன். என்றாவது அக்கம் பக்கம் பார்த்தால் மாட்டிக்கொள்வேன் மனதிடம். "ஏதாவது கொடுக்க இருக்கிறதா பார். கட்டாயம் கிடைக்கும். சில்லறை இல்லாமலா இருக்கும்" என்று பல ஏவுதல்கள் வரும். அவற்றை அசட்டை செய்து வந்து விட்டால் நாள் முழுதும் எண்ணம் அதில் தான் இருக்கும்.

அடிக்கடி கடந்து போகும் மற்றொரு நபர், ஒரு நாய் குட்டியை அணைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார். ஒரு முறை சில orange பழங்களை கொடுத்தேன். மலர்ந்த முகத்தோடு பெற்றுக்கொண்டார். சில முறை சில்லறைகளை கொடுத்திருக்கிறேன். "தாங்க்யூ, காட் ப்லெஸ் யூ" என்று ஆசீர்வதிப்பார்.

அன்று ஒரு நாள் வழக்கத்திற்கு முந்தின பஸ்-ஸில் வந்து விட்டேன். இவர் துள்ளிக்குதித்து நடந்து வந்துகொண்டிருந்தார், நாய் குட்டி பின் தொடர. அவர் என்னை கவணிக்கவில்லை. நானும் அவரை கவணித்ததாக காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் மனதில் ஒரு போராட்டம், "ஏமாந்து விட்டோமோ? ஏமாற்றி விட்டாரோ", என்று.

ஏதோ எப்போதோ என்னவோ பெரிதாய் உதவி விட்டோம் என்கிற பெருமிதத்தில், அவர் நடக்கக்கூடாது என்றும், சிரிக்கக்கூடாது என்றும் எதிர்பார்ப்பது எத்தனை அபத்தம்.

சந்தோஷப்படாமல் சங்கடப்படுகிறாயே. இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருந்தால் நீயே வைத்துக்கொள் உன் சில்லறையை, யாருக்கு வேண்டும் உன் பழங்கள். கண்ணை மூடிக்கொள். கையை பொத்திக்கொள். யாருக்கு நஷ்டம் அதனால். என்னை நானே கடிந்து கொண்டேன்.

வெந்து நொந்து வீதியில் வந்து நிற்கும் நபரிடம், "நீ நன்றாகத்தானே இருக்கிறாய். ஏதும் வேலை செய்து பிழைக்க வேண்டியது தானே", என்று வாதாடும் சிலரை பார்த்திருக்கிறேன். ஏன், எதற்கு, என்று நம்மிடம் அவர்கள் விளக்கியே ஆக வேண்டிய அவசியம் இல்லையே. முடிந்தால், மனம் இருந்தால் இரண்டு காசு கொடுத்து விட்டு அகல வேண்டிய ஒன்றே நியாயம்.

ஒரு நண்பர் கேட்டார். எப்படி தெரியும் அவர்கள் உண்மையில் தேவை உள்ளவர்கள் தான் என்று?

தேவை இல்லாவிட்டால் கேட்க மாட்டார்களே. வீடு இருந்தால் வீதிக்கு வர மாட்டார்களே.

எப்படி தெரியும் யாருக்கு கொடுக்கவேண்டும் என்று?

கேட்கிற எவருக்கும் கொடுக்க வேண்டியது தானே.

நான் ஏதோ பெரிதாய் ஒன்றை செய்துவிட்டதாய் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காக இதை எழுதவில்லை. தயங்கி நிற்கும் நண்பர்களை கொஞ்சம் தூண்டிவிடத்தான் எழுதுகிறேன்.

"கூப்பிடுகிற எவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். கேட்கிற எவரும் பெற்றுக்கொள்கிறார்கள்" என்று வேதம் சொல்லுகிறதே. அப்படியானால் நம்மை கூப்பிடுகிறவர்களுக்கு நாம் செவி மறுக்கலாமா? நம்மிடம் கை நீட்டும் நபருக்கு நாம் கை முடக்கலாமா?

கூடாது என்கிறது என் மனது...

என்றும் அன்புடன்,

~NRIGirl