திருநெல்வேலி மேம்பாலம்...

8 comments

அன்புள்ள நண்பர்கள் அறிய:

எல்லோரும் எப்படி இருக்கீங்க? கவிதை என்றும், காவியம் என்றும் கவணம் திரும்பியதால் கடிதங்கள் கொஞ்சம் தடை பட்டு தான் விட்டது. மன்னிக்கவும்.

New York-ல் இருந்து New Jersey-க்கு, Lincoln tunnel வழியாக வரும்போது, tunnel-லுக்குள் நுழைவதற்கு முன் இடது கை பக்கம் பார்த்தால் சரியாக திருநெல்வேலி மேம்பாலம் போல் தோன்றுகிறது - இன்று தான் கவணித்தேன்.

இது தான் சாக்கு என்று எண்ணமெல்லாம் திருநெல்வேலிக்கு சென்று விட்டது. அது தான் சாக்கு என்று நானும் இதோ இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியா என்று நினைப்பது திருநெல்வேலியைத் தான். அதுவே நான் அறிந்த இந்தியா. அழகான இந்தியா.

சொல்லுங்க, திருநெல்வேலி போயிருக்கீங்களா நீங்க? அது தான் எங்க ஊரு. அதற்காக சொல்லவில்லை, நானும் எத்தனையோ ஊருகளில் படித்திருக்கிறேன், வேலை பார்த்திருக்கிறேன், சுற்றுலா சென்றிருக்கிறேன். ஆனால் திருநெல்வேலி மாதிரி ஒரு ஊரையோ திருநெல்வேலி மக்கள் மாதிரி நல்ல மக்களையோ எங்கும் பார்த்ததில்லை.

திருநெல்வேலி மக்கள் பொதுவாக நல்லவர்கள். பிறரை மதிக்க தெரிந்தவர்கள். அண்ணன் என்றும், அண்ணாச்சி என்றும், அக்கா என்றும் தங்கச்சி என்றும் எளிதாய் யாரையும் உறவு கொண்டாடி விடுவார்கள். அன்பானவர்கள். அன்பை வெளிக்காட்ட தயங்காதவர்கள். வாங்க வாங்க வந்திட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்பார்கள்.

கடும் உழைப்பாளிகள். சென்ற காலங்களில் பனை ஏறுவதும், பயினி இறக்குவதும், கருப்பட்டி காய்ச்சுவதும், கடை வியாபாரம் செய்வதுமாக பனையும் பனையை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். (இன்று ஏனோ பனையையும் காணோம், ஏறுபவர்களையும் காணோம், அது வேறு விஷயம்.)

மீன் பிடிப்பதும், கருவாடு உணர்த்துவதும், அவற்றை விற்பதுமாக கடலையும், கடலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். நெல், பயறு, பருத்தி, என்று வயலையும் வயலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். மா, பலா, வாழை என்று இந்த முக்கனிகளை நம்பி, ஒரு கூட்டம் மக்கள்.

டீச்சர் என்றும், இன்ஜினியர் என்றும், வங்கி அதிகாரிகள் என்றும், அரசாங்க உத்தியோகத்தோர் ஒரு கூட்டம். "கடல் கடந்து வணிகம் செய்", என்ற முன்னோர் சொல்லை காப்பாற்ற வெளி நாடுகளில் வேலை பார்க்கும் ஒரு கூட்டம் மக்கள்.

இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பாய் அனுசரனையாய் ஆதரவாய் வாழும் இடம் திருநெல்வேலி.

இந்து மதத்தவர், கிறிஸ்தவர், முகமதியர் எல்லோரும் கூடி குழையும் குடும்பங்கள் தான் திருநெல்வேலி மக்கள். பெரும்பாலும் எல்லா குடும்பங்களும் அனைத்து விசேஷங்களையும் கொண்டாடுவார்கள். தீபாவாளி ஆகட்டும், முகரம் ஆகட்டும், கிறிஸ்மஸ் ஆகட்டும், எல்லோருக்கும் சந்தோஷம் தான். பொதுவாக யாவரும் வெடி வெடித்தும், மத்தாசு கொளுத்தியும், பலகாரங்கள் பரிந்தும், கொண்டாடுவார்கள்.

குறிப்பாய் கொண்டாடும் குடும்பங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களை சிறப்பு விருந்துக்கு அழைப்பார்கள். அழைத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள் விசேஷ பண்டம் பலகாரங்களை கொண்டு போய் குடுத்து ஒரு எட்டு பார்த்திட்டு வருவார்கள். சிறு பிள்ளைகளில் புத்தாடைகள் சிலு சிலுக்க அங்கும் இங்குமாக சைக்கிளில், மற்றும் ஸ்கூட்டரில் விரைந்த அனுபவங்கள் இனிமையானவை.

சமீபத்தில் சென்னையை சார்ந்த தோழி ஒருவர் கண்கள் அகல கேட்டார், "ஐயோ திருநெல்வேலி-யா? வீதிக்கு வீதி வெட்டு குத்தாமே? நீங்க நிறைய பார்த்திருப்பீங்களே?".

"என்ன சொல்றீங்க நீங்க? ரொம்ப அமைதியான ஊர் திருநெல்வேலி. வெட்டாவது குத்தாவது? எங்க கேட்டீங்க இந்த கட்டு கதையெல்லாம்?" என்றேன் கொஞ்சம் பதறலாய்.

இப்போ கண்களுடன், கைகளையும் உருட்டிய படி தோழி தொடர்ந்தார், "வேற எங்க? எல்லாம் சினிமால காட்டுறாங்களே!".

"தயவு செய்து சினிமால காட்டுறத வச்சு எங்க ஊர எட போடாதீங்க. வந்து பாருங்க", என்று பெருமிதமாய் சொல்லி வைத்தேன், வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று.

எப்படியும் திருநெல்வேலி-க்கு நிகர் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். கோயிலா, குளமா, வயலா, வரப்பா, மலையா, மேடா, கடலா, காடா எதற்கும் குறைவில்லை திருநெல்வேலி-யில். அல்வாவா, பனங்கிழங்கா, நொங்கா, பதநீரா, என்ன வேண்டும் உங்களுக்கு. எல்லாம் ருசிக்கும் திருநெல்வேலியில்.

அதனால் தான் சொல்றேன், திருநெல்வேலி-க்கு இது வரை வராதவங்க, கட்டாயமா வாங்க வாங்க வந்துட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க.

என்றும் அன்புடன்,

~NRIGirl

ஓடு மீன் ஓட...

2 comments


வயதில் முதிர்ந்த பெரியவர் அவர். மீன் பிடிப்பது அவர் தொழில். தொழில் என்று சொல்வதை விட பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அது ஒன்றே அவர் அறிந்தது. அதற்காகவே தான் பிறந்திருப்பதாக நினைப்பவர் அவர். 

எத்தனையோ பெரிய பெரிய மீன்களை பிடித்திருக்கிறார் தன் அனுபவத்தில். இப்போது வயதாகி விட்டது என்றாலும் தொழில் மீதுள்ள ஆசை கொஞ்சமும் குறையவில்லை.

தன் சிறு படகில் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதும், கிடைக்கிற மீன்களை அங்குள்ள கடைகளில் விற்பதும் அவர் வாழ்க்கை. வீடும் கடலுக்கு அருகில் தான்.

வீடு மொத்தத்தில் ஒரு அறை தான். ஓரமாக ஒரு அடுப்பு. அதில் ஆக்கி எத்தனையோ நாட்கள் இருக்கும். நேர் எதிர் முக்கில் துணிகள் தொங்க போட ஒரு கயிறு.

மனைவி இப்பொழுது இல்லை. மக்கள் எப்பொழுதும் இல்லை. மனைவியின் நினைவாக ஒரு புகைப்படம் மட்டும் உண்டு. வீட்டில் துணிகள் தொங்கும் கயிற்றில், தன் ஒரே ஒரு நல்ல சட்டை தொங்கும் பக்கம் சுவரில் அந்த புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார், மற்றபடி ஓயாமல் கண்ணில் படும் என்பதால்.

இளம் பிராயத்தில் ஒரு முறை ஆப்பிரிக்கா சென்றிருக்கிறார் கப்பலில். அங்கு சிங்கங்கள் கடற்கரையில் விளையாடுவதை கண்டு மகிழ்ந்திருக்கிறார். எப்போதும் உறக்கத்தில் அந்த கனவுகள் தான். அவ்வளவு ரசித்திருக்கிறார் அந்த சிங்கங்களை.

அதே ஊரில் வசிக்கும் ஒரு சிறுவன் அவருக்கு நண்பன். சிறுவனுக்கு அவருடன் மீன் பிடிக்க செல்வதில் கொள்ளை பிரியம். அவன் வீட்டார் எப்போதும் அவனை சிறுவனாகவே கருதும் போது, பெரியவர் மட்டும் அவனை சமமாய் கருதுவதும் உரையாடுவதும் அவனுக்கு ரொம்ப இஷ்டம்.

அடிக்கடி வந்து போவான். வரும்போது பெரியவருக்கு ஏதும் தின்பண்டங்களோ ஒரு கோப்பை காப்பியோ கொண்டு வருவான். பொதுவாக அங்குள்ள கடைக்காரர்கள் யாரும் இலவசமாகவே இந்த பண்டங்களை அல்லது காப்பியை கொடுத்து விடுவார்கள் அவன் மூலம்.

பழைய செய்தித்தாள் ஒன்றும் அவ்வப்போது கிடைக்கும். அதில் வரும் விளையாட்டு செய்திகளை பெரியவர் படித்து காட்டுவார். இருவருமாக கொஞ்ச நேரம் விளையாட்டுகள் பற்றியும் விளையாடுபவர்கள் பற்றியும் பேசிக்கொள்வார்கள். இரவு மங்கும் போது பையன் வீட்டிற்கு போவான்.

காலையில் அவனை எழுப்பி விடுவது பொதுவாக பெரியவர் தான். அவன் வீட்டார் மாதிரி இல்லாமல், அன்பாய், அமைதியாய் குரல் கொடுப்பார் பெரியவர். துள்ளி எழுந்து கொள்வான் சிறுவன். வீட்டார் மற்றும் நாட்டார் இன்னும் உறங்கி கொண்டிருக்கும் அதிகாலை நேரமே கடலுக்கு சென்று விடுவார்கள் இருவரும்.

ஆனால் இப்போது பெரியவருடன் போக சிறுவனுக்கு தடை. காரணம் கடந்த 84 நாட்களாக பெரியவருக்கு மீன் ஒன்றும் அகப்படவில்லை. "போதும், போதும், நீ அவருடன் சென்றது. அவர் ராசி இல்லை. இனி எங்களுடன் வந்தால் போதும்", கராராய் சொல்லி விட்டார் அப்பா. சிறுவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. மனது வலித்தது. பெரியவர் தான் சமாதானப்படுத்தினார். "அப்பா சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீ அவருடன் செல்வது தான் நல்லது", என்று.

சொல்லிவைத்தார் போல் 3 நாட்களாக தொடர்ந்து அப்பாவுக்கு நல்ல மீன்கள் வாய்த்தது. சிறுவனுக்கு பெரியவர் மீது அனுதாபம். இப்போது அவனை எழுப்பிவிடச் சொன்னதும் அவருக்கு தன்னால் முடிந்த சிறு உதவிகள் செய்யத்தான்.

பெரியவரின் தூண்டில்கள் மற்றும் சாதனங்களை கடற்கரை வரை தூக்கிச் செல்கிறான். எங்கேயோ ஓடி இரைக்கு நல்ல புது மீன் துண்டுகளை கொண்டு வந்து தருகிறான். 85 ஆவது நாள் நல்ல நாளாக அமையும், பெரிய மீன் கிடைக்கும் என்று வாழ்த்தி அனுப்புகிறான். படகு மறையும் வரை கரையில் நிற்கிறான்.

பெரியவர் கொஞ்சம் ஆழத்திற்கே சென்று விட்டார். விளையாடும் டால்ஃபின் மீன்களையும், பறக்கும் மீன்களையும் ரசிக்கிறார். வானம் தான் எத்தனை அழகு! கடல் தான் எத்தனை அதிசயம்! ஒவ்வொன்றாக ரசிக்கிறார். சிறுவன் தந்த இரை மீன்களை மூன்று தூண்டில்களில் மாட்டி, வெவ்வேறான ஆழங்களில் தூண்டில் மிதக்க விடுகிறார்.

ஒன்றோ இரண்டோ பறக்கும் மீன்கள் தானாய் வந்து படகில் விழுகிறது. அதை உணவுக்கு வைத்துக்கொள்கிறார். காலையில் இருந்து இதோ அந்தி மயங்கும் இந்த மாலை வரை தூண்டில்களில் ஒன்றும் படவில்லை. நல்ல ஒரு மீனுக்காக இறைவனிடம் கொஞ்சம் வேண்டிக்கொள்கிறார்.

இன்னும் இருட்டும் போது தூண்டில் ஒன்று அசைகிறது. ஆரம்ப சந்தேகங்கள் அகலும்படி கொஞ்சம் வேகமாகவே அசைகிறது. கட்டாயம் இது மீன் தான். என்ன மீன் என்பது இப்போது தெரிய வாய்ப்பில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தூண்டில் கயிறை இறுக்குகிறார், இழுக்கிறார், வெட்டி சொடுக்குகிறார். படகு திடீரென்று இழுபடுகிறது. போகிற போக்கில் விட்டு பிடிக்கிறார், அல்லது மீன் தூண்டிலில் இருந்து துள்ளிவிட வாய்ப்பிருக்கிறது.

சந்தேகமே இல்லை. இது ஒரு பெரிய மீன் தான். 84 நாட்கள் வெறுமையாய் திரும்பினதற்கு ஏற்ற பரிசு கிடைத்து விட்டது. சிறுவன் மிகவும் சந்தோஷப்படுவான். கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அதை விட்டு விடக்கூடாது. பிடித்த கயிறை இறுக்கமாக வைத்துக்கொள்கிறார். தோளும் கையும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பரவாயில்லை. பெரிய மீன் வேண்டுமானால் கொஞ்சம் சிரமம் எடுக்கத்தான் வேண்டும். எளிதில் அடைந்து விட முடியாது.

பெரியவர் மீனை இழுப்பதை விட வேகமாக மீன் படகை இழுக்கிறது. அவசரம் ஏதும் இல்லை பெரியவருக்கு. சூரியன் அடைகிறது. சந்திரனும், நட்சத்திரங்களும் ஆவலாய் வந்து இரவை அணைத்துக்கொள்கிறார்கள். பெயர் தெரிந்த நட்சத்திரங்களை கண்டு நெடு நாள் பழகிய நண்பர்கள் போல் சந்தோஷிக்கிறார் பெரியவர்.

கைகளும் தோளும் வலியில் கொஞ்சம் மரத்துப் போகிறது. மாற்றி மறு கையிலும் தோளிலுமாக போட்டுக்கொள்கிறார் கயிற்றை. ஒரு கை கொண்டே கிடைத்த சிறு மீன்களை தோலுரித்து பச்சையாக உண்கிறார். கொஞ்சம் உப்பும் ஒரு எலுமிச்சையும் மாத்திரம் இருந்தால் சுவை ஏற்றியிருக்கலாம்.

கொஞ்சமாவது அதைப் பற்றி யோசித்திருந்தால் கொஞ்சம் கடல் தண்ணீரை படகின் விளிம்பில் ஒரு முக்கில் காய வைத்திருந்திருக்கலாம். சூரியன் அதை உப்பாக மாற்றியிருக்கும். இனி ஒவ்வொரு முறையும் இதை மறக்காமல் செய்ய வேண்டும். ஒரு எலுமிச்சையும் கூட ஒரு குப்பி தண்ணீரும் கை வசம் கொண்டு வர வேண்டும். சிறுவன் இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். என்று பலவாறாக தனக்குத் தானே பேசிக்கொள்கிறார்.

அடுத்த நாளும் வந்து போகிறது. மீனின் பிடியை விட்ட பாடில்லை. நீயா, நானா, இரண்டில் ஒன்று பார்க்காமல் நான் இங்கிருந்து போவதாக இல்லை என்று மீனுடன் சவால் விடுகிறார். தூண்டில் கயிற்றில் பெரும் பங்கை சுருட்டிக்கொண்டுள்ளார். அப்படியானால் வெகு ஆழத்திலிருந்து மீன் மேலே வந்து விட்டது என்று தான் அர்த்தம். எப்படியும் அதற்கு பசி எடுக்கும் போது தானாகவே இந்த இழுபறியை முடித்து சமரசம் ஆகிவிடும் என்று காத்திருக்கிறார்.

மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இதற்குள் மீனை தன் சகோதரனாக பாவித்து பேசிக்கொள்கிறார். "வந்து விடு சகோதரனே, உன்னை நான் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். சிறுவனுக்கு காட்ட வேண்டும். வந்து விடு வேகம்", உரக்கவே பேசிக்கொள்கிறார்.

திடீரென்று மீன் குபீரென்று துள்ளிச் செல்கிறது. மிகப்பெரிய மீன். மார்லின். அழகான மீன். ஊதா நிறமும் வெள்ளியும் கலந்தாற்போல் ஒரு நிறம். கொள்ளை அழகு. சாமர்த்தியம். மெச்சிக்கொள்கிறார் "சகோதரனை". இன்னும் ஒரு முறை துள்ளிச் செல்கிறது மீன். தூண்டில் கயிறின் நீளம் இன்னும் குறைகிறது.

மூன்றாவது பொழுது சாயும் நேரத்தில், பெரியவரிடம் தோற்கிறது மீன். படகை விட நீளமான மீன். கை வலி,தோள் வலி,கால் வலி எல்லாம் மறந்து விடுகிறது பெரியவருக்கு. பொக்கிஷம் கிடைத்திருக்கிறது. பத்திரமாய் சிறுவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ஒன்றே அவர் தலையாய கடமை. சாமர்த்தியமாய் மீனை படகுடன் சேர்த்து கட்டிக்கொள்கிறார். அதின் நீண்ட வாயின் ஈட்டிகளை சேர்த்து கட்டுகிறார்.

மீன் கிடைத்த சந்தோஷத்தில், கொஞ்சம் கண் அயர்ந்து தூங்குகிறார். ஆப்பிரிக்க கடற்கரையும் அதில் விளையாடும் சிங்கங்களும் கனவில் வந்து போகிறது.

திடீரென்று படகில் ஒரு மோதல். பார்த்தால், சுறா மீன் ஒன்று கட்டி வைத்திருக்கிற மீனை கடித்து இழுக்கிறது. மீன் பிடிக்க தான் வைத்திருக்கிற ஆயுதங்களை வீசியும், எறிந்தும் அதை மேற்கொள்கிறார். கொஞ்ச நேரத்தில் மற்றோரு சுறா. இம்முறை ஆயுதமும் தொலைந்து விடுகிறது கடலில். இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னும் பல சுறா மீன்கள் - கூட்டமாய் படகை தொடருகிறது.

கடித்தும் இழுத்தும், கொத்தியும், குதறியும், பொக்கிஷத்தை நாசமாக்கி விடுகிறது சுறா கூட்டம். இனி போராடி பயன் இல்லை என்கிற பட்சத்தில், அமைதலாகிறார் பெரியவர். கூட ஒரு தூக்கம் போடுகிறார். மீண்டும் ஆப்பிரிக்க கடற்கரையும், அதில் விளையாடும் சிங்கங்களும் விரிகிறது சொப்பனத்தில். கூடவே போராடி கிடைத்த மீனும், அதை சீறி பிடுங்கிய சுறா மீன்களும் வருகிறது கனவில். கனவு தானோ என்று எழும்பினால், நிஜம் என்பது ஊர்ஜிதமாகிறது.

கட்டி வைத்த மீனை எட்டி பார்க்கக் கூட இஷ்டம் இல்லை. எவ்வளவு அழகான மீன். இப்படி உருக்குலைத்து விட்டார்களே சுறாக்கள். கரை தெரிகிறது. இருட்டி விட்டது. ஆள் நடமாட்டம் இல்லை. கரையில் ஒதுங்கிய உடன், படகை இழுத்து கரையில் கட்டி விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு சென்று விடுகிறார்.

காலையில் சிறுவன் வருகிறான். இவரை எழுப்பி தான் கொண்டு வந்திருக்கிற தின்பண்டங்களை கொடுக்கிறான். காப்பி எடுத்து வர மீண்டும் கடற்கரை கடைக்கு செல்கிறான். கூட்டம் கூடியிருக்கிறது படகை சுற்றி.

மீனின் முழு எலும்புக் கூடும் தெரிகிறது. தலை மட்டும் அப்படியே இருக்கிறது. ஒருவர் அளக்கிறார். 18 அடி நீளம் என்று சொல்லப்படுகிறது. சிறுவனுக்கு அதில் ஒன்றும் நாட்டம் இல்லை. கடந்த மூன்று நாட்களும் பெரியவருக்காக அழுதுகொண்டிருந்தான் கடற்கரையில். அவரைத் தேடி போன மக்கள் வெறுமையாய் திரும்பவே பயந்து தான் போனான். பெரியவர் திரும்பி வந்தது ஒன்றே அவனுக்கு போதும். ஆனாலும் இன்னும் ஏனோ அழுகை வருகிறது அவனுக்கு.

பெரியவர் அந்த மீன் தலையை அவருக்கு உணவு கொடுத்து விடும் கடைக்காரருக்கு கொடுத்துவிடச் சொல்கிறார். அந்த ஈட்டி-யை உனக்கு வேண்டுமானால் வைத்துக்கொள் என்று சொல்கிறார். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான் சிறியவன்.

இன்னும் தொடருகிறது இவர்கள் வாழ்க்கை...

(அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway 1951/52-ஆம் வருடங்களில் எழுதிய புலிட்சர் மற்றும் நோபல் பரிசுகளை வென்ற "Old Man and the Sea" என்ற புத்தகத்திற்கு என்னால் இயன்ற தமிழாக்கம்)

கண்ணாடியின் பதில்...

0 comments

முதன் முறையாக என் கடிதத்திற்கு பதில் வந்திருக்கிறது! முந்தைய post-ல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கண்ணாடியின் பதில் இதோ...

கண்ணாடி உன் முன்னாடி ஒரு கேள்வி...

பின்னாடி கேலி பேசாமல், முன்னாடி கேள்வி கேட்கின்றீர். நன்று! துவங்கட்டும் கேள்விக் கணை!

பலருக்கும் உன் மீது சிநேகம் ஏன்?

தன்னை சிநேகிப்பவரே… என்னை சிநேகிப்பவர்! தன்னையே நிந்திப்பவர் என்னையும் நிந்திக்கத்தான் செய்கிறார்! தன் மீது தான் எப்படியோ அப்படியே என் மீதும் அவர் ஆகிறார்!

உன்னை காண தினம் தவறாதது ஏன்?

காண்பவர் கண்கவர இரகசிய ஆசை உள்ளதாலும்… தன் முகத்தை தான் பார்த்திட தான் கொண்ட கண் உதவாததாலும், கண்ணாடி எனை நாடி தவறாமல் வருகிறார் போலும்! மொத்தத்தில் தன் மீது தனக்குள்ள காதலால், அல்லாது, அவர்க்கு என் மீதுள்ள காதலால் என்று எண்ணிடவேண்டாம்!

நாள்தோறும் உன்னைத்தான்
பார்த்தாலும் தான்
வேகத்தில் உன் சாயல் மறைவது ஏன்?


நேற்று என்பதில் பற்று கூடி, இன்றென்பதன் எதார்த்தம் மறந்து, நாளையென்பதில் கவலை கொள்ளும் மாக்களுக்கே என் சாயல் மறைவதாய் தோன்றுமோ?

நெற்றியின் சுருக்கம் நரைகளின் பெருக்கம்
கண்களில் துழாவும் வயோதிப துவக்கம்
எதுவும் உன்னில் பொலிவது ஏன்?


இன்று… இது… இப்படி இருப்பதுதான் இதற்குப் பெருமை என்பதை சூளுரைக்கத்தானோ என்னமோ?

கேசத்தின் கலைவு நேசத்தின் நிறைவு
பாசத்தின் பதிவு சோகத்தின் சுவடு
எதிலும் நீ மிளிர்வது ஏன்?


பாசத்தை பதிவு செய்கையில், நேசம் நிறைவுறும். காற்று கேசத்தை கலைப்பதுபோல, காலம் வாழ்வின் இன்பத்தை கலைக்கும்போது அங்கே சோகத்தின் சுவடுகள் தோன்றும். நிறைவும், குறைவும் வாழ்வின் பாகம் என்று உணர்த்தத்தான் இவைகளுக்கு மிளிர்கிறேன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டீர்களோ?

அன்பான நீ அறிவுள்ள நீ
கைகோர்த்து குலாவ மறுப்பது ஏன்?
பண்பான நீ பரிவுள்ள நீ
பாசமாய் பொழிய மறப்பது ஏன்?


அதீத நெருக்கம் சிலப்போது அன்பைக் குறைக்கும் என்றறிந்ததாலோ ஏனோ எட்ட நின்று சுட்டிக்காட்டுவதே என் இயல்பென்று ஆகிப்போனது!

நான் பார்க்க நீ பார்க்க
சாய்ந்தாட அசைந்தாட
கை ஓங்க மாறு கை ஓங்க
எப்போதும் எனை நீ
விமர்சனம் ஏன்?


இவை, என் விமர்சனமன்று! ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் சுய விமர்சகர் என் வழி எதிரொளிப்பதாய் இருக்கலாமன்றோ?

கண் மூட நீ மறைய
கண் திறக்க நீ விழிக்க
சிறு பிள்ளை விளையாட்டும்
வேடிக்கையும் இன்னும் ஏன்?


நிலைக்கண்ணாடி என் முழுப்பெயர். ஒரே நிலையில் இருப்பதே என் விதி. இந்நிலையில் என்னால் ஆன விளையாட்டும் வேடிக்கையும் இது மட்டுமே. இருந்திட்டுப் போகட்டுமே!


அகத்தின் அழகை முகங்கள் காட்ட
முகத்தின் அழகை நீயும் பார்க்க
உன் முகம் மட்டும் நீ
மறைப்பது ஏன்?


பன்முகம் காட்டும் பணி எனக்கு. இதில் என் முகம் காட்டி பிணி எதற்கு?

ஒரு கேள்வி நான் கேட்க
மறுமொழி நீ மறுக்க
தொடரும் இந்த அம்புகளை
தவிர்க்காமல் வெறும் சிரிப்பு ஏன்?


ஒன்றா கேட்டீர்கள்? ஒவ்வொன்றாகவன்றோ கேட்டீர்கள்? உங்கள் கேள்வி அம்புகளைத் தவிர்க்கவில்லை. ஏனெனில், அவை வம்பைச் சுமந்து வரவில்லை அன்பையே சுமந்து வந்தது. என்னை “பார்த்து” செல்லும் பல கோடிப்பேரில் என்னைக் “கேட்டுச்” செல்ல ஒருவரேனும் உண்டென்றரிந்து பொங்கிவரும் பெருமைச் சிரிப்பு. உங்கள் கேள்விகள் என் வாழ்வின் சிறப்பு!

இப்படிக்கு,
கண்ணாடி!
நன்றி: நண்பர் Bawa!