சும்மா ஒரு கடிதம்

4 comments

மணி இப்போது வியாழன் காலை ஏழு மணி நாற்பதொன்று நிமிடம்.

விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை...

வெளியே இன்னும் இருட்டாகத்தான் இருக்கிறது. இருட்டாக என்று சொல்வதைவிட இருட்டிக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.

கொஞ்சம் இருங்கள், ஒரு photo க்ளிக் செய்துவிட்டு வந்து தொடருகிறேன்...

சரி, விஷயத்திற்கு வருகிறேன்...

ம்.. வந்து. அதாவது... விஷயம் ஒன்றும் இல்லை, மன்னிக்கவும்.

சும்மா ஒரு கடிதம் தான் இது. வேலை ஏதும் இல்லாமல் சும்மா அமர்ந்திருப்பதினால் சரி சும்மா ஒரு கடிதமாவது எழுதுவோம் என்று ஆரம்பித்தத்தின் விளைவு...

வார இறுதியில் நடக்க இருக்கும் system upgrade காரணமாக வேலை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. இதுவே வீட்டில் இருந்திருந்தால் எத்தனையோ வேலை செய்திருக்கலாம்.

துவைத்த துணியை காய போட்டிருக்கலாம், காய்ந்த துணியை மடித்திருக்கலாம், மடித்த துணிகளை எடுத்து வைத்திருக்கலாம். ம்ஹூம்.

ஒரு வேளை துணி வேலை செய்ய இஷ்டம் இல்லை என்றால், நல்லதாய் ஒரு சாப்பாடு சமைத்திருக்கலாம். அதையும் விட்டால், கொஞ்சம் தோசை மாவு அரைத்திருக்கலாம், குறைந்த பட்சம் ஊறவாவது போட்டிருக்கலாம் போங்கள்.

ஒன்றும் இல்லாவிட்டால் கொஞ்சம் முறுக்காவது செய்திருக்கலாம். ம்ஹூம்.

சரி அடுப்படி போக இஷ்டம் இல்லை என்றால், ஒதுக்கி வைத்த பொருட்களை எடுத்து ஒரு படம் வரைய ஆரம்பித்திருக்கலாம்.

சரி விடுங்கள். முடியாததை பற்றி யோசித்து என்ன புண்ணியம்.

சென்ற வாரம் church-ல் இருந்து ஒரு women's conference சென்றிருந்தேன். 'What Not To Wear' என்ற தலைப்பில் அருமையாய் நடத்தியிருந்தார்கள். வேண்டா வெறுப்பாய் தான் சென்றிருந்தேன் - ஆனால் நல்ல வேளை miss பண்ணவில்லை என்று எண்ணும்படி இருந்தது.

வேதாகம விளக்கத்தோடு பெண்கள் எப்படி கோபம், பொறாமை, பெருமை, வைராக்கியம், பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற எண்ணங்களை உடுக்கக் கூடாது என்று பேசினார்கள். மிகவும் சிறப்பாக அமைந்தது.

அதில் Group Discussion-க்காக கொடுக்கப்பட்ட ஒரு கேள்வி, "What complicates your life?" (உங்கள் வாழ்க்கையை கடினமாக்குவது எது?) என்பது.

கணவர் என்றும், பிள்ளைகள் என்றும், பணம் என்றும், பதவி என்றும் பல்வேறு கருத்துக்களை பலரும் பரிந்து கொண்டார்கள். பரவாயில்லை அமெரிக்க பெண்களும் நம்மைப் போலவே தான் இருக்கிறார்கள் என்று வியந்து கொண்டேன்.

என் முறை வந்த போது நான் சொன்னேன், "வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது", என்று.

ஐயோ பாவம் என்பது போல் பலரும் பார்த்தார்கள். அது ஒரு சுகவீனம் என்பதாய் ஒருவர் கருத்து கூறினார். அதை நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை. ஒரு வீடு என்றால் அது கட்டாயம் சுத்தமாகத்தானே இருக்க வேண்டும் என்று கேட்டேன். இல்லை என்று மறுக்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆம் என்று சொல்லவும் யாராலும் முடியவில்லை.

ஒரு பாட்டிம்மா சொன்னார்கள், 'ஐயோ நானும் அப்படித்தான் இருந்தேன் ஒரு காலத்தில்", என்று. கடந்த கால வினையில் (past tense-ல்) சொன்னதால், மிகவும் ஆவலுடன், "அப்படியா? பிறகு எப்படி சரியானது?" என்று கேட்டேன். "வேற என்ன, வயதாகி விட்டது, செய்ய முடியவில்லை, அவ்வளவு தான்", என்றார்கள்.

இன்னொரு பாட்டிம்மா, "Life is hard, I tell you" என்று தொடர்ந்தார்கள். "Thank you for your encouraging words", என்று நான் சொல்ல சிரிப்பலை விரிந்து ஓய்ந்தது.

ஆக, என் பிரச்சனைக்கு முடிவில்லை என்பது மட்டும் உறுதி, வயதாவதை தவிர... ம்ஹும்.

வீடும், வீட்டை சுற்றியுமே உலவும் என் சிந்தனைகளை ஒருமைப்படுத்தி, ஓரிடத்தில் அமர வைத்து இன்று வேலை ஒன்றும் இல்லை, சும்மா இரு நாள் முழுதும் என்று சொன்னால் எப்படி இருக்கும், நீங்களே சொல்லுங்கள்.

மணி இப்போது வியாழன் காலை எட்டு மணி இருபத்தாறு நிமிடம்.

வீட்டிற்கு செல்ல மாலை நான்கு மணி ஆகும். வீட்டில் போய் சேர மாலை ஆறு மணி ஆகும். அதுவரை காத்திருக்கும் துணிகளும், தோசை மாவும். பாவம்.

அது வரை சும்மா இருக்கும்,
~NRIGirl

(நண்பர்கள் கவனத்திற்கு: நான் பாவம் என்று சொன்னது என்னைத்தான்; துணிகளை இல்லை...)

P.S: Sorry, மறந்தே போனது... க்ளிக் செய்த photo இதோ... எனக்கொரு சந்தேகம், மழையைத்தான் காட்டுகிறேனா, இல்லை மழையை காட்டுவதாகச் சொல்லி என் குடையை காட்டுகிறேனா என்று. எதுவாயிருந்தாலும் ரசிப்பீர்கள் தானே?



ரயில் பயணம்

5 comments

இன்று அலுவல் விஷயமாக Washington DC-க்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். New York Penn Station-ல் இருந்து Accela Express என்றொரு துரித ரயிலில். 2 மணி train-ஐ பிடித்தால் 4:55-க்கு Union Station-ல் சுகமாக வந்து இறங்கிவிடலாம்.

ரயில் பயணம் எனக்கு எப்பொழுதுமே மிகவும் பிடித்த ஒன்று. மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ரயில் பயணங்கள் தந்திருக்கின்றன. எத்தனை வருடங்களுக்கு முன்னர் கண்களில் விரிந்த காட்சிகள் இன்றும் மனத்திரைகளில் எத்தனை முறையோ வந்து போகின்றன.

என் அபிப்பிராயப்படி ரயில் ஒரு ஊரின் பின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. பேருந்திலோ, ஊர்திகளிலோ பயணம் செய்யும் போது ஊரின் முன் பக்கத்தை பார்க்கிறோம். அலங்கார விளக்குகளையும், அழகாக்கப்பட்ட கட்டிடங்களையும், திருத்தி அமைக்கப்பட்ட சாலைகளையும், செதுக்கப்பட்ட சிலைகளையும், நல்ல உடை உடுத்தின மனிதர்களையும் அதிகம் பார்க்கிறோம்.

ரயில் ஊரின் பின் வாசல் வழியாக நம்மை கூட்டிச்செல்கிறது. ஊரின் நாடி நரம்புகள், சாக்கடைகள், குப்பை மேடுகள், அசுத்தங்கள், புறம்பாக்கின கட்டிடங்கள், வெறுமையான வெளிகள், கூலி வேலை தொழிலாளர்கள் என்று ஒரு ஊரின் அடுத்த பக்கத்தை நமக்கு காட்டுகிறது.

நகர எல்லையை விட்டு தாண்டும்போது இதமான இயற்கை வளத்தை விவரிக்கிறது. அற்புதமான ஆறுகளும், சோலைகளும், விரிந்து கிடக்கும் வயல்களுமாய் ஒரு புதிய கதையை சொல்கிறது.

ரயிலின் நிரந்தரமான ஆட்டமும், அதனால் கொஞ்சம் அசைந்துகொண்டே வரும் பயணிகளையும் மணிக்கணக்கில் ரசிக்கலாம். மனிதர்களில் தான் எத்தனை விதம். ஒவ்வொருவரும் தான் எத்தனை வித்தியாசம். ஒரே இனம். பல விதம். அதிசயம் தான்.

நான் அவசரத்தில் ஒரு புத்தகமோ, பத்திரிக்கையோ கொண்டு வராமல் ஏறி விட்டேன். கொஞ்ச நேரத்தில் இனி  என்ன செய்யலாம் என்ற எண்ணம் வரவே, சரி Cafe Car-க்கு ஒரு நடை சென்று வருவோம் என்று கிளம்பினேன். ஒரு கருப்பு காப்பியும், ஒரு pocket m&m-ம் வாங்கி வந்தேன்.

ஒரு car முழுவதும் முக்கியமான ஆட்கள் போல பளிச்சென்று வெள்ளை சட்டையும், navy (ஊதா) கோட்டும் சூட்டுமாக ஒரு கூட்டம் பயணிகள். இங்குள்ள அரசியல்வாதிகளாயிருக்கும் என்று நினைத்து கொண்டேன். ஏனோ பெருமையாக இருந்தது - ஒரே ரயிலில் பயணிப்பதாலோ என்னவோ.

முடிந்த வரை கண்களை அலசி ஆராய்ந்தும் பெயருக்கு கூட ஒரு இந்திய நாட்டவரை பார்க்கவில்லை. அதனால் தானோ என்னவோ திடீரென்று தனியாக பயணம் செய்வது போல் ஒரு எண்ணம் வரவே, சரி கொஞ்சம் உங்களோடு பகிரலாமே என்று எழுதத்தொடங்கி விட்டேன். 

எப்படி இருக்கிறீர்கள்? நானும் நல்ல சுகம்.

இங்கு அமெரிக்காவில் இலைஉதிர் காலம் ஆரம்பமாகியிருக்கிறது. குளிரும், மழையுமாக வெகு விரைவில் வரவிருக்கும் குளிர்காலத்திற்கு நம்மை தயாராக்கிக்கொண்டிருக்கிறது. இன்று அதிசயமாய் இதமான வெப்பநிலை காணப்பட்டது. நேற்று நல்ல மழை. அதற்கு முந்தின நாள் நல்ல குளிர். இனி நாளை மழை. என்று அப்படியும் இப்படியுமாக நம்மை குழப்பி கடைசியில் கடுங்குளிரில் கொண்டு வந்து விடும். 

ஒவ்வொரு காலத்திலும் குடும்பமாய் செயல்பட பல வேடிக்கைகள் உண்டு. இலைஉதிர் காலத்தில் பொதுவாக மக்கள் Apple Picking என்று போய் வருவார்கள் குடும்பம் குடும்பமாய். மரங்களில் இலைகள் நிறம் மாறுவதை கண்டு வருவார்கள் பலரும். Pumpkin picking என்றும் அதை carving என்றும் ஒரு பொழுதுபோக்கு.  

விரைவில் Trick-or-treat என்று ஒரு பண்டிகை. சிறு பிள்ளைகள் மாறு வேடங்கள் அணிந்து வீடு வீடாய் சென்று, "Trick or Treat!" என்று சவால் விடுவார்கள். அனைத்து வீடுகளிலும் இப்படி வரும் பிள்ளைகளுக்காக மிட்டாய்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.

November மாதம் தொடங்கவும் Thanksgiving பண்டிகைக்காய் தயாராவார்கள். வீடுகளை அலங்கரிப்பதும், வான் கோழி ஆர்டர் செய்வதும், விருந்து பற்றி ஆலோசிப்பதும், பயண டிக்கெட்டுகளை வாங்குவதுமாக busy-யாகி விடுவார்கள்.

Thanksgiving முடிந்த வாரமே Christmas-க்கு தயாராவார்கள். இப்படி அமெரிக்காவில் மக்கள் நன்றாகவே வாழ்க்கையை அநுபவிக்கிறார்கள். 
ஆரம்பத்தில் அதை விமர்சித்த நாங்களே இன்று அவர்களில் ஒன்றாகவே ஆகிவிட்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஒருவர் தீபாவளி எப்போது என்று கேட்டார். அதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

இன்னொருவர், தீபாவளி எதற்காக கொண்டாடுகிறார்கள் என்று கேட்டார். சிறு பிள்ளைகளில் பள்ளிகளில் படித்த நரகாசுரன் கதையை எடுத்துரைத்தேன். அப்படித்தானே என்று ஒரு வட இந்திய நண்பரை கேட்க, அவர் அந்த கதையை தான் கேட்டதேயில்லை என்றும் ராமர் அயோத்திக்கு வந்தபோது மக்கள் தீபங்களை ஏற்றி வரவேற்றதாகவும் சொல்லி பெரிதும் குழப்பிவிட்டார்.

தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு வைத்தேன். கொஞ்சம் விளக்கினால் பிரயோஜனமாயிருக்கும் - கேட்பவர்களுக்கு பதில் சொல்ல. தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சரி, ரயில் இப்போது Baltimore தாண்டி சென்று கொண்டிருக்கிறது. விரையில் DC வந்து விடும். நீங்களும் கொஞ்ச தூரம் கூட வந்தது நன்றாக இருந்தது. நன்றி.

பயணம் தொடரும்,

~NRIGirl