மேலே.மேகத்தில். உயரத்தில். உச்சியில்.

4 comments

இந்த கட்டுரையில் வரும் நிகழ்வுகள் கட்டுக் கதையும் இல்லை, துளி கற்பனையும் இல்லை. அப்ப வேற என்ன? நிஜமா? இல்லவே இல்லை.

இது ஒரு சொப்பனம்.

எல்லாம் ஆயிற்று. நொடி நேரத்தில், கண பொழுதில். ஏசப்பா வந்துட்டாங்க போல! ஜிவ் - என்று எடுத்துக்கொள்ளப்படுகிறேன். ரொம்ப சந்தோஷம். ஏசப்பா வந்துட்டாங்க, ஏசப்பா வந்துட்டாங்க என்று ஒரே சந்தோஷம். பக்கத்தில் பார்க்கிறேன் கணவர், பிள்ளைகள் உடன் இருக்கிறார்களா என்று. அவர்களை காணவில்லை. ஐயோ, அவர்கள் எங்கே, நான் மட்டும் தனியாக எங்கே என்ற நினைப்பு சின்னதாய் வந்து போகிறது.

மேலே எழும்ப எழும்ப உற்சாகம், சந்தோஷம். மேலே போக போக பூமி உருண்டையின் விளிம்பு தெரிகிறது. இன்னும் பலரும் இப்படி மேலாக வருவதும் தெரிகிறது.

மேலே.மேகத்தில். உயரத்தில். உச்சியில். மேகங்களுக்கு நடுவில். வரிசை வரிசையாக ஆட்கள் நிற்கிறார்கள். நானும் போய் ஒரு வரிசையில் நிற்கிறேன்.

நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நிறைய பேர் துக்கமாக நிற்கிறார்கள். அனேகர் ஒரு ஓரமாக படுத்துக்கிடக்கிறார்கள். பெரும்பாலானோர் வெள்ளை உடைகள் அணிந்திருக்கிறார்கள். வேறு நிறங்களிலும் வந்திருக்கிறார்கள். நான் என்ன அணிந்திருக்கிறேன் என்பது தெரியவில்லை.

படுத்துக்கிடப்பவர்களை ஒரு நோட்டும் கையுமாக சிலர் சென்று கவனிக்கிறார்கள். ஏதோ எழுதிக்கொள்கிறார்கள் புத்தகத்தில். படுத்துக்கிடப்பவர்கள் அநேகமாக கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படுகிறார்கள். வரிசையில் நிற்கும் யாரோ சொல்கிறார்கள், இவர்கள் சுகம் இல்லாதவர்கள், அதனால் தான் அவர்களை படுக்க வைத்திருக்கிறார்கள் என்று.

எதுவும் எனக்கு கவலை இல்லை. மேகமூட்டமா, புகையா என்பது தெரியவில்லை, மொத்தமாய் ஒரு அமைதி நிலவுகிறது.

பல இடங்களில் இருந்தும் பல வரிசைகள் வந்து ஓரிடத்தில் சேர்கிறது. வரிசைகள் வந்து சேரும் இடத்தில் ஒரு நபர் நிற்கிறார். அவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் இருக்கிறது. பெரிய இராணுவ அதிகாரியாக காணப்படுகிறார். எல்லா இராணுவங்களுக்கும் தலைவர் போல இருக்கிறார். அவர் தான் பெரிய அதிகாரி. அவருக்கு மேல் அதிகாரி இல்லை. இராணுவ உடை தரித்திருக்கிறார்.

வரிசையில் வந்து நிற்கும் ஒவ்வொருவரும் அவரிடம் தான் போய் நிற்கிறார்கள். அவர் ஒவ்வொருவரிடமும் என்னதோ கேட்கிறார். ஒவ்வொருவரும் என்னதோ பதில் சொல்கிறார்கள். அவர்கள் சம்பாஷனை மற்றவர்களுக்கு கேட்கவில்லை. பேசுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. சிலர் கொஞ்சம் அழுவதாய் தெரிகிறது.

அவருக்கு பின்னால் என்னன்னவோ வேலைகள் செய்கிறார்கள் பலரும். மேகத்தில் பறக்கிறார்கள், பேசுகிறார்கள், படுத்துக்கிடப்பவர்களை விசாரிக்கிறார்கள்.

முக்கியமாக ஒரு பெரிய விருந்தோ விஷேஷமோ ஆயத்தப்படுத்துகிறார்கள் போல தெரிகிறது. கல்லியாண வீடுகளில் நடக்குமே அப்படி. யாவரும் வேலை செய்து கொண்டு, ஏதோ முக்கியமாய், என்னவோ செய்துகொண்டு. புகை எழும்பிக்கொண்டு, மனம் பரவி கொண்டு, அப்படி.

என் முறை வருகிறது.

பெரிய அதிகாரியின் முன்பு போய் நிற்கிறேன். ரொம்பவே பெரிய அதிகாரி. சிரிக்க ஒன்னும் செய்யவில்லை. கொஞ்சம் கடினமாகத்தான் முகத்தை வைத்திருக்கிறார். தன் கையில் உள்ள நோட்டில் கேள்விக்குறியோடு ஏதோ எழுதிக்கொள்கிறார்.

எனக்கு திடீரென்று தெரிந்து விடுகிறது. இது ஏசப்பா!!

ஏசப்பா! நீங்க ஏசப்பா தானே?! என்று கேட்கிறேன். பதில் ஒன்றும் இல்லை. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஐயோ, நீங்க ஏசப்பா தான். Can I please hug you (உங்களை கொஞ்சம் கட்டி பிடித்துக்கொள்ளட்டுமா)? என்று கேட்கிறேன். ஏசப்பா பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நான் கட்டி பிடித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை. இறுக்கமாய்.

கண்ணீர் தானாய் வருகிறது. ஆனந்த கண்ணீர். "ஏசப்பா! நான் எப்போ உங்களை நேரில் பார்க்கும்போதும் first கட்டி பிடித்துக்கொள்வேன் என்று எப்பமும் நினைப்பேன். அதான் கட்டி பிடித்து கொள்கிறேன்.", என்று விளக்கம் வேறு தருகிறேன். ஏசப்பா! ஏசப்பா! என்று சந்தோஷத்தில் அழுகிறேன். ரொம்ப சந்தோஷம் வந்தால் அது அழுகையில் தான் போய் நிற்கும் போல.

இதில் ஒன்றுக்கும் ஏசப்பா பதில் சொல்லவில்லை. என்னை கட்டி அணைக்கவுமில்லை. சிரிக்கக்கூட இல்லை. மீண்டும் தன் கையில் உள்ள நோட்டில் கேள்விக்குறியுடன் ஏதோ எழுதுவதும், கிறுக்குவதுமாக இருக்காங்க.

திடீரென்று என்னை வரிசையின் ஓரமாக தனியாக கூட்டி சென்று, "Something went wrong somewhere. It is not your time yet" என்று சொன்னாங்க. நான் சொன்னேன், "That's arlight! I am okay. I am happy here" என்று. உடனே என் வலது கையை மணிக்கட்டு பகுதியில் பிடித்துக்கொண்டு வேகமா நடந்தாங்க, "Just follow me" என்றும் சொன்னாங்க.

நீளமா படிகள் இருந்தது கீழே போக. படி ஆரம்பத்தில் என் கையை பிடிச்சிருந்தாங்க. ரெண்டு அடி எடுத்து வைத்ததும் கொஞ்சம் முன்னால் நடந்தாங்க. இன்னும் ஒரு திருப்பத்தில் இன்னும் வேகமா முன்னே நடந்தாங்க. அப்புறம் வேகம் வேகமா கொஞ்சம் ரொம்பவே முன்னால் போயிட்டாங்க. அதுக்கு பிறகு நான் அவங்களை பார்க்கவில்லை.

நிறைய படிகள். அதில் ஒரு சிறகு பறப்பது மாதிரி பறந்து, விரிந்து, ஆடி, அசைந்து, சிரமமே இல்லாமல் இன்னும் புரண்டு, பறந்து பறந்து கீழே கீழே இன்னும் கீழே... கடைசியாக பூமியில் வந்து ஒரு தெரு ஓரத்தில் கண்ணை திறக்கிறேன். பணி பெய்து கொண்டிருக்கிறது...

இத்துடன் தூக்கம் கலைந்து நானும் முழிக்கிறேன்.

கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. நிஜமா? இல்லவே இல்லை. இது ஒரு சொப்பனம்.

ஒரு வேதாகம வசனம் நினைவில் வருகிறது: For we must all appear before the judgment seat of Christ, so that each one may receive what is due for what he has done in the body, whether good or evil. 2 Corinthians 5:10

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். II கொரிந்தியர் 5:10


~NRIGirl