வண்டி எண் 2015

2 comments

நேற்று தான் கூவிக்கூவி கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்: வண்டி எண் 2015 முதலாம் ப்ளாட்ஃபாரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்று.

சரி வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சம் அசால்ட்டாய் இருந்து விட்டேன்.

இன்று இதோ கூவிக்கொண்டிருக்கிறார்கள்: வண்டி எண் 2015 முதலாம் ப்ளாட்ஃபாரத்தில் இருந்து கிளம்பி கொண்டிருக்கிறது என்று!!

என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? இப்போ தானே வந்தது, அதற்குள் கிளம்பி விட்டதே என்று அக்கம்பக்கம் வினவினேன்.

என்னம்மா பேசுகிறாய்? வண்டி வந்து இன்றோடு 31 நாட்கள் ஆகிறது! எந்த உலகில் இருக்கிறாய் என்றும், இத்தனை நாளாய் எங்கே வாய் பார்த்துக்கொண்டிருந்தாய் என்றும், இப்படி பட்டதுகளுக்கு இது தேவை தான், அப்படியாவது புத்தி வருகிறதா பார்ப்போம் என்றும் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

'நட் கேஸ்!' என்றும் வாலிபர் கூட்டம் ஒன்று தலையில் அடித்துக்கொண்டது.

நம்மை அடிக்காத குறை தான் போங்கள்!

பூக்கார அம்மா மட்டும் பாவமாய் பார்த்தார்கள்...

தண்ணீர் பையன் தான் சொன்னான் - அக்கா நீங்கள் கொஞ்சம் எட்டி நடந்தால் வண்டியை பிடித்து விடலாம் என்று...

அரக்கப்பரக்க போவதற்குள் வண்டி கொஞ்சம் வேகமாக இழுக்கவே ஒடித்தான் பிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டவாறே வெளியில் பார்த்தால் நான் கொண்டு வந்திருந்த சுமைகள் எல்லாம் ப்ளாட்ஃபாரத்தில் தேமே என்று உட்கார்ந்திருக்கிறது!!

அட அட அட இனி என்ன செய்யலாம் என்று யோசித்துப்பார்த்ததில் வேறு வழியே இல்லை, உங்களிடமே உண்மையை ஒத்துக்கொள்ளலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பதிவு.

நான் பிரயாணப்பட்டதே கொஞ்சம் உங்களோடு பகிரத்தானே!

மண்ணித்து நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!

எல்லோரும் சுகம் தானே?

நாங்களும் தான்.

ஆரம்ப குசலங்கள் அமறவே,

சரி அப்படி என்ன தான் கொண்டு வந்தீர்கள் என்று பலரும் மனதில் வினவி நிற்கிறது நன்றாக புரிகிறது. சொல்கிறேன்.

பெரிதாய் ஒன்றுமில்லை சுமைகள் தான்.

ஐயோ புரிகிறது. சுமைகள் தான் என்று. அந்த சுமைகளில் என்ன என்று தானே கேட்கிறோம்? என்று கொஞ்சம் எகிறுகிறவர்களுக்காக சொல்லுகிறேன்.

பொறுங்கள். சுமைகள் என்று நான் சொன்னது அந்த தலைப்பில் நான் எழுதவிருந்த பதிவை சொல்லுகிறேன்.

ஓ! அப்படியா? சரி சரி வேறு என்ன கொண்டு வந்தீர்கள்?

ஆகாயத்தில் கோட்டை என்றொரு பதிவு.

அப்புறம்?

சொந்தமான பந்தங்கள் என்றொன்று.

அடுத்து என்ன? பந்தமான சொந்தங்கள் என்றா?

அட சரியாக சொன்னீர்கள்! அதெப்படி என்னை மாதிரியே யோசிக்கிறீர்கள்?!

நெடு நாள் பழகிய நண்பர்கள் அல்லவா, இருக்காதா பின்னே!

சரி வேற என்ன இருந்தது? விட்டு வந்த உங்கள் சுமைகளில்?

மிக முக்கியமாய் கொஞ்சம் ஃபோடோக்கள் கொண்டு வந்திருந்தேன் உங்களிடம் காட்ட - சமீபத்தில் நாங்கள் குடும்பமாய் சென்று வந்த நெடுந்தூர பயணம் பற்றி...

மற்றப்படி விசேஷமாய் ஒன்றும் இல்லை. திண் பண்டமோ, புத்தாடையோ, அப்படி என்ன தான் கொண்டு வர முடிகிறது அவசரமான இந்த பயணத்தில். நலம் நலம் அறிய ஆவல் என்று விசாரிப்பது ஒன்றைத் தவிர?!

வெகு விரைவில் வருகிறேன், விட்டு வந்த சுமைகளோடு...

அது வரை அன்புடன்,

~NRIGirl

என்ன அது வரை மட்டும் தானா அன்பு?

பரவாயில்லை, உஷாராகத்தான் இருக்கிறீர்கள்!

என்றும் அன்புடன்,

~NRIGirl

அட, சொல்ல மறந்தே விட்டேனே!

வண்டி எண் 2015-ஐ அருமையாய் பொறுமையாய் பிடித்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிரயாணம் இனிதே அமைய இனிய நல் வாழ்த்துக்கள்! உங்கள் சுமைகள் சுகமாய் மாற மேலும் என் வாழ்த்துக்கள்!!