உயிரே...

2 comments

என் உயிர் தோழி அவள்

நேற்றோ இன்றோ இல்லை
இருபத்திரண்டு வருடங்கள் ஆகிறது
உயிர் உறவில் கலந்து

பார்த்தோம் மகிழ்ந்தோம்
பேசினோம் சிரித்தோம்
என்பதை விட

பார்க்காமலும் மகிழ்ந்தோம்
பேசாமலும் சிரித்தோம்
என்பதே சரி

நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
சில சமயம் மாதங்களும் வருடங்களான
போதிலும்

விட்ட கதை தொடர்ந்தது
நாங்கள் விட்டு வைத்த இடத்தில் இருந்து

உறவில் உரசல்கள் வந்து தான் போனது
ஆனால் உரசலால் விரிசல் ஏதும்
வராமல் உயிர் தடுத்தது.

உயிரும் உறவும் ஒன்றாகி போனபின்
வார்த்தை என்ன சாட்டை என்ன
உரைக்கவில்ல எதுவுமே…

இன்று இதோ,

கொடிய நோய் தாக்கி செயலிழந்து சோர்வுற்று
உறவின் இறுதியில் வந்து நிற்கும்
உயிரே - என் உயிரே
விடை கொடுக்க மறுக்கிறேன்
முற்றிலுமாய் மறுக்கிறேன்.

இந்த நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
மாதங்களும் வருடங்களான
பின்னும்

நாம் விட்ட கதை விட்ட இடம்
நிச்சயமாய் மீண்டும் தொடரும்

விரிசல் இல்லா உரசல்கள்
அவ்வப்போது வந்து போகும்.

நம் உறவும் உயிரும் தொடர்ந்து இன்னும் உறவாடும்...

அது வரையில்,
விடை கொடுக்க மறுக்கிறேன்
முற்றிலுமாய் மறுக்கிறேன்.

நடுத்தர வயதின் நெருக்கடி

2 comments

அன்பான உங்களுக்கு, அன்புடன் நான் NRIGirl எழுதுகிறேன்...

என்ன ரொம்ப நாளா ஆளையே காணோமே-னு கேட்காத ஆளில்லை என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மையில் கேட்பது, கேட்டுக்கொண்டே இருப்பது ஒற்றை நண்பர் - சில்வண்டு - மட்டுமே.

அதற்காகவே, அவருக்காக மட்டுமே எழுதுகிறேன் இந்த பதிவை... அதனால் அடித்தல் திருத்தலு ட ன் முதல் வரியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிறேன் என் கடிதத்தை...


அன்பான சில்வண்டு அறிய, அன்புடன் நான் NRIGirl எழுதுகிறேன்...

நலம்? நானும் அதே.

வலை தளத்தின் நீண்ட நாள் இடைவெளிக்கு வருந்துகிறேன். குறிப்பான காரணங்கள் என்று சொல்லப்போனால் பல உண்டு. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், 'நடுத்தர வயதின் நெருக்கடி' (mid life crisis) என்று தான் சொல்வேன்.

நடுத்தர வயது கொஞ்சம் குழப்பித்தான்  போடுகிறது மனதை. நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் பழகிப்போனதால் தான் என்னவோ மனம் ஒரு குரங்காக அடம் பிடிக்கிறது. இது வேண்டவே வேண்டாம் என்றும், அது கட்டாயம் வேண்டும் என்றும் ஒற்றைக் காலில் நிற்கிறது. நான் இப்படித்தான். நீங்கள் எப்படியும் போங்கள் என்று எதிர்த்து நிற்கிறது துணிச்சலாய்.

இளமை கடந்து செல்லும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மனது, ஓய்வின்றி சுழழ்கிறது தொலைத்து விட்ட கனவுகளை தேடி. ஆகாயத்திலேயே கட்டிக்கொண்டிருந்த கோட்டைகளை அம்போ என்று அந்தரத்திலேயே விட்டு விட்டு, போதும் இனி, இது தான் வாழ்க்கை, கையில் வைத்துக்கொண்டு காற்றில் என்ன வேடிக்கை. இருப்பதை வைத்து என்ன செய்யலாம் பார் என்று சாடுகிறது மனது.

நினைவுகளிலும் பேச்சிலுமாக மட்டுமே வரைந்து வைத்திருந்த கனவுகளும், கற்பனைகளும் காற்றில் கரைய, செயலில் எதை செயல்படுத்த முடியும் பார் என்று எழுந்து நிற்கிறது மனது... ...

ஏய் ஏய் ஏய் என்ன இது, அடுக்கிக்கொண்டே போனால் எப்படி என்று நீங்கள் குழம்புவதானால், என் புலம்பலை நிறுத்தி விளக்குகிறேன் ஒரு உதாரணத்துடன்...

இத்தனையும் ஏன், நேரில் விஷயத்திற்கு வருகிறேனே...

சைக்கிள் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு.

சைக்கிளா? அதற்கும் மனதுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது சொல்கிறேன்.

சைக்கிள் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு. (மோட்டார் சைக்கிள் என்றால் அதையும் விட பிரியம்...)

அமெரிக்காவில் அடி எடுத்து வைத்த கையுடன், sorry காலுடன், நான் முதலில் விரும்பி என்னவரிடம் கேட்டது ஒரு சைக்கிள் வேண்டும் என்பது தான்.

எந்த விருப்பத்தையும் கொஞ்சம் ஆற அமர யோசித்தே முடிவு செய்யும் என்னவர் என் நச்சரிப்பு தாங்க முடியாமல் சைக்கிள் ஒன்றை வாங்கி வந்தார் (நான் கேட்டு ஆண்டுகள் பல கடந்து).

அதோடு தொல்லை தீர்ந்தது என்று தான் நினைத்தார். சைக்கிள் மட்டுமா கேட்டேன். கூட ஓட்ட நீங்களும் வேண்டும் என்றேன். 
இன்னொரு சைக்கிள் உங்களுக்கும்  வேண்டும் என்றேன். முடியவே முடியாது என்று நிமிர்ந்துவிட்டார்.

ச ச. இருசக்கர வாகனங்களுக்கும் நமக்கும் ஆகவே ஆகாது என்று, சிறு பிள்ளையில் சைக்கிள் ஓட்டி கீழே விழுந்த கதை ஒன்றை சொல்லி வைத்தார். ஏதோ விளையாட்டுக்குத்தான் சொல்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு முடிவோடு தான் இருந்தார் சைக்கிள் மீதுள்ள வெறுப்புடன்.

கெஞ்சியும் கொஞ்சியுமாக ஏதோ வீட்டை சுற்றி ரெண்டு ரவுண்டு ஓட்டியதோடு சரி என் சைக்கிள் பயணம். ஏதோ எனக்கு பாவம் பார்த்து அதே சைக்கிளில் அவர்களும் ரெண்டு ரவுண்டு வந்திருப்பார்கள் அவ்வளவு தான் அவர்கள் பயணம். ஒரே சைக்கிள் வைத்துக்கொண்டு ரெண்டு பேர் எப்படி ஓட்ட முடியும். அதனால் நாங்கள் 
தனித்தனியாகத்தான் ஓட்டி வைத்தோம்.

இதற்கிடையில் பிள்ளைகள் மூன்று பெற்று எடுத்தோம். எப்பொழுதெல்லாம் சைக்கிள் பேச்சை எடுத்தாலும், சின்ன பிள்ளைகளை வைத்துக்கொண்டு சைக்கிளா?, சாடினார் என்னவர். அமேரிக்க அம்மாக்கள் தங்கள் சிறு பிள்ளைகளை பொதிந்து வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதை காட்டினால், அது அவர்கள் பண்பாடு என்று வாதிட்டார். சோர்ந்து போன என்னை ஏதோ பாவம் பார்த்து, கோபம் தனித்து சமரசம் செய்தார். கொஞ்சம் பொறு. பிள்ளைகள் வளர்ந்து விடுவார்கள். குடும்பமாக நாம் எல்லோரும் சைக்கிள் ஓட்டுவோம் சரியா என்றார். சரி ஒன்றை சொல்லி வைத்தேன்.

காலம் கடந்தது. பிள்ளைகளுக்கு சைக்கிள் சொல்லி கொடுப்பதில் முன் நின்றேன். எல்லாம் பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது தெரியாமல் கணவரும் மூழ்கி நின்றார் இந்த முயற்சியில். இவ்வளவு தானே என்பதாய் மூன்று பிள்ளைகளும் வெகு இயல்பாய் கற்றுக்கொண்டார்கள் சைக்கிள் பயணம். ஆர்வம் ஆர்வமாய் குடும்ப பயணம் துவக்கினோம் எங்கள் சைக்கிள்களில். என் சைக்கிளில் என் கணவரும், தங்கள் சைக்கிள்களில் பிள்ளைகளும், நான் மட்டும் ஓட்டமும் நடையுமாய். 


இதற்கெல்லாம் வருந்துமா இந்த மனது? உற்சாகத்தில் துள்ளிக்குதித்தது.

ஒரு ரெண்டு எட்டு போயிருப்போம். முதல் ஏற்றத்திலேயே பிள்ளைகள் இறங்கினார்கள் சைக்கிள் விட்டு. நானும் நடக்கிறேன் அம்மா கூட என்று. அம்மாவுக்கு சைக்கிள் இல்லை அதனால் நடக்கிறேன். உங்களுக்கு இருக்கிறதே ஓட்டுங்கள் என்றேன்.

ம்ஹூம். நாங்களும் நடப்போம். சரி நடங்கள்; உங்கள் சைக்கிளை உருட்டிக்கொண்டே, என்றேன். கொஞ்ச தூரம் போயிருப்போம். உருட்ட கஷ்டமாக இருக்கிறது எங்களுக்கு. வேண்டுமானால் நீங்கள் உருட்டுங்கள் என்றார்கள்.

தேவை தான் எனக்கு. சின்னவன் சைக்கிளை அம்போ என்று தரையில் கிடத்தி விட்டு பெருசுகள் சைக்கிள் ரெண்டையும் ரெண்டு பக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தோம். நடக்க முயற்சித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

சைக்கிள் பெடல்கள் ரெண்டு பக்கம் இருந்தும் என் கால்களில் இடிக்க, நான் பிள்ளைகளை முறைக்க, சின்னவன் முன்னால் ஓட, பெரியவள் கோபித்துக்கொண்டு திரும்பி வீட்டுக்கு வந்த வழி ஓட, அடுத்தவள், இல்லை Daddy போன திசைக்கு தான் போனும் என்று அடம் பிடிக்க, அப்பப்பா, போதும் போதும் என்று ஆகி விட்டது இந்த பயணம் எனக்கு.

இதை எதுவும் அறியாமல் ஒற்றைக் கவலை இல்லாமல்  வெகு தூரம் முன் போய்க்கொண்டிருந்தார் என்னவர், தன் சிறு பிள்ளை  காயமும், சைக்கிள் சபதமும் மறந்து, உல்லாசமாய்...

ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை இந்த நிகழ்வு. இது ஒரு தொடர் கதையாகி விட்டிருந்தது, ஆண்டுகள் பல கடந்தும். ம்ஹூம்...


...

பதினேழு வருடம் ஓடி விட்டிருந்தது இப்படியாக. இது வரை ஒரு நாளாவது குடும்பமாய் ஒரு சவாரி சென்றது இல்லை நாங்கள் சைக்கிள்களில். வளர்ந்துவிட்ட பிள்ளைகள் எங்கள் சைக்கிளை தங்களதாய் ஆக்கி விட்டிருந்தார்கள். எப்படியும் எப்போதும் ஒரு சைக்கிள் குறைவு படத்தான் செய்கிறது. அது ஏனோ என்னவர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போய் விடுகிறது. 


இத்தனை நாள் பொறுத்து போன மனது இப்போது இறுகி விட்டிருக்கிறது. சபதம் ஒன்று ஓங்கி நிற்கிறது...

காற்றில் தொலைத்த கனவுகளை விரட்டி பிடிப்பேன். தூங்கி விட்ட சொப்பனங்களை அதட்டி விழிப்பேன். படுத்துக் கிடக்கும் பாசாங்குகளை துரத்தி அடிப்பேன்.

எனக்காய் எனக்கு மட்டுமாய் ஒரு சைக்கிள் தேடி பிடிப்பேன். நடை பயில்வேன். வீர நடை கொள்ளுவேன். மேடானாலும், காடானாலும், கடற்கரை தெருவானாலும், வீட்டின் வெறும் முற்றம் தானானாலும் சைக்கிள் ஆசை தீரும் வரை ஓட்டி மகிழ்வேன்.  உங்களை 
கெஞ்சிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இனி கொஞ்சமும் தாமதிக்க மாட்டேன்...

... என்று சபதம் ஒன்று ஓங்கி நிற்கிறது.

இது ஒரு உதாரணம். இப்படி எத்தனையோ. என்னென்னவோ. இதைத்தான் சொல்கிறேன் 'நடுத்தர வயதின் நெருக்கடி' என்று. குரங்கு மனதின் சேஷ்டைகள் என்று.

இந்த அடம்பிடிப்புகளுக்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் ஒதுங்கி விட்டிருக்கிறார் என்னவர். உனக்கு சைக்கிள் என்றா
ல் எனக்கு Volley Ball என்று தன் முழு ஆர்வத்தையும் பிள்ளைகளின் முழு கவனத்தையும் Volley Ball பக்கம் திருப்பி இருக்கிறார். அவர்களை வாழ்த்தி விட்டு வேகம் விரைகிறேன் என் சைக்கிளில்... நான் மட்டும் தனியாக.

நீங்களே சொல்லுங்கள், இத்தனையும் வைத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல, எல்லாம் நலம் என்று எப்படி நான் நடிக்க முடியும்? வலையின் பதிவுகளை எப்படி நான் தொடர முடியும்?

இப்போது, உங்களிடம் இத்தனையும் பகிர்ந்து கொண்டதில் மனதின் நெருக்கடி கொஞ்சம் குறைந்திருக்கிறது. அநேகமாக விரைவில் விரையும் விரிந்த பதிவு...

அது வரை விடை பெறுகிறேன்,

~ NRIGirl




கண்மணி வருகிறாள்

4 comments

நாங்கள் மொத்தம்  ஐம்பத்திரெண்டு பேர்!

ஆசைக்கு பெண்கள் இரன்டு பேர்; ஆஸ்திக்கு ஆண்கள் ஐம்பது பேர்!!

நாங்கள் 1993 முதல் 1996 வரை எங்கள் முதுநிலை பட்டப்படிப்பில் கூடிப்படித்தவர்கள். 

பட்டப்படிப்பு முடிந்த கையோடு உலகம் எங்கும் சிதறி விட்டிருந்தோம் நாங்கள்.

எங்கள் திருமண அழைப்புகளை ஏனோ தவற விட்டிருந்தோம்.

பிள்ளைகள் பிறந்த செய்திகளை பகிர மறந்து விட்டிருந்தோம்.

வாழ்வின் வசந்தங்கள், பயணங்கள், தொடர்புகள், தொல்லைகள், வேகம் வேகமாக எங்களைத் துறத்த கூடித்திரிந்த நாட்களை தொலைத்து தான் விட்டிருந்தோம் போங்கள்.

சமீபத்தில் ஒரு நாள்...

கூடிப்படித்த தோழி திடீரென்று தொலை பேசினாள். 'ஏய்! எப்படி?! என்ன? எங்கே? எப்போ?' ஆர்வ ஆர்வமாய் கேள்விகள் தொடர்ந்தது. 'ஓ! ஓகே! சரி. கட்டாயம். நிச்சயம். ஆமா.' என்பதாய் சுடச்சுட பதில்கள் பறந்தது.

கண்களை விரித்து வியந்து நின்ற கணவரிடம் உற்சாகமாய் சொன்னேன், "கண்மணி வருகிறாள்' என்று.

பத்தொன்பது வருடம் கழித்து பேசிக்கொள்கிறோம்! வெகு விரைவில் பார்க்கப்போகிறோம். உற்சாகம் இருக்காதா பின்னே!

வழி மேல் விழி வைத்து காத்திருந்தோம். கண்மணி வந்து சேர்ந்தாள். ஏய்! அதெப்படி? அப்படியே இருக்கிறாய்?! ஐயோ நீயும் தான்! என்றெல்லாம் வியந்து கொண்டோம்.

விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் மீண்டும் தொடர்ந்தோம். பிள்ளைகளையும் கணவன்மாரையும் சற்றே ஒதுக்கி வைத்தோம். பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம்.

குறிப்பாய் எங்கள் சக மாணவர்கள் ஐம்பது பேரை பற்றி பேசினோம். "ஒருத்தருக்காவது கவலை இருக்கிறதா பார், நம் கூட படித்த பெண்பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ, எங்கிருக்கிறார்களோ, என்ன ஆனார்களோ என்ற சிந்தையாவது இருக்கிறதா பார்", என்று சொல்லி சிரித்து வைத்தோம்.

பேசியும் சிரித்துமாய் சமையல் ஒன்றை ஆக்கி முடித்தோம்.

கீச் கீச் கூப்பிட்டது வாசல் குருவி.

யார் அங்கே? எட்டிப் பார்த்தோம். அட கண்மணி உங்களுக்குத்தான் விருந்தாளி என்று வியத்தி நின்றேன். வியந்தே தான் போனாள். ஏய். இது நம்ம நம்பி தானே. தான். தான். அவரே தான். வீட்டிற்குள் நுழைய விடாமலேயே குசலம் விசாரித்தோம்.

கீச் கீச் கீச் கீச் மீண்டும் கூப்பிட்டது குருவி.

பாஆஆ வாஆஆ! என்று வாய் பிளந்து நின்றோம்.

கண்ணுக்கெட்டா தொலைவில் இருந்து வந்திருந்த கண்மணியை பார்க்க கூப்பிடு தூரத்திலிருந்தும் எட்டிப்பார்க்காமல்  இருந்திருந்த இளையநம்பியும் பாவாவும் வந்திருந்தார்கள்.

நான் ஏதும் கேட்காமலேயே, 'ச ச அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஹி ஹி'  என்று குழைந்து நிற்க, 'சரி, சரி இப்படியாவது  வந்து சேர்ந்தீர்களே மக்களே!' என்று நெகிழ்ந்து போனேன்.


மீண்டும் மனைவி/கணவர்  மக்கள் மறந்து விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் தொடர்ந்தோம்.

ஆக்கி வைத்த ஆகாரத்தை அளவளாவி உண்டு மகிழ்ந்தோம்.

வயிறும், மனமும் நிறையவே மெல்ல எங்கள் கணவர்/மனைவி மக்களையும் சேர்த்துக்கொண்டோம் சங்கதிகளில்.

"இதுகளையும் கட்டி மேய்க்கிறார்களே" என்பதாய் எங்கள் இருவரின் கணவர்களையும் பார்த்து கொள்ளை பிரியம் கொண்டார்கள் எங்கள் கூடப்படித்தவர்கள்.

"எவ்வளவு அன்பாய் நம் நண்பர்களை கவனித்துக் கொள்கிறார்களே" என்று அவர்கள் மனைவிகளிடம் மதிப்பும் மரியாதையும் வியப்பும் விருப்பமும் கொண்டோம், பெண்கள் நாங்கள்.

இதற்கு நடுவில் ஆமா உங்கள் கல்லியான அழைப்பு ஒன்றும் வரவேயில்லையே என்று ஒருத்தருக்கொருத்தர் குறை பட்டுக்கொண்டோம். மிச்சம் உள்ள 48 பேரை பற்றியும் அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த நாங்கள் கேள்விப்பட்ட செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

சீனியர் கிளாஸ் என்றும் ஜூனியர் கிளாஸ் என்றும் விருப்பமான வாத்தியார் வாத்திமார் என்றும் நாங்களே நலம் விசாரித்தும், பகிர்ந்தும் கொண்டோம்.

இரவு நெருங்க நெருங்க, 'இனி இவர்கள் கிளம்பி விடுவார்களே. எப்படியாவது இன்னுமொரு மூன்று வருடம் இவர்களுடன் கூடிப்படித்தால்... மூன்று வருடம் என்ன ஒரு மூணு நாளாவது சேர்ந்து இருந்தால்... விடுங்கள், இன்னுமொரு மூணு மணி நேரமாவது பேசக்கிடைத்தால்... குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது...' நான் யோசித்துக்கொண்டிருக்கவே...

'சரி, அப்ப நாங்க கிளம்பறோம்!'

'நாங்களும் தான்'

'நாங்களும்.'

விடை பெற்றார்கள் நண்பர்கள்.

'ஏய்! வெயிட். இனி எப்போ எங்கே?' சொல்லாமல் சொல்லி நின்றேன்.

காற்றிலோ கற்பனையிலோ எங்கிருந்தோ பதில் ஒன்று பறந்து வந்தது,  "மீண்டும் கண்மணி வரும்போது", என்று. சிரிப்பலை ஒன்றும் தொடர்ந்ததாக நினைவு.
.
"கிண்டல் தானே!", கண்கள் கசிய சிரித்து வைத்தேன்...

இன்னுமொரு பத்தொன்பது வருடம் மனக்கணக்கில் கூட்டிப்பார்த்தேன்.

சிரிப்பு உறைந்தது. கசிவு தொடர்ந்தது...

நாற்பத்தி...

3 comments

வயது நாற்பதை தாண்டி வீர நடை போட்டுக்கொன்டிருக்கிறது. எங்கே எப்போது எப்படி நாற்பதை தொட்டோம் என்று வியப்பாக இருந்தாலும், அட பரவாயில்லையே நாற்பது சுலபாக இருக்கிறதே என்று பூரிக்கிறது மனது. 

இருக்காதா பின்னே?!

ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்த ஓட்டம் பதட்டம் எல்லாம், கல்லூரியிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பு தேடுவதிலும், பிறகு கிடைத்த வேலையை தக்க வைத்துக்கொள்வதிலுமாக ஒரு முடிவேயில்லாமல் அல்லவா போய்க்கொன்டிருந்தது!

இப்போது நாற்பதை தொட்டு விட்டு திரும்பி பார்த்தால் அந்த ஓட்டமும் பதட்டமும் நின்று விட்டிருக்கிறது. "சரி பரவாயில்லை, என்ன தான் ஆகி விடப்போகிறது?", என்கிற மப்பை விட "இம்மட்டும் வழி நடத்தின கர்த்தர் இன்னும் நடத்துவார்", என்கிற நம்பிக்கை ஓங்கி நிற்கிறது.

கணவரையும் பிள்ளைகளையும் கொஞ்சம் வளர்த்து விட்ட நிலையில் (என்ன அப்படி பார்க்கிறீர்கள்! வேண்டியதை எடுத்து சாப்பிட வைப்பது வளர்த்து விடுவது தானே?) கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைக்கிறது. என்னைப்பற்றி யோசிக்க, எனக்கு பிடித்ததை செய்ய -  என்ன படம் வரையலாம், என்ன கதை எழுதலாம், எந்த அ
றையை எப்படி மாற்றி அமைக்கலாம், என்று.

அழுக்காய் கிடக்கும் அ
றைகளை ஒரு தோல்வியாக எண்ணி மனம் ஒடிந்த நாட்கள் மாறி, வீடு கிடப்பது போல கிடக்கட்டும் என்று ஆறுதல் கொன்ட வகையில் கொஞ்சம் தூங்கி முழிக்க, நெட்டி முறிக்க நேரம் இருக்கத்தான் செய்கிறது விடுமுறைகளில்.

கடிதமாவது, கட்டுரையாவது, யார் வாசிக்கிறார்கள், யார் பதில் எழுதுகிறார்கள் என்ற அங்கலாய்ப்பினால் தானோ என்னவோ கொஞ்சம் உங்களோடு பகிர்வதிலும் வேகம் குறைந்திருக்கிறது.

தின் பண்டங்கள் மீதான ஆசை குறைந்திருப்பதினால் அதை செய்தெடுக்க செலவிடும் சமயம் மிச்சம் ஆகிறது. அவியலும் பொரியலும் கட்டாயம் என்றில்லாமல், பருப்போ, மீனோ, அதையும் விட்டால் இருக்கவே இருக்கிறது தயிரும் ஊறுகாயும் என்று மனம் அமைதலாகிறது.

பரவாயில்லயே, திருந்தி இருக்கிறோம், வாழ்க்கையை அமைதலாக்கி கொன்டிருக்கிறோம் என்று பெருமிதம் தாங்க வில்லை.

வாயெல்லாம் பல்.

அங்கேயும் இங்கேயுமாக வீட்டில் நடை பயில, 'Free-யாக இருந்தால் கொஞ்சம் பேசலாமே', கூப்பிட்டது கூடத்து கண்ணாடி. "Why not?!" என்றது நிஜம்.

ஏய்!
ஏய்!!
பரஸ்பரம் பரிமாரிக்கொன்டார்கள் நிஜமும், நிழலும்.


பேசிக்கொன்டிருக்கையில், நிஜம் கொஞ்சம் நிழலை கூர்ந்து கவணித்தது. 'ஏய். இரு. அப்படியே. ஆடாமல். அசையாமல்', என்று கூவியவாரே கையால் விரைந்து நிழலின் காதோரம் தடவி, 'ஒரு நரை முடி பார்த்தேன் அதான்' என்றது அவசரமாய் அதை 'pull'-லியவாறே.

நிமிர்ந்தால், இன்னொன்று. அதையும் அடுத்து வேறொன்று. அட அட அட.

கொஞ்சம் பதட்டத்துடன் அடுத்த காதையும் திரும்பி காட்டியது நிழல். பார்த்தால், 'ஒன்னு, ரென்டு, மூனு, நாலு.... ஐயோ நிறையவே இருக்கிறதே!', கலங்கி நின்ற நிஜத்திடம் நிழல் சொன்னது, 'உனக்கும் தானே இருக்கிறது', என்று.

என்ன சொல்கிறாய் நீ?!

உனக்கு இருப்பதால் தானே எனக்கும் இருக்கிறது?

இன்னும் குழப்புகிறாய் நீ.

சரி விடு, என்றது நிழல், நிஜத்திடம் பேசி பயனில்லை என்பதால்.

அதை விட்டு வேறு காரியங்கள் பேசிக்கொன்டார்கள் நெடு நேரம் இருவரும். புத்தாடைகளை காட்டி மகிழ்ந்துகொன்டார்கள். தலையில் ஒரு கொண்டை போட முயற்சித்தார்கள். குட்டை முடியால் பயன் இல்லாமல் போகவே, கை விட்டார்கள் முயற்சியை. நீளமாக முடியை வளர்த்தே தீருவது என்று ஆனை இட்டுக்கொன்டார்கள் இருவரும், என்பது கூடுதல் செய்தி.

மொத்தத்தில் இருவரின் உற்சாகம் அவ்வளவாக குறையவில்லையென்றாலும் மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு நெருடல் இல்லாமல் இல்லை - நாளுக்கு நாள் அதிகரிக்கும் நரைகளை பற்றி.


அலுவலகத்தில் அன்று அறுபதுகளில் உள்ள ஒருவர் ஒரு ஊசியில் நூல் கொருத்துக்கொண்டிருந்தார். அலுவலகத்திலா? ஊசியா? நூலா? அதுவும் அமெரிக்காவிலா? என்று அடுத்தடுத்து வரும் கேள்விகளை அறிவேன்.

ஆமா. ஆமா. ஆமாங்க ஆமா. என்பது தான் அதற்கான பதில்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மதிய நடை முடிந்து நான் மீண்டும் அலுவலகத்திற்குள் நுளையும் போது reception desk-ல் இருந்த Annie ஊசியில் நூல் கொருத்துக்கொண்டிருந்தார்.

"Hi Annie! How are you? It's a beautiful day out!" என்றேன் அழகிய வெயிலின் உற்சாகத்தால்.

"Hi Hephzi! I am frustrated. For the last entire hour I have been struggling with this thing!!!!" என்றார் ஊசியையும் நூலையும் கையில் பிடித்தவாறு. "There's a button gone lose on my shirt and I am trying to fix it. But if only I can get this thread through the needle..." என்றார் பரிதாபமாய்.

அவ்வளவு தானே, இதுக்குப்போய் வருதப்படலாமா என்ற தோரனையில், "Let me try" என்று சாந்தப்படுத்தினேன். சொன்ன கையோடு விரைந்து ஊசியையும் நூலையும் பறித்துக்கொண்டேன் Annie-யிடமிருந்து.

எத்தனை ஊசியையும் நூலையும் பார்த்திருப்போம் - கல்லூரி நாட்களில் teddy bear பொம்மை செய்ய கற்றுக்கொண்டபோது! எத்தனை எத்தனை பொம்மைகள் செய்து குவித்திருக்கிறோம்!! இந்த அமெரிக்க ஊசி என்ன! என்ற ஒரு அலட்சியம் மனதில்.

இதை எதற்காக சொல்ல வருகிறென் என்று கட்டாயம் ஊகித்திருப்பீர்கள் - கெட்டிக்காரர்கள் நீங்கள்! ஒரு நொடி வேலை என்று நினைத்தது 5 நிமிடம் ஆகியும் தொடர்ந்தது. ஊசியின் ஓட்டை தெரிகிறது. நூலின் நுனி தெரிகிறது. ஆனால் இரண்டையும் பக்கத்தில் கொண்டு போகிறபோது ஏதோ ஒன்று 'out of focus' ஆகிவிடுகிறது!! அப்பப்பா வேர்த்து ஊற்றிவிட்டது எனக்கு.

நல்லவேலையாக உடன் இருந்த அலுவலக தோழி விரைந்து என் கையில் இருந்து பறித்து நொடியில் கொருத்து Annie-யின் கைகளில் கொடுத்து விட்டாள். Annie-க்கு பெரிய உபகாரமாய் போயிற்று. எனக்கும் தான். "அவமானப்படுத்தாமல் காப்பாத்தி விட்டாயே தாயி", என்று மனதில் தோழிக்கு நன்றி சொல்லிகொண்டேன்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் கவணித்தேன், out of focus ஆனது Annie-யின் ஊசி மட்டும் இல்லை. சின்ன எழுத்து தமிழ் Bible-ம், shampoo bottle instructions-ம், மற்றும் பல fine prints-ம் என்று.

ம்ஹூம்!!

கண் டாக்டரிடம் ஒரு நடை போய் கண்ணை காட்டி விட்டு வந்தேன். "வேற ஒன்னும் இல்லை வயசாகிறதில்லே, அதான்." என்றார் ரொம்ப அமைதலாய். தலையே சுற்றி விட்டது எனக்கு.

என்ன சொல்கிறீர்கள் டாக்டர்? வயசா? எனக்கா? நாற்பதை தான்டி ரென்டு வருஷம் கூட ஆகலியே முழுசா?! என்றேன். சிரித்துக்கொண்டே சொன்னார்  டாக்டர், "சந்தோஷப்பட்டுக்கொள் இவ்வளவு நாள் கூர்மையான கண்கள் கிடைத்ததற்கு என்று.".

தொடர்ந்து சொன்னார், "I am not saying you need glasses right now. But clearly I see that you have it in your future. May be 5 years from now. But I will give you a prescription just in case you wish to get it now".

Nooooooooo!!!! அலறிக்கொன்டே திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தேன்.

நாற்பது நன்றாகத்தான் இருக்கிறது, முதுமை வந்து நெருக்காத வகையில்...

ஒருவேளை வந்து நெருக்கும்போது ஒதுங்கி நின்று வழிகொடுத்தால் போச்சு!

கவலையை விடுங்க...

என்றும் அன்புடன்,

நாற்பத்தி...  NRIGirl




நிழல்களைத்தான் காணவில்லை...

4 comments

நிழல்களை தொலைத்து நிற்கிறேன்.

கூடவே வந்த நிழல் எப்போது எங்கு எப்படி தொலைந்தது என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. நேற்றோ, இன்றோ இல்லை, தொலைத்து ஆண்டுகள் பல ஆகிறது. ஆனால் தொலைத்த விவரம் கூட தெரியாமல் இருந்திருக்கிறேன் இத்தனை நாளும்.

திடீரென்று தான் நிழலை தேடுகிறேன், காண வில்லை. போகிற வருகிற வழிகளில், வீட்டில், வெளியில், சுற்றும் முற்றும் எங்கும் காண வில்லை.

நான் என்றில்லை அமெரிக்கா-வில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டுப் பாருங்கள் - அவர்களும் ஒத்துக்கொள்வார்கள் தங்கள் நிழல்களையும் காணவில்லை என்று.

என்னைப்போலவே அவர்களுக்கும் தங்கள் நிழல்களை தொலைத்தது கூட தெரியாமல் தான் போயிருக்கும் இத்தனை நாளும். நீங்கள் இப்போது கேட்கும் போது தான், 'ஐயோ, ஆமா, என் நிழல்களையும் காணவில்லை' என்று பதறுவார்கள்.

சிறு வயதில் பள்ளி பருவத்தில் நிழல்களிடம் ஒளிந்து விளையாட முயற்சித்தது நினைவில் வருகிறது. கூடவே வந்த நிழல் ஒளிந்து விளையாட மறுத்தது.

பாடம் படித்துக்கொண்டிருக்கும் இரவு நேரங்களில், அவ்வப்போது மின்சாரம் நின்று போக, மெலிதாய் சிமிட்டும் மெழுகுவர்த்திரி வெளிச்சத்தில் சுவரில் விரல்களால், விரல்களின் நிழல்களால், மான் என்ன, மயில் என்ன, துள்ளி விளையாடும் முயல் என்ன, நீந்தி ஓடும் மீன் என்ன, அன்னம் என்ன என்று நானும் தம்பியும் வரைந்து வியந்த காட்சி தான் என்னென்ன!!

காலையில் பள்ளி செல்லும் போது நீளமாய் நிழல் பின்னாலேயும், மதியம் மிட்டாய் வாங்க கடைக்கு ஓடும்போது குட்டையாய் காலடியிலும், மாலை வீடு திரும்பும்போது நீளமாய் முன்னாலேயும் நடந்த நிழல் ஒரு நிரந்தரம் என்று தான் ஊகித்திருந்தேன்.

நிழல்கள் கூட தற்காலிகம் தான் என்பது இப்போது தான் புரிகிறது.

இருட்டோடு வேலைக்கு வந்து, இருட்டிய பிறகு வீடு திரும்பி, விடுமுறைகளை வீட்டில் தொலைத்து, துரிதமாய் சமையல்  முடித்து, எப்போதாவது பயணம் செய்து, அவசரமாய் வீடு திரும்பி, கொஞ்சமாய் தூங்கி முழித்து, மீண்டும் இருட்டோடு வேலைக்கு வந்து --- இப்படியாக வாழ்க்கைச்சக்கரம் அதி வேகமாய் சுழல நிழல்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை போலும்.

முடிந்த வரை ஓடி வந்திருக்கும் பாவம்; முடியாத பட்சத்தில் எங்கோ எப்போதோ நின்று விட்டிருக்கிறது போலும்.

ம்ஹூம்.

கடைசியாக எப்போது எங்கே பார்த்தோம் என்று யோசித்துப்பார்த்தேன். கல்லூரி நாட்களில் திருச்சியிலிருந்து திருநெல்வேலிக்கு பேருந்துகளில் பயணிக்கும் போது, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கையில், சாலையின் ஓரத்தில் பேருந்தின் நிழலில், அந்த நிழலில் தெரியும் ஜன்னலின் ஓரமாய் அமர்ந்து வந்து கொண்டிருந்தது தான் நினைவில் வருகிறது.

மூக்கும் முழியும் ஒன்றும் தெரியாவிட்டாலும், நான் தான் அது, என் நிழல் தான் அது என்பது புரிந்து விட்டது நொடிகளில். கலைந்த கேசம் அலைந்து  பாய, விரல்கள் விரைந்து ஒழுங்கு படுத்த ... அது தான் அநேகமாக நான் என் நிழலை கடைசியாய் கண்ட நாட்கள்...

இது ஒரு வெட்டிப் பேச்சாக தோன்றும் பலருக்கும்...

 எங்கே போய்விடப்போகுது நிழல்? நிழல்களை தொலைத்ததாக சரித்திரமே இல்லை என்று எடுத்தெறியும் சிலருக்கு சொல்கிறேன்,

என்னை சுற்றி நன்றாக தேடி விட்டேன்; சத்தியமாக நிழல்களைத்தான் காணவில்லை...

வண்டி எண் 2015

2 comments

நேற்று தான் கூவிக்கூவி கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்: வண்டி எண் 2015 முதலாம் ப்ளாட்ஃபாரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்று.

சரி வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சம் அசால்ட்டாய் இருந்து விட்டேன்.

இன்று இதோ கூவிக்கொண்டிருக்கிறார்கள்: வண்டி எண் 2015 முதலாம் ப்ளாட்ஃபாரத்தில் இருந்து கிளம்பி கொண்டிருக்கிறது என்று!!

என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? இப்போ தானே வந்தது, அதற்குள் கிளம்பி விட்டதே என்று அக்கம்பக்கம் வினவினேன்.

என்னம்மா பேசுகிறாய்? வண்டி வந்து இன்றோடு 31 நாட்கள் ஆகிறது! எந்த உலகில் இருக்கிறாய் என்றும், இத்தனை நாளாய் எங்கே வாய் பார்த்துக்கொண்டிருந்தாய் என்றும், இப்படி பட்டதுகளுக்கு இது தேவை தான், அப்படியாவது புத்தி வருகிறதா பார்ப்போம் என்றும் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

'நட் கேஸ்!' என்றும் வாலிபர் கூட்டம் ஒன்று தலையில் அடித்துக்கொண்டது.

நம்மை அடிக்காத குறை தான் போங்கள்!

பூக்கார அம்மா மட்டும் பாவமாய் பார்த்தார்கள்...

தண்ணீர் பையன் தான் சொன்னான் - அக்கா நீங்கள் கொஞ்சம் எட்டி நடந்தால் வண்டியை பிடித்து விடலாம் என்று...

அரக்கப்பரக்க போவதற்குள் வண்டி கொஞ்சம் வேகமாக இழுக்கவே ஒடித்தான் பிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டவாறே வெளியில் பார்த்தால் நான் கொண்டு வந்திருந்த சுமைகள் எல்லாம் ப்ளாட்ஃபாரத்தில் தேமே என்று உட்கார்ந்திருக்கிறது!!

அட அட அட இனி என்ன செய்யலாம் என்று யோசித்துப்பார்த்ததில் வேறு வழியே இல்லை, உங்களிடமே உண்மையை ஒத்துக்கொள்ளலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பதிவு.

நான் பிரயாணப்பட்டதே கொஞ்சம் உங்களோடு பகிரத்தானே!

மண்ணித்து நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!

எல்லோரும் சுகம் தானே?

நாங்களும் தான்.

ஆரம்ப குசலங்கள் அமறவே,

சரி அப்படி என்ன தான் கொண்டு வந்தீர்கள் என்று பலரும் மனதில் வினவி நிற்கிறது நன்றாக புரிகிறது. சொல்கிறேன்.

பெரிதாய் ஒன்றுமில்லை சுமைகள் தான்.

ஐயோ புரிகிறது. சுமைகள் தான் என்று. அந்த சுமைகளில் என்ன என்று தானே கேட்கிறோம்? என்று கொஞ்சம் எகிறுகிறவர்களுக்காக சொல்லுகிறேன்.

பொறுங்கள். சுமைகள் என்று நான் சொன்னது அந்த தலைப்பில் நான் எழுதவிருந்த பதிவை சொல்லுகிறேன்.

ஓ! அப்படியா? சரி சரி வேறு என்ன கொண்டு வந்தீர்கள்?

ஆகாயத்தில் கோட்டை என்றொரு பதிவு.

அப்புறம்?

சொந்தமான பந்தங்கள் என்றொன்று.

அடுத்து என்ன? பந்தமான சொந்தங்கள் என்றா?

அட சரியாக சொன்னீர்கள்! அதெப்படி என்னை மாதிரியே யோசிக்கிறீர்கள்?!

நெடு நாள் பழகிய நண்பர்கள் அல்லவா, இருக்காதா பின்னே!

சரி வேற என்ன இருந்தது? விட்டு வந்த உங்கள் சுமைகளில்?

மிக முக்கியமாய் கொஞ்சம் ஃபோடோக்கள் கொண்டு வந்திருந்தேன் உங்களிடம் காட்ட - சமீபத்தில் நாங்கள் குடும்பமாய் சென்று வந்த நெடுந்தூர பயணம் பற்றி...

மற்றப்படி விசேஷமாய் ஒன்றும் இல்லை. திண் பண்டமோ, புத்தாடையோ, அப்படி என்ன தான் கொண்டு வர முடிகிறது அவசரமான இந்த பயணத்தில். நலம் நலம் அறிய ஆவல் என்று விசாரிப்பது ஒன்றைத் தவிர?!

வெகு விரைவில் வருகிறேன், விட்டு வந்த சுமைகளோடு...

அது வரை அன்புடன்,

~NRIGirl

என்ன அது வரை மட்டும் தானா அன்பு?

பரவாயில்லை, உஷாராகத்தான் இருக்கிறீர்கள்!

என்றும் அன்புடன்,

~NRIGirl

அட, சொல்ல மறந்தே விட்டேனே!

வண்டி எண் 2015-ஐ அருமையாய் பொறுமையாய் பிடித்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிரயாணம் இனிதே அமைய இனிய நல் வாழ்த்துக்கள்! உங்கள் சுமைகள் சுகமாய் மாற மேலும் என் வாழ்த்துக்கள்!!

மேலே.மேகத்தில். உயரத்தில். உச்சியில்.

4 comments

இந்த கட்டுரையில் வரும் நிகழ்வுகள் கட்டுக் கதையும் இல்லை, துளி கற்பனையும் இல்லை. அப்ப வேற என்ன? நிஜமா? இல்லவே இல்லை.

இது ஒரு சொப்பனம்.

எல்லாம் ஆயிற்று. நொடி நேரத்தில், கண பொழுதில். ஏசப்பா வந்துட்டாங்க போல! ஜிவ் - என்று எடுத்துக்கொள்ளப்படுகிறேன். ரொம்ப சந்தோஷம். ஏசப்பா வந்துட்டாங்க, ஏசப்பா வந்துட்டாங்க என்று ஒரே சந்தோஷம். பக்கத்தில் பார்க்கிறேன் கணவர், பிள்ளைகள் உடன் இருக்கிறார்களா என்று. அவர்களை காணவில்லை. ஐயோ, அவர்கள் எங்கே, நான் மட்டும் தனியாக எங்கே என்ற நினைப்பு சின்னதாய் வந்து போகிறது.

மேலே எழும்ப எழும்ப உற்சாகம், சந்தோஷம். மேலே போக போக பூமி உருண்டையின் விளிம்பு தெரிகிறது. இன்னும் பலரும் இப்படி மேலாக வருவதும் தெரிகிறது.

மேலே.மேகத்தில். உயரத்தில். உச்சியில். மேகங்களுக்கு நடுவில். வரிசை வரிசையாக ஆட்கள் நிற்கிறார்கள். நானும் போய் ஒரு வரிசையில் நிற்கிறேன்.

நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நிறைய பேர் துக்கமாக நிற்கிறார்கள். அனேகர் ஒரு ஓரமாக படுத்துக்கிடக்கிறார்கள். பெரும்பாலானோர் வெள்ளை உடைகள் அணிந்திருக்கிறார்கள். வேறு நிறங்களிலும் வந்திருக்கிறார்கள். நான் என்ன அணிந்திருக்கிறேன் என்பது தெரியவில்லை.

படுத்துக்கிடப்பவர்களை ஒரு நோட்டும் கையுமாக சிலர் சென்று கவனிக்கிறார்கள். ஏதோ எழுதிக்கொள்கிறார்கள் புத்தகத்தில். படுத்துக்கிடப்பவர்கள் அநேகமாக கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படுகிறார்கள். வரிசையில் நிற்கும் யாரோ சொல்கிறார்கள், இவர்கள் சுகம் இல்லாதவர்கள், அதனால் தான் அவர்களை படுக்க வைத்திருக்கிறார்கள் என்று.

எதுவும் எனக்கு கவலை இல்லை. மேகமூட்டமா, புகையா என்பது தெரியவில்லை, மொத்தமாய் ஒரு அமைதி நிலவுகிறது.

பல இடங்களில் இருந்தும் பல வரிசைகள் வந்து ஓரிடத்தில் சேர்கிறது. வரிசைகள் வந்து சேரும் இடத்தில் ஒரு நபர் நிற்கிறார். அவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் இருக்கிறது. பெரிய இராணுவ அதிகாரியாக காணப்படுகிறார். எல்லா இராணுவங்களுக்கும் தலைவர் போல இருக்கிறார். அவர் தான் பெரிய அதிகாரி. அவருக்கு மேல் அதிகாரி இல்லை. இராணுவ உடை தரித்திருக்கிறார்.

வரிசையில் வந்து நிற்கும் ஒவ்வொருவரும் அவரிடம் தான் போய் நிற்கிறார்கள். அவர் ஒவ்வொருவரிடமும் என்னதோ கேட்கிறார். ஒவ்வொருவரும் என்னதோ பதில் சொல்கிறார்கள். அவர்கள் சம்பாஷனை மற்றவர்களுக்கு கேட்கவில்லை. பேசுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. சிலர் கொஞ்சம் அழுவதாய் தெரிகிறது.

அவருக்கு பின்னால் என்னன்னவோ வேலைகள் செய்கிறார்கள் பலரும். மேகத்தில் பறக்கிறார்கள், பேசுகிறார்கள், படுத்துக்கிடப்பவர்களை விசாரிக்கிறார்கள்.

முக்கியமாக ஒரு பெரிய விருந்தோ விஷேஷமோ ஆயத்தப்படுத்துகிறார்கள் போல தெரிகிறது. கல்லியாண வீடுகளில் நடக்குமே அப்படி. யாவரும் வேலை செய்து கொண்டு, ஏதோ முக்கியமாய், என்னவோ செய்துகொண்டு. புகை எழும்பிக்கொண்டு, மனம் பரவி கொண்டு, அப்படி.

என் முறை வருகிறது.

பெரிய அதிகாரியின் முன்பு போய் நிற்கிறேன். ரொம்பவே பெரிய அதிகாரி. சிரிக்க ஒன்னும் செய்யவில்லை. கொஞ்சம் கடினமாகத்தான் முகத்தை வைத்திருக்கிறார். தன் கையில் உள்ள நோட்டில் கேள்விக்குறியோடு ஏதோ எழுதிக்கொள்கிறார்.

எனக்கு திடீரென்று தெரிந்து விடுகிறது. இது ஏசப்பா!!

ஏசப்பா! நீங்க ஏசப்பா தானே?! என்று கேட்கிறேன். பதில் ஒன்றும் இல்லை. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஐயோ, நீங்க ஏசப்பா தான். Can I please hug you (உங்களை கொஞ்சம் கட்டி பிடித்துக்கொள்ளட்டுமா)? என்று கேட்கிறேன். ஏசப்பா பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நான் கட்டி பிடித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை. இறுக்கமாய்.

கண்ணீர் தானாய் வருகிறது. ஆனந்த கண்ணீர். "ஏசப்பா! நான் எப்போ உங்களை நேரில் பார்க்கும்போதும் first கட்டி பிடித்துக்கொள்வேன் என்று எப்பமும் நினைப்பேன். அதான் கட்டி பிடித்து கொள்கிறேன்.", என்று விளக்கம் வேறு தருகிறேன். ஏசப்பா! ஏசப்பா! என்று சந்தோஷத்தில் அழுகிறேன். ரொம்ப சந்தோஷம் வந்தால் அது அழுகையில் தான் போய் நிற்கும் போல.

இதில் ஒன்றுக்கும் ஏசப்பா பதில் சொல்லவில்லை. என்னை கட்டி அணைக்கவுமில்லை. சிரிக்கக்கூட இல்லை. மீண்டும் தன் கையில் உள்ள நோட்டில் கேள்விக்குறியுடன் ஏதோ எழுதுவதும், கிறுக்குவதுமாக இருக்காங்க.

திடீரென்று என்னை வரிசையின் ஓரமாக தனியாக கூட்டி சென்று, "Something went wrong somewhere. It is not your time yet" என்று சொன்னாங்க. நான் சொன்னேன், "That's arlight! I am okay. I am happy here" என்று. உடனே என் வலது கையை மணிக்கட்டு பகுதியில் பிடித்துக்கொண்டு வேகமா நடந்தாங்க, "Just follow me" என்றும் சொன்னாங்க.

நீளமா படிகள் இருந்தது கீழே போக. படி ஆரம்பத்தில் என் கையை பிடிச்சிருந்தாங்க. ரெண்டு அடி எடுத்து வைத்ததும் கொஞ்சம் முன்னால் நடந்தாங்க. இன்னும் ஒரு திருப்பத்தில் இன்னும் வேகமா முன்னே நடந்தாங்க. அப்புறம் வேகம் வேகமா கொஞ்சம் ரொம்பவே முன்னால் போயிட்டாங்க. அதுக்கு பிறகு நான் அவங்களை பார்க்கவில்லை.

நிறைய படிகள். அதில் ஒரு சிறகு பறப்பது மாதிரி பறந்து, விரிந்து, ஆடி, அசைந்து, சிரமமே இல்லாமல் இன்னும் புரண்டு, பறந்து பறந்து கீழே கீழே இன்னும் கீழே... கடைசியாக பூமியில் வந்து ஒரு தெரு ஓரத்தில் கண்ணை திறக்கிறேன். பணி பெய்து கொண்டிருக்கிறது...

இத்துடன் தூக்கம் கலைந்து நானும் முழிக்கிறேன்.

கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. நிஜமா? இல்லவே இல்லை. இது ஒரு சொப்பனம்.

ஒரு வேதாகம வசனம் நினைவில் வருகிறது: For we must all appear before the judgment seat of Christ, so that each one may receive what is due for what he has done in the body, whether good or evil. 2 Corinthians 5:10

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். II கொரிந்தியர் 5:10


~NRIGirl

தலைகீழ்

6 comments

நேற்று பிள்ளைகளுக்கு விடுமுறை, ஏதோ Teacher's Conference என்று. சரி அவ்வளவு தான் வீடே தலைகீழ் ஆகிவிடும் என்று நினைத்துக் கொண்டேன். சாயங்காலம் வீடு திரும்பும்போது இதயம் கொஞ்சம் வேகமாகவே அடித்துக்கொண்டது. சரி எப்படி கிடந்தால் நமக்கென்ன என்று தைரியமாய் உள்ளே நுழைந்தேன்.

உண்மையிலேயே தலைகீழாகத்தான் இருந்தது - நான் எண்ணியதற்கு தலைகீழாய். அதது அதினதின் இடத்தில் இருந்தது. சமர்த்தாய். சாமர்த்தியமாய். அழகாய். அம்சமாய்.

கொஞ்சம் அசந்து தான் போய் விட்டேன். அடடா நம் பிள்ளைகளா இப்படி என்று கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு உற்சாகம். கடைசியாய் எப்போது இவ்வளவு சந்தோஷப்பட்டேன் எதற்காவது என்று யோசித்து பார்த்தேன், ஒன்றும் கிட்ட வில்லை.

நிம்மதியாய் ஒரு நீண்ட பெருமூச்சு தானாய் வந்தது. அழத்தான் இல்லை போங்கள். அவ்வளவு சம்தோஷம்.

சரி கீழ் வீட்டைத்தான் ஒதுக்கியிருப்பார்கள் என்று மேலே போனால், அது அதற்கு மேல். ஒவ்வொரு அறையும் ஒதுக்கப்பட்டு, துணிகள் எல்லாம் மடிக்கப்பட்டு. அப்பப்பா.

நன்றி நன்றி. மிக்க நன்றி என்று மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக்கொண்டேன். பிள்ளகளே போதும், போதும், ஏதோ தெரியாமல் செய்து விட்டோம் என்று சொல்லாத குறை தான்.

இனி பிழைத்துக்கொள்வேன், பிள்ளைகள் தலை தூக்கி விட்டார்கள் என்று எனக்கு நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன்.

சரி, சரி அதற்கென்ன? இன்னும் இரண்டே நாளில் மீண்டும் தலைகீழ் ஆகப்போகுது, அதற்குள் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களில் யாரையும் சொல்லவில்லை. மற்றவர்களில் சொல்கிறேன். இதைத் தான் Pessimism என்கிறோம். optimism-ன் எதிர்மறை.

Optimists எல்லா விஷயங்களிலும் உள்ள நல்லதை காண்கிறார்கள். Pessimists அனைத்து விஷயங்களிலும் உள்ள குறைகளை பெரிது படுத்துகிறார்கள்.

கல்லூரி காலங்களில் படித்த ஒரு துணுக்கு நியாபகம் வருகிறது: "The optimist sees the doughnut, the pessimist the hole!", என்று. (தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், doughnut என்பது நம்ம அதிரசம் மாதிரி இருக்கும், வட்டமாய், இனிப்பாய். அதின் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். Optimist அதிரசத்தை காண்கிறான், pessimist ஓட்டையை காண்கிறான் என்பது பழமொழி.)

அது இருக்கட்டும், எனக்கொரு சந்தேகம். தமிழில் தலைகீழ் என்ற வார்த்தைக்கு எதிர்மறை தான் என்ன? ஆங்கிலத்தில், "up side down" என்றும் அதின் எதிர்மறையாக "right side up" என்றும் சொல்கிறோம்.

தமிழில் தலைகீழின் எதிர்மறை தலைமேல் என்று சொல்ல முடியாது, அர்த்தம் முற்றிலும் மாறிவிடுகிறது. கால்மேல் என்றும் சொல்லமுடியாது. யோசித்து பார்த்ததில் கால்கீழ் என்பது தான் சரியாக பொருந்துகிறது. ஆனால் அப்படி ஒரு வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை. நீங்கள்?

சரி இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அதிகம் குழப்பிக்கொள்ளாதீர்கள். தலைகீழின் எதிர்மறை என்று சொன்னால் போச்சு...

அப்புறம், சொல்லுங்கள், வேற என்ன விசேஷம்? உங்க வீட்டில் எல்லோரும் சுகமா? உங்க வீடு சுத்தமா இருக்கா?

Great! Enjoy பண்ணுங்க. நாளைக்கு அழுக்காகும்னு நினைச்சு இன்னைக்கு கவலை படாதீங்க. ஒருவேளை தலைகீழாய் கிடந்தாலும் கவலையை விடுங்க. நாளைக்கு சுத்தம் பண்ணினா ஆச்சு...

அன்புடன்,
~NRIGirl

சும்மா ஒரு கடிதம்

4 comments

மணி இப்போது வியாழன் காலை ஏழு மணி நாற்பதொன்று நிமிடம்.

விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை...

வெளியே இன்னும் இருட்டாகத்தான் இருக்கிறது. இருட்டாக என்று சொல்வதைவிட இருட்டிக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.

கொஞ்சம் இருங்கள், ஒரு photo க்ளிக் செய்துவிட்டு வந்து தொடருகிறேன்...

சரி, விஷயத்திற்கு வருகிறேன்...

ம்.. வந்து. அதாவது... விஷயம் ஒன்றும் இல்லை, மன்னிக்கவும்.

சும்மா ஒரு கடிதம் தான் இது. வேலை ஏதும் இல்லாமல் சும்மா அமர்ந்திருப்பதினால் சரி சும்மா ஒரு கடிதமாவது எழுதுவோம் என்று ஆரம்பித்தத்தின் விளைவு...

வார இறுதியில் நடக்க இருக்கும் system upgrade காரணமாக வேலை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. இதுவே வீட்டில் இருந்திருந்தால் எத்தனையோ வேலை செய்திருக்கலாம்.

துவைத்த துணியை காய போட்டிருக்கலாம், காய்ந்த துணியை மடித்திருக்கலாம், மடித்த துணிகளை எடுத்து வைத்திருக்கலாம். ம்ஹூம்.

ஒரு வேளை துணி வேலை செய்ய இஷ்டம் இல்லை என்றால், நல்லதாய் ஒரு சாப்பாடு சமைத்திருக்கலாம். அதையும் விட்டால், கொஞ்சம் தோசை மாவு அரைத்திருக்கலாம், குறைந்த பட்சம் ஊறவாவது போட்டிருக்கலாம் போங்கள்.

ஒன்றும் இல்லாவிட்டால் கொஞ்சம் முறுக்காவது செய்திருக்கலாம். ம்ஹூம்.

சரி அடுப்படி போக இஷ்டம் இல்லை என்றால், ஒதுக்கி வைத்த பொருட்களை எடுத்து ஒரு படம் வரைய ஆரம்பித்திருக்கலாம்.

சரி விடுங்கள். முடியாததை பற்றி யோசித்து என்ன புண்ணியம்.

சென்ற வாரம் church-ல் இருந்து ஒரு women's conference சென்றிருந்தேன். 'What Not To Wear' என்ற தலைப்பில் அருமையாய் நடத்தியிருந்தார்கள். வேண்டா வெறுப்பாய் தான் சென்றிருந்தேன் - ஆனால் நல்ல வேளை miss பண்ணவில்லை என்று எண்ணும்படி இருந்தது.

வேதாகம விளக்கத்தோடு பெண்கள் எப்படி கோபம், பொறாமை, பெருமை, வைராக்கியம், பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற எண்ணங்களை உடுக்கக் கூடாது என்று பேசினார்கள். மிகவும் சிறப்பாக அமைந்தது.

அதில் Group Discussion-க்காக கொடுக்கப்பட்ட ஒரு கேள்வி, "What complicates your life?" (உங்கள் வாழ்க்கையை கடினமாக்குவது எது?) என்பது.

கணவர் என்றும், பிள்ளைகள் என்றும், பணம் என்றும், பதவி என்றும் பல்வேறு கருத்துக்களை பலரும் பரிந்து கொண்டார்கள். பரவாயில்லை அமெரிக்க பெண்களும் நம்மைப் போலவே தான் இருக்கிறார்கள் என்று வியந்து கொண்டேன்.

என் முறை வந்த போது நான் சொன்னேன், "வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது", என்று.

ஐயோ பாவம் என்பது போல் பலரும் பார்த்தார்கள். அது ஒரு சுகவீனம் என்பதாய் ஒருவர் கருத்து கூறினார். அதை நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை. ஒரு வீடு என்றால் அது கட்டாயம் சுத்தமாகத்தானே இருக்க வேண்டும் என்று கேட்டேன். இல்லை என்று மறுக்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆம் என்று சொல்லவும் யாராலும் முடியவில்லை.

ஒரு பாட்டிம்மா சொன்னார்கள், 'ஐயோ நானும் அப்படித்தான் இருந்தேன் ஒரு காலத்தில்", என்று. கடந்த கால வினையில் (past tense-ல்) சொன்னதால், மிகவும் ஆவலுடன், "அப்படியா? பிறகு எப்படி சரியானது?" என்று கேட்டேன். "வேற என்ன, வயதாகி விட்டது, செய்ய முடியவில்லை, அவ்வளவு தான்", என்றார்கள்.

இன்னொரு பாட்டிம்மா, "Life is hard, I tell you" என்று தொடர்ந்தார்கள். "Thank you for your encouraging words", என்று நான் சொல்ல சிரிப்பலை விரிந்து ஓய்ந்தது.

ஆக, என் பிரச்சனைக்கு முடிவில்லை என்பது மட்டும் உறுதி, வயதாவதை தவிர... ம்ஹும்.

வீடும், வீட்டை சுற்றியுமே உலவும் என் சிந்தனைகளை ஒருமைப்படுத்தி, ஓரிடத்தில் அமர வைத்து இன்று வேலை ஒன்றும் இல்லை, சும்மா இரு நாள் முழுதும் என்று சொன்னால் எப்படி இருக்கும், நீங்களே சொல்லுங்கள்.

மணி இப்போது வியாழன் காலை எட்டு மணி இருபத்தாறு நிமிடம்.

வீட்டிற்கு செல்ல மாலை நான்கு மணி ஆகும். வீட்டில் போய் சேர மாலை ஆறு மணி ஆகும். அதுவரை காத்திருக்கும் துணிகளும், தோசை மாவும். பாவம்.

அது வரை சும்மா இருக்கும்,
~NRIGirl

(நண்பர்கள் கவனத்திற்கு: நான் பாவம் என்று சொன்னது என்னைத்தான்; துணிகளை இல்லை...)

P.S: Sorry, மறந்தே போனது... க்ளிக் செய்த photo இதோ... எனக்கொரு சந்தேகம், மழையைத்தான் காட்டுகிறேனா, இல்லை மழையை காட்டுவதாகச் சொல்லி என் குடையை காட்டுகிறேனா என்று. எதுவாயிருந்தாலும் ரசிப்பீர்கள் தானே?



ரயில் பயணம்

5 comments

இன்று அலுவல் விஷயமாக Washington DC-க்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். New York Penn Station-ல் இருந்து Accela Express என்றொரு துரித ரயிலில். 2 மணி train-ஐ பிடித்தால் 4:55-க்கு Union Station-ல் சுகமாக வந்து இறங்கிவிடலாம்.

ரயில் பயணம் எனக்கு எப்பொழுதுமே மிகவும் பிடித்த ஒன்று. மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ரயில் பயணங்கள் தந்திருக்கின்றன. எத்தனை வருடங்களுக்கு முன்னர் கண்களில் விரிந்த காட்சிகள் இன்றும் மனத்திரைகளில் எத்தனை முறையோ வந்து போகின்றன.

என் அபிப்பிராயப்படி ரயில் ஒரு ஊரின் பின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. பேருந்திலோ, ஊர்திகளிலோ பயணம் செய்யும் போது ஊரின் முன் பக்கத்தை பார்க்கிறோம். அலங்கார விளக்குகளையும், அழகாக்கப்பட்ட கட்டிடங்களையும், திருத்தி அமைக்கப்பட்ட சாலைகளையும், செதுக்கப்பட்ட சிலைகளையும், நல்ல உடை உடுத்தின மனிதர்களையும் அதிகம் பார்க்கிறோம்.

ரயில் ஊரின் பின் வாசல் வழியாக நம்மை கூட்டிச்செல்கிறது. ஊரின் நாடி நரம்புகள், சாக்கடைகள், குப்பை மேடுகள், அசுத்தங்கள், புறம்பாக்கின கட்டிடங்கள், வெறுமையான வெளிகள், கூலி வேலை தொழிலாளர்கள் என்று ஒரு ஊரின் அடுத்த பக்கத்தை நமக்கு காட்டுகிறது.

நகர எல்லையை விட்டு தாண்டும்போது இதமான இயற்கை வளத்தை விவரிக்கிறது. அற்புதமான ஆறுகளும், சோலைகளும், விரிந்து கிடக்கும் வயல்களுமாய் ஒரு புதிய கதையை சொல்கிறது.

ரயிலின் நிரந்தரமான ஆட்டமும், அதனால் கொஞ்சம் அசைந்துகொண்டே வரும் பயணிகளையும் மணிக்கணக்கில் ரசிக்கலாம். மனிதர்களில் தான் எத்தனை விதம். ஒவ்வொருவரும் தான் எத்தனை வித்தியாசம். ஒரே இனம். பல விதம். அதிசயம் தான்.

நான் அவசரத்தில் ஒரு புத்தகமோ, பத்திரிக்கையோ கொண்டு வராமல் ஏறி விட்டேன். கொஞ்ச நேரத்தில் இனி  என்ன செய்யலாம் என்ற எண்ணம் வரவே, சரி Cafe Car-க்கு ஒரு நடை சென்று வருவோம் என்று கிளம்பினேன். ஒரு கருப்பு காப்பியும், ஒரு pocket m&m-ம் வாங்கி வந்தேன்.

ஒரு car முழுவதும் முக்கியமான ஆட்கள் போல பளிச்சென்று வெள்ளை சட்டையும், navy (ஊதா) கோட்டும் சூட்டுமாக ஒரு கூட்டம் பயணிகள். இங்குள்ள அரசியல்வாதிகளாயிருக்கும் என்று நினைத்து கொண்டேன். ஏனோ பெருமையாக இருந்தது - ஒரே ரயிலில் பயணிப்பதாலோ என்னவோ.

முடிந்த வரை கண்களை அலசி ஆராய்ந்தும் பெயருக்கு கூட ஒரு இந்திய நாட்டவரை பார்க்கவில்லை. அதனால் தானோ என்னவோ திடீரென்று தனியாக பயணம் செய்வது போல் ஒரு எண்ணம் வரவே, சரி கொஞ்சம் உங்களோடு பகிரலாமே என்று எழுதத்தொடங்கி விட்டேன். 

எப்படி இருக்கிறீர்கள்? நானும் நல்ல சுகம்.

இங்கு அமெரிக்காவில் இலைஉதிர் காலம் ஆரம்பமாகியிருக்கிறது. குளிரும், மழையுமாக வெகு விரைவில் வரவிருக்கும் குளிர்காலத்திற்கு நம்மை தயாராக்கிக்கொண்டிருக்கிறது. இன்று அதிசயமாய் இதமான வெப்பநிலை காணப்பட்டது. நேற்று நல்ல மழை. அதற்கு முந்தின நாள் நல்ல குளிர். இனி நாளை மழை. என்று அப்படியும் இப்படியுமாக நம்மை குழப்பி கடைசியில் கடுங்குளிரில் கொண்டு வந்து விடும். 

ஒவ்வொரு காலத்திலும் குடும்பமாய் செயல்பட பல வேடிக்கைகள் உண்டு. இலைஉதிர் காலத்தில் பொதுவாக மக்கள் Apple Picking என்று போய் வருவார்கள் குடும்பம் குடும்பமாய். மரங்களில் இலைகள் நிறம் மாறுவதை கண்டு வருவார்கள் பலரும். Pumpkin picking என்றும் அதை carving என்றும் ஒரு பொழுதுபோக்கு.  

விரைவில் Trick-or-treat என்று ஒரு பண்டிகை. சிறு பிள்ளைகள் மாறு வேடங்கள் அணிந்து வீடு வீடாய் சென்று, "Trick or Treat!" என்று சவால் விடுவார்கள். அனைத்து வீடுகளிலும் இப்படி வரும் பிள்ளைகளுக்காக மிட்டாய்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.

November மாதம் தொடங்கவும் Thanksgiving பண்டிகைக்காய் தயாராவார்கள். வீடுகளை அலங்கரிப்பதும், வான் கோழி ஆர்டர் செய்வதும், விருந்து பற்றி ஆலோசிப்பதும், பயண டிக்கெட்டுகளை வாங்குவதுமாக busy-யாகி விடுவார்கள்.

Thanksgiving முடிந்த வாரமே Christmas-க்கு தயாராவார்கள். இப்படி அமெரிக்காவில் மக்கள் நன்றாகவே வாழ்க்கையை அநுபவிக்கிறார்கள். 
ஆரம்பத்தில் அதை விமர்சித்த நாங்களே இன்று அவர்களில் ஒன்றாகவே ஆகிவிட்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஒருவர் தீபாவளி எப்போது என்று கேட்டார். அதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

இன்னொருவர், தீபாவளி எதற்காக கொண்டாடுகிறார்கள் என்று கேட்டார். சிறு பிள்ளைகளில் பள்ளிகளில் படித்த நரகாசுரன் கதையை எடுத்துரைத்தேன். அப்படித்தானே என்று ஒரு வட இந்திய நண்பரை கேட்க, அவர் அந்த கதையை தான் கேட்டதேயில்லை என்றும் ராமர் அயோத்திக்கு வந்தபோது மக்கள் தீபங்களை ஏற்றி வரவேற்றதாகவும் சொல்லி பெரிதும் குழப்பிவிட்டார்.

தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு வைத்தேன். கொஞ்சம் விளக்கினால் பிரயோஜனமாயிருக்கும் - கேட்பவர்களுக்கு பதில் சொல்ல. தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சரி, ரயில் இப்போது Baltimore தாண்டி சென்று கொண்டிருக்கிறது. விரையில் DC வந்து விடும். நீங்களும் கொஞ்ச தூரம் கூட வந்தது நன்றாக இருந்தது. நன்றி.

பயணம் தொடரும்,

~NRIGirl

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

6 comments

Dallas-ல் மணி இப்போது 12:09 நடு இரவு. வீட்டில் New Jersey-யில் 1:11 AM. அலுவல் விஷயமாக ஒரு வாரம் Texas-ல் உள்ள Dallas என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன். இன்றோடு மூன்று நாள் ஆகிறது. இன்னும் மூன்று நாள் செல்லும் வீட்டில் போய் சேர...

பொதுவாக அமெரிக்காவில் Texas மக்களை குறித்து நல்ல பெயர் உண்டு - விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்று. அது உண்மை தான். Airport-ல் இருந்து வெளியில் வந்தவுடனே taxi-க்காக line-ல் நிற்கும்போது குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு குளிர்ந்த ஒரு பாட்டில் தண்ணீர் கையில் கொண்டு தருவார்கள். வேறு எந்த இடத்திலும் இப்படி ஒரு உபசரிப்பை நான் பார்த்தது கிடையாது.

மக்களும் கூட New York போல ஆடம்பரம் இல்லை. முடி, நகம், முகம், பல், உதடு எல்லாம் உள்ளது உள்ளது போல் தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை முடி என்றால் வெள்ளை முடி. உடைந்த பல் என்றால் உடைந்த பல். ஒடிந்த நகம் என்றால் ஒடிந்த நகம். இப்படி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் காணப்படுகிறார்கள். அதனால் தானோ என்னவோ New York மக்களை விட கொஞ்சம் வயதில் கூடினவர்களாக தெரிகிறார்கள். 

நான் ஒரு Conference-க்காக வந்திருக்கிறேன். Germany, France, Canada, மற்றும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் வந்திருக்கிறார்கள்.

நன்றாகத்தான் இருக்கிறது மாநாடு. இருந்தாலும் பிள்ளைகளை விட்டுவிட்டு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அடிக்கடி தோன்றத்தான் செய்கிறது.

நான் மட்டும் இல்லை. வந்திருக்கிற எல்லா அம்மாக்களும் இதைத்தான் பேசிக்கொள்கிறோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம்.

அப்பாக்கள் ஏனோ வீட்டைப் பற்றி ஒரு கவலையையும் காட்டிக்கொள்வது இல்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் எல்லாம் தானாய் நடக்கும் என்பது போலத்தான் இருக்கிறார்கள். வேலை ஒன்றே அவர்கள் வாழ்க்கை போலும்.

பாவம் தான் அம்மாக்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று. வீடும் வேண்டும் வேலையும் வேண்டும் என்று. குடும்பமும் வேண்டும் பதவியும் வேண்டும் என்று. அங்கேயும் இங்கேயுமாக...

ஆனாலும் கூட எவ்வளவு சந்தோஷமாய் சிரித்த முகத்துடன் conference-ன் ஒவ்வொரு காரியங்களிலும் பெண்கள் முன் நிற்பதையும், புதிய பாடங்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதையும், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையையுமாய் உலாவுவதையும் பார்க்கும்போது ஒரு புதிய உற்சாகம் தானாய் தோன்றத்தான் செய்கிறது.

எதையும் சாதித்துவிடலாம் என்ற துணிச்சல் எழும்பத்தான் செய்கிறது. ஒரு முறையேனும் ஏணியின் உச்சி வரை சென்றே தீர்வதென்று மனம் ஏங்கத்தான் செய்கிறது. எல்லைகளை விரிவாக்கியே ஆவது என்ற ஆசை நிறையத்தான் செய்கிறது.

எல்லாம் பொறுங்கள் இந்த இரண்டு மூன்று நாட்களுக்குத்தான். விரிந்த சிறகுகளை சுருட்டத்தான் வேண்டி வரும் வெகு விரைவில். ஏணியில் எடுத்து வைத்த அடிகளை மீட்கத்தான் வேண்டும் சிறு பொழுதில். ஆற்றின் கால் கொஞ்சம் இழுக்கத்தான் போகிறது நொடியில்.

போகட்டும் விடுங்கள். கனவுகள் எல்லாம் கலையத்தானே?!

வீடு ஒன்றே எங்கள் வாழ்க்கை. நான் என்றில்லை, எல்லா அம்மாக்களும் இதைத்தான் சொல்லுவார்கள், கேட்டுப்பாருங்கள்...

Dallas-ல் நேரம் அதிகாலை ஒரு மணி பன்னிரெண்டு நிமிடம். வீட்டில் New Jersey-ல் இரண்டு மணி பதின்மூன்று நிமிடம். 

கொஞ்சம் உங்களோடு பகிர்ந்ததில் சந்தோஷம்...

விரைவில் மீண்டும் உங்களோடு,

~NRIGirl

Algebra படுத்தும் பாடு...

1 comments

இரண்டு நாட்களுக்கு முன் என் இரண்டாவது மகள் தன் வீட்டுப்பாடத்தை (home work) நான் சரி பார்க்க என்னிடம் கொண்டு வந்தாள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அல்ஜீப்ரா. புது பாடம்.

பரவாயில்லை நன்றாக புரிந்திருக்கிறாளே என்று யோசித்து முடிக்கவே ஒரு தவறு கண்ணில் பட்டது.

y=mx+b then what is b? என்பது தான் கேள்வி.

அவளது பதில்: b=mx+y / mx என்று இருந்தது.

அந்த கணக்கை மீண்டும் செய்யச் சொன்னேன். மீண்டும் அதே பதில் தான் எழுதினாள். ஏதோ தன் steps-ஐ explain-ம் செய்தாள்.

சரி பிள்ளைக்கு புரியவில்லை என்று கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.

இல்லை. நீங்கள் சொல்வது தவறு. இது தான் சரி. இப்படித்தான் எங்கள் டீச்சர் சொல்லித் தந்தார்கள், என்று அடம் பிடித்தாள்.

நானும் விடுவதாய் இல்லை. என் விளக்கத்தை மீண்டும் எடுத்துரைத்தேன். b=y-mx என்று.

எங்கள் டீச்சர் சொல்லியிருக்கிறாங்க, multiplied numbers-ஐ equavation-க்கு அடுத்த side கொண்டு போணும்னா divide பண்ணனும், என்று நிறைய பேசினாள்.

இதில் வேறு, 'உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்கள் இந்தியாவில் படித்திருக்கிறீர்கள். இது அமெரிக்கா. இங்கு வேறு மாதிரி', என்று விளக்கம்.

எதுவும் பலிக்காத பட்சத்தில் நோட்டை தூக்கிக்கொண்டு பத்தாம் வகுப்பில் படிக்கும் தன் அக்காவிடம் கொண்டு சென்றாள்.

அக்கா என்ன படித்திருந்தாளோ என்னவோ, "ஆமாம் நீ சொல்வது தான் சரி" என்று சொல்லி விட்டாள்.

எனக்கு தலையே சுற்றி விட்டது, 'நீயுமா?' என்று.

அவளை விட்டு விட்டு இனி இவளுக்கு விளக்க ஆரம்பித்தேன். இவள் புரிந்து கொண்டால் அவளை விளக்கி விடுவாளே என்ற யோசனையில்.

சரி, 100 = 25+b என்று இருந்தால், what is b? என்றேன்.

அது 75 என்றார்கள் டான் என்று.

சரி, அப்படியானால், y=mx+b என்பதும் அதே ரீதியில் செய்ய வேண்டியது தானே என்றேன்.

Mommy, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? mx means m is multipled by x. It is not a single whole number என்றார்கள்.

சரி, அப்படியானால், 100= 5X5 +b என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போ பதில் என்ன? என்றேன். பதில் இல்லை.

இது அக்கா காரியை கொஞ்சம் யோசிக்க வைத்தது. "ம்ம்ம்... நீங்கள் சொல்வதும் சரி போல் தான் இருக்கிறது. Sharon சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது", என்றாள்.

Sorry Mommy, எனக்கு தலை ஓடமாட்டேங்கிறது. தூக்கம் வருகிறது" என்று தப்பிக்க பார்த்தாள்.

"இதை புரிந்து கொண்டு தூங்கினால் போதும்", என்று ஒரு பேப்பரும் pen-னுமாய் அவளை தொடர்ந்தேன்.

ம்ஹூம் கொஞ்சமும் பயன் இல்லை. குழம்பித்தான் போயிருந்தார்கள்.

திடீரென்று flash back-ல் கணக்கு பாடம் படிக்க அம்மாவை நான் படுத்திய பாடு வந்து போகவே சத்தமாய் சிரித்தே விட்டேன்.

அவளைத்தான் சிரிப்பதாக எண்ணிக்கொண்டு, கோபமாய் "உங்களை விட Daddy-க்கு கணக்கு நல்லா தெரியும்", என்று Daddy-யிடம் கொண்டு சென்றாள்.

மற்றவள் இது தான் சாக்கு என்று தப்பித்தாள்.

டாம் டூம் என்று கீழிருந்து பலவித சத்தங்கள் கேட்டன. Daddy-யாச்சு மகளாச்சு என்று விட்டு விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தாள் முகத்தை நீளமாக வைத்துக்கொண்டு.

'என்ன மக்களே ஆச்சு. புரிஞ்சிச்சா பிள்ளைக்கு' என்றேன்.

அவ்வளவு தான். அழுதே விட்டாள்.

"Daddy-யும் நீங்கள் சொல்வது தான் சரி என்கிறார்கள். நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன்" என்றாள்.

'I hate Algebra. I hate Math. I don't understand anything' என்று ஆரம்பித்தாள்.

சரி சரி இனியும் ஏதாவது சொல்லி விஷயம் விபரீதமாக மாறி விடக்கூடாதே என்ற பயத்தில், 'That's alright மக்களே. Go to bed now. Ask your teacher to explain it to you tomorrow' என்றேன்.

மறு நாள் மாலையில், 'So, what happened with that problem?' என்று வினவினேன்.

'Yeah. She explained it' என்றாள்.

'Wasn't I right?' என்றேன் ஆர்வமாய்.

'No! Daddy was!' என்றாள் அழுத்தமாய்.

கவலையே வேண்டாம். இவள் பிழைத்துக்கொள்வாள். என்று நிம்மதி பெருமூச்சொன்று தானாய் வந்தது.

மூத்தவள்? அவளும் பிழைத்துக்கொள்வாள். கவலையை விடுங்கள்.

சின்னவன்? அவனும் தான். கட்டாயமாய்.

~ NRIGirl

வட்டத்தின் மையம்

2 comments

வட்டம் வட்டமாய் நம் உலகம்... என்ற பதிவின் தொடர்ச்சி...

வட்டங்களின் விளிம்புகளில்
சுழல்கிறோம் சரி, வட்டத்தின் மையம் தான் என்ன? நானா? நீங்களா?

நல்ல கேள்வி. இரண்டும் இல்லை என்பது தான் சரியான பதில்.

நானும் இல்லை, நீங்களும் இல்லை, வட்டத்தின் மையத்தில்.

ஒவ்வொரு வட்டத்தின் மையமும் வட்ட உறுப்பினர்களின் பொதுவான
கருத்துக்களே. எந்த காரியத்தை அடிப்படையாக கொண்டு அந்த வட்டம் வரையப்பட்டதோ அந்த பொதுவான காரியமே, வட்டத்தின் மையம்.

கல்லூரி வட்டங்களின் மையம் கல்லூரி. சபை வட்டங்களின் மையம் இறைவன்.

கல்லூரி மேல் உள்ள பற்று தானே கல்லூரி நண்பர்களை கூடி வர செய்தது? கல்லூரி தானே அவர்கள் வட்டத்திற்கு காரணமாயிருந்தது? கல்லூரி காலங்கள் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த வட்டத்தின் உறுப்பினர்கள் கூடி வரும்போது அதிகம் பேசப்படுவது அந்த கல்லூரி நாட்களே. அவர்கள் உரையாடல்கள் பெரும்பாலும் கல்லூரியும் அதை சுற்றியுமே. கூட படித்தவர்களின் கதைகள், சேர்ந்து திரிந்த நாட்கள், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பற்றியே.

இப்படியாக தெரு முனைகளில் கூடும் நம் அண்டை வீட்டாரின் வட்டம் - அதின் மையம் அந்த தெரு தானே. குப்பை லாரி வந்ததா? நல்ல தண்ணீர் வருகிறதா? அடுத்த வீட்டில் புதிதாக குடிவந்திருப்பவர் எந்த ஊர் காரர்? என்று தெருவை சுற்றியே அவர்கள் பேச்சு.

ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒவ்வொரு மையம்.

ஒவ்வொரு வட்டத்திற்கும் வெவ்வேறு உறுப்பினர்கள்.

அனைத்து வட்டங்களிலும் ஒற்றை பொது அம்சம் நாம் ஒவ்வொருவரும் தான்.

அதனால் தான் நாம் வட்டங்களின் விளிம்புகளில் சுழல்கிறோம்.

நம்முடைய இந்த வட்டங்களே நம் முகவரி. நம் வட்டங்களே நம் அடையாளம். இந்த வட்டங்கள் தானே நம் சந்தோஷம்.

வட்டத்தில் இருந்து மீண்டு புள்ளியாய் நிற்பது கூடாத காரியம். அப்படியே கூடினாலும் நம் முகவரியை தொலைத்திருப்போம். அடையாளத்தை களைந்திருப்போம். சந்தோஷத்தில் குறைந்திருப்போம்.

அதனால் சுழல்வோம் சந்தோஷமாய். நம் வட்டங்களில் உற்சாகமாய். ஓட்டமும் நடையுமாய்.

அப்படியே நானும்,
~ NRIGirl

வட்டம் வட்டமாய் நம் உலகம்

1 comments

தனி மரங்கள் இல்லை நாம் தோப்புகள். தீவுகள் இல்லை நாம் தீபகற்பங்கள். வெறும் புள்ளிகள் இல்லை நாம் வட்டங்கள்...

நிற்க தோழி! சென்ற பதிவில் என்னவோ தனிமையே இனிமை என்பது போல் எழுதியிருந்தீர்களே; இன்று முரணாயிருக்கிறதே உங்கள் கருத்து?

நன்றி சகோதரா(ரி)!

நீங்கள் என் பதிவுகளை வாசிக்கிறீர்கள், யோசிக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அது அன்றைய என் மன நிலை. இது என்றுமே நம் அசல் நிலை. மனமும் அசலும் அவ்வப்போது கொஞ்சம் முரண்படுவது சகஜம் தானே?!

நீங்கள் ஆட்சேபிக்காமல் ஆமோதிக்கிறதினால் தொடருகிறேன் என் கருத்தை...

பொதுவாய் தன், தனி, தான் என்று நாம் தனித்தியங்கினாலும், வட்டங்களில் சுழலும் கூட்டு வாசிகள் நாம் என்பதை மறுக்க முடியாது.

சிறு வயது தொடங்கி வயதில் முதிரும் வரை வட்டம் வட்டமாய் நம்மை சுற்றி பல வட்டங்களை வரைந்து கொள்கிறோம் நாம்.

சொந்தங்களின் வட்டம். நட்புகளின் வட்டம்.  பள்ளி பருவத்தில் வரைந்த வட்டம். கல்லூரி நண்பர்களின் வட்டம். வேலை ஸ்தலங்களில் வட்டம். தெருமுனைகளில் வட்டம். விரும்பி நேயர்களின் வட்டம், வலை தல உலகில் வட்டம். தூர தேசத்தில் வட்டம். சமீபத்தில் வட்டம். நெருங்கின வட்டம். சுருங்கின வட்டம்...

நம்மை பெற்றோரின் நண்பர்கள் என்றொரு வட்டம், நாம் பெற்றவர்களின் நண்பர்கள் என்றொரு வட்டம். புதிய வட்டங்கள். பழைய வட்டங்கள். சிறிதாய், பெரிதாய் பல்வேறு வட்டங்கள்.

இந்த வட்டங்கள் அனைத்தும் பொதுவாக நம்மை சுற்றி நாமே வரைந்து கொண்டதாலோ என்னவோ, நம்மை சுற்றியே அவை இயங்குவதாய் நமக்கொரு எண்ணம். ஆனால் நிஜம் என்னவோ, நாம் தான் இந்த வட்டங்களின் விளிம்புகளில் இயங்குகிறோம்.

பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது போலத்தான் நாமும் தன், தனி, தான் என்று நம்மை நாமே சுற்றிக்கொண்டு நம்முடைய வட்டங்களையும் சுற்றி வருகிறோம்.

காலப்போக்கில் நெருங்கின வட்டங்கள் விரிவதும், விரிந்த வட்டங்கள் சுருங்குவதும், தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

விளிம்புகளிலேயே சுற்றிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் நெருங்கி வந்த நட்புகளின் வட்டங்கள் சிறிதாய் இருப்பதால் நம்முடைய சுழற்சியும் அதிகமாய் இருக்கிறது அவர்களை சுற்றி.

விளிம்புகளில் இருந்து அகன்று சென்ற நட்புகள் விரிசலாய் விரிந்து அகலமாய், தூரமாய், வெகு தொலைவில் சென்று விடுவதால், நம்முடைய சுழற்சியும் வெகுவாய் குறைந்து காலப்போக்கில் நின்றே விடுகிறது அவர்களை சுற்றி.

இப்படி நாம் வட்டங்களை வரைந்து கொண்டிருக்க, நம்மை வட்டங்களில் வரைந்து கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள். அவர்கள் வட்டங்களில் நாம் நெருங்கி செல்வதும் அகன்று செல்வதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

ஓட்டமும் நடையுமாய், வட்டங்களின் விரிசல்களை தவிர்க்கத்தான் முயற்சிக்கிறோம். முடியாத போது கை விரித்து நிற்கிறோம்.

அதற்காய் வருந்தி புள்ளியாய் மாறி மறைந்து விடுவதில்லை நாம். நெருங்கின வட்டங்களில் இன்னும் நெருங்கிக்கொள்கிறோம். அது கூடாத பட்சத்தில் புத்தம் புதிதாய் ஒரு வட்டம் வரைகிறோம். நான், நீ, நீங்கள், நாம் என்று...

...

இந்த இடத்தில் நிறுத்தி மேற்கொண்டு எழுதியவற்றை வாசிக்க, "அட! பரவாயில்லயே!" என்றொரு எண்ணம் தோன்ற, ஏதோ என்னை சுற்றி ஒரு ஒளி வட்டம் நானே வரைய தொடங்க, "போதும் இந்த போக்கு!!", என்று நிறுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம்...

உங்களில் யாரேனும் இந்த வட்டத்தின் விட்டத்தை விரிவாக்கினால் பெரும் உதவியாயிருக்கும். நான் கொஞ்சம் சிரமம் எடுத்து ஒளி வட்டத்தை கிறுக்க முயற்சிக்கிறேன்...

ஒருவேளை யாரேனும் முன்வராத பட்சத்தில், அடுத்த பதிவில் தெளிந்த சிந்தையுடன் தொடருகிறேன்  மீதமுள்ள என் கருத்தை......

உங்கள் வட்டத்தில் என்றும்,
~ NRIGirl

நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை

0 comments

ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது படகு. எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம்.

தனிமையாய் நிற்கிறது படகு. நல்லவேளையாய் படகினுள் நாங்கள் குடும்பமாய் இருப்பதினால் சந்தோஷத்திற்கு குறைவில்லை. ஆனாலும் ஒரு உறுத்தல், எங்கே போனார்கள் நம் நண்பர்கள் என்று.

என்னவாயிருக்கும்? நாம் என்ன தான் சொல்லிவிட்டோம் அல்லது செய்துவிட்டோம், அவர்கள் கோபித்துக்கொள்ள? என்று சின்னதாய் ஒரு எண்ணம் இல்லாமல் இல்லை.

ஆற அமர யோசித்துப்பார்த்ததில் மாற்றம் என்னிடம் தான், நண்பர்களிடம் இல்லை, என்பதை புரிந்து கொண்டேன்.

அவர்கள் எப்பொழுதும் போல் தான் இருக்கிறார்கள். அதிகம் கண்டுகொள்ளாமல். பட்டும் படாமல். தொட்டும் தொடாமல்.

நான் தான் மாறியிருக்கிறேன் சமீப காலங்களில். எதிர்பார்ப்பற்று நட்பு கொண்டாடிய நான், இன்று கொஞ்சம் எதிர்பார்க்கத்தொடங்கி விட்டேன், அது தான் மாற்றம்.

சேர்ந்து விளையாட சென்றார்கள் எங்களை கூப்பிடவில்லை, எல்லோரும் கடலுக்கு போனார்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை, என்பதாய் எனக்குத்தான் மனவருத்தங்கள் அவர்களிடம்.

என்னிடம் அவர்கள் கோபித்துக்கொள்ளவில்லை, இல்லவே இல்லை; நான் தான் அவர்களிடம் கோபித்துக்கொண்டிருக்கிறேன், ஒரு துளி அன்பில்லை என்று.

என்னை அவர்கள் ஒதுக்கவில்லை, இல்லவே இல்லை; நானாகவே கொஞ்சம் ஒதுங்கி நிற்கிறேன், போதும் இவர்கள் நட்பு என்று.

இந்த வருத்தங்கள் தீர வேண்டுமானால், என் எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறைய வேண்டும்.

'கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்' என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன் நான்.

'கொடுங்கள்' என்பது மட்டுமே எனக்கான கட்டளை. 'உங்களுக்கு கொடுக்கப்படும்' என்பது இறைவனின் பொருத்தனை. அதை மக்களிடம், குறிப்பாக நம் நண்பர்களிடம் எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு.

இப்படி தேவையற்ற எதிபார்ப்புகளை கொண்டிருப்பவர்களை பற்றித்தான் வேதத்தில் வாசிக்கிறோம்: "இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து: உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.", என்று. (மத்தேயு 11:16-17)

இப்படியாகத்தானே இருக்கிறது நண்பர்களிடம் நான் கொண்டுள்ள குறைகளும்?

எங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று என்ன கட்டாயம்? கூப்பிட்டால் சந்தோஷம், கூப்பிடாவிட்டால் அதைவிட சந்தோஷம் என்று தானே இருக்க வேண்டும்? தந்தால் நன்றி, தராவிட்டால் மிக்க நன்றி என்ற மன பக்குவம் தானே வேண்டும்?

தேவையில்லா எதிர்பார்ப்புகள் ஏன்? வீண் வருத்தங்கள் ஏன்? வெறும் குறைகள் தான் ஏன்?

நம்மை சுற்றியா அவர்கள் உலகம்? நண்பர்களை சுற்றியா நம் உலகம்? அவ்வளவு சின்னதா நம் உள்ளம்?

பரந்து விரிந்த உலகில் நம் எல்லைகள் ஏன் குறுக வேண்டும்?

ஓரமாய் ஒதுங்கி வேடிக்கை ஏன்? துள்ளலாய் நீந்தி மகிழத்தானே வேண்டும்?

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க...

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும்...

(இதைத்தான் சொல்ல வந்தேன் சில இடுகைகளுக்கு முன், "ஓரம் கட்டின அனுபவங்கள்" என்ற தலைப்பில்.

சொல்லவந்ததை சொல்லாமல் மழுப்பி விட்டதாய் ஒரு நெருடல், அதனால் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்திருக்கிறேன் இந்த பதிவில்...

சொல்லவந்ததை சொல்லிவிட்ட பட்சத்தில், சொல்லாமல் மழுப்பிய என் பழைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்: ஓரம் கட்டின அனுபவங்கள்)...

கொஞ்சம் உங்களோடு,

~ NRIGirl

பார்க்க என்னவோ ராஜாங்கம் தான்...

6 comments

பட்டத்து இராணி அவள். அமைதியான நாடு. சீமை அமைந்திருப்பதோ அமெரிக்காவில். எதிரிகள் தொல்லை, உற்பூசல் ஒன்றும் இல்லை. நிதி நிலமை சீர்வரிசை எள்ளளவும் குறைவு இல்லை.

பார்க்க என்னவோ ராஜாங்கம் தான். ஆனால் இராஜாவும், இராணி, இளவரசர் மற்றும் இளவரசிகளையுமே கொண்டது அவள் ராஜியம்.

தந்திரி என்றோ மந்திரி என்றோ சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை. தேரடிக்கவோ, போரடிக்கவோ, பணிவிடைக்கு யாரும் இல்லை.

ஒரு நாளின் இறுதியில் இராஜாவுக்கு ஒரு காப்பி வேண்டுமானால், இராணி தான் கலக்க வேண்டும். இராணிக்கு ஒரு தேவை என்றால் இராஜா தான் உதவ வேண்டும்.

சிங்காசனத்தில் இருந்து இருவரும் இறங்கியே ஆக வேண்டும்.

ஒரு பண்டமோ பணியாரமோ இராணி தான் ஆக்க வேண்டும். 'யார் அங்கே? ஒரு காப்பி!' என்றெல்லாம் கை தட்டி கூப்பிட்டு ஒரு வேலை ஏவ முடியாது. முறுக்கா பணியாரமா இராணி தான் செய்ய வேண்டும்.

பாவம், ஆக்கி எடுத்து வளர்ந்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும். செல்லமாக வளர்ந்து விட்டிருந்தாள் இராணி. அதனால் கொஞ்சம் சிரமம் தான்.

அன்று அப்படித்தான் இராணி முறுக்கு சாப்பிட ஆசைப் பட்டாள். சூடான எண்ணையில் நேராகவே பிழிந்து நின்றாள். என்ன பதம் தவறியதோ, மாவு அச்சிலேயே ஒட்டி நின்றது. 'இராஜா! உதவி தேவை' குரல் எழுப்பினாள் இராணி. ஓடி வந்த இராஜா வேகமாக அடுப்பை அனைத்தார்.

'என்ன காரியம் செய்தாய் மகாராணி? முறுக்கு ஏன் பிழிந்தாய்? தேவையா இந்த
பிரச்சனை நமக்கு', என்று பதறினார்.

'பிள்ளைகள் விரும்புவார்களே என்று...' கொஞ்சம் இழுத்தாள் இராணி.

'அது தான் கடைகளில் கிடைக்கிறதே?', இராஜா அலறினார்.

'இல்லை, சுடச்சுட செய்து அப்படியே சாப்பிட்டால்...'.

'சூடாவது ஒன்றாவது. இருக்கிற மாவை ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கள் போதும்', என்றார் கராராய்.

இராணி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாள், அல்லது ஓய்வெடுப்பதாய் காட்டிக்கொண்டாள். இராஜாவும் பிள்ளைகளும் அக்கம் பக்கம் நகரவே மீண்டும் அடுப்பறைக்கு வந்தாள்.

பிசைந்து வைத்த மாவு பாவம் போல் உட்காந்திருக்கிறதை கண்டாள். 'முறுக்கு வரவில்லயென்றால் சீடை, இரண்டும் ஒரே ருசி தானே' என்று உற்சாகாமாய் ஆரம்பித்தாள் வேலையை. (ஆசை யாரை விட்டது?)

முதல் சுற்றிலேயே எள்ளும் கொள்ளும் வெடித்தன. பட் பட் என்று அங்கும் இங்கும் தெறித்தன சீடை உருண்டைகள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தார்கள்.

'பிரச்சனை ஒன்றும் இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். இராஜாவை தொந்திரவு செய்யவேண்டாம்', உத்தரவிட்டாள் இராணி. கேட்டால் தானே?

ஓடிச் சென்றார்கள் இராஜாவினிடத்தில். 'அம்மா உங்கள் சொல் கேட்கவில்லை. மீண்டும் அடுப்படியில் நிற்கிறார்கள், பண்டம் செய்ய', என்று வத்தி வைத்தார்கள். போன வேகத்தில் இராஜாவும் பிள்ளைகளுமாக திரும்பி வந்தார்கள்.

இம்முறை இராஜாவின் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

'போதும் மகாராணி. நீங்கள் பண்டம் செய்து தரவில்லை என்று யாரும்  குற்றம் சொல்ல மாட்டோம். இருக்கிற உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்து அமருங்கள் உங்கள் ஆசனத்தில்', என்றார் சற்று கோபமாய்.

மாவையும் காலி செய்தார் குப்பையில்.

'சரி போகட்டும்' என்று விட்டு விட்டாள் முறுக்கு ஆசையை, இராணி மகாராணி.

மற்றொரு நாள் இப்படித்தான் புட்டு செய்ய மாவு விரசினாள் இராணி. அண்டை நாட்டு இராஜாவும் இராணியும் விருந்துக்கு வந்திருந்த நேரம் அது. ஒரு குழல் அவிக்கவும் செய்தாள். எப்போதும் நன்றாக வரும் புட்டு அன்று ஏனோ அக்கிரமம் செய்தது.

விருந்தினர் முன்பு அதை எதிர்பார்க்காத இராணி, புட்டு இல்லையென்றால் இடியாப்பம் என்று மாவை மாற்றி பிசைந்தாள், ஏதோ இடியாப்பம் தனக்கு கை வந்த கலை மாதிரி.

காத்திருந்தனர் விருந்தினர்.

பொறுக்க மாட்டாத இராஜா, எதற்கும் ஒரு begal சாப்பிட்டு வையுங்கள், இனி இடியாப்பம் வர விடிந்து விடும் என்று நண்பர்களையும், இராணியையும் கவணித்து வைத்தார்.

நல்லதாய் போயிற்று. ஏனென்றால், இடியாப்பமும் பிரச்சனை செய்தது அன்று. (என்றுமே இடியாப்பம் பிரச்சனை தானே!)

சொன்னால் நம்ப மாட்டீர்கள்; கடைசியில் கொழுக்கட்டையாக மாறி நின்றது புட்டு மாவு!!

நண்பர் சிரித்தே விட்டார் - அவரும் தான் எவ்வளவு பொறுப்பார்? இராணிக்கு அதில் ஒரு சங்கடமுமில்லை என்பது போல் காட்டிக்கொண்டாள். சேர்ந்து சிரிக்கவும் செய்தாள் (பாவம் விட்டால் கொஞ்சம் அழுதிருப்பாள்).

விருந்துக்கு வந்திருந்த இராணியும் தான் அப்படித்தான் ஒரு நாள் இட்டிலி என்று ஆரம்பித்து அது உப்புமாவில் போய் நின்ற கதையை சொன்னார்.

அது தான் சாக்கு என்று வடை போண்டா ஆன கதையையும், தொவையல் சட்டினி ஆன கதையையும் பெருமையாய் பறிமாறிக்கொண்டார்கள் நம் இராஜாவும் இராணியும்.  மீண்டும் சிரித்து வைத்தார்கள் அனைவரும்.

ஆக வந்த விருந்தினருக்கு வயிற்றுக்கு உணவிட்டார்களோ இல்லையோ சிரிப்பிற்கு இட்டார்கள் உணவு. மாறி மாறி பரிமாறினார்கள். பாவம் நண்பர்கள். அன்று போனது போனது தான், இது வரை மீண்டும் வரவேயில்லை என்பது கூடுதல் செய்தி.

இப்படியாக நடக்கிறது ராஜாங்கம். ஒரு வாய்க்கு ருசியாக முறுக்கோ, காப்பியோ, தண்ணியோ சாப்பிட்டு வருஷம் எத்தனை ஆகிறது?!

இதற்காகத்தான் இராணிக்கு இந்தியா மீது ஆசை. கையை சொடுக்கினால் முறுக்கு, பண்டம், பணியாரம், சுடச்சுட காலை பலகாரம், அற்புதமாய் ஏற்ற சூட்டில் தேவையான இனிப்பில் அருமையாய் கையில் காப்பி, வேறு என்ன வேண்டும் என்று வினவி நிற்கும் சுற்றம், ...

ஆக்க முடியாத பட்சத்தில், அதை விட சுலபமாய் கடையில் கிடைக்கிறதே, நமக்கேற்ற ருசியில்?!


ம்ஹூம்... கொடுத்துவைத்திருக்க வேண்டும் அதற்கெல்லாம்... என்ன சொல்கிறீர்கள்?!

ஓரம் கட்டின அனுபவங்கள்

2 comments

வெறுமையாய் இருக்கிறது மனது, வெளியில் தெரியும் வானம் போலே. 

எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம். 

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க... 

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும். 

அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருள் பிள்ளைகள் கைபட்டு உடைந்து விட்ட போதும், பிள்ளைகள் மனம் உடைந்து விடக்கூடாதே என்பதில் கவனம் திரும்பும். "பரவாயில்லை, போகட்டும்", என்று மனது ஆறுதல் கொள்ளும். 

அழுக்காய் கிடக்கிறது வீடு. "அதற்கென்ன இப்பொழுது. சுத்தம் செய்தால் ஆயிற்று. நம் வீடு. நாம் தானே செய்ய வேண்டும்", என்று மேலும் சமாதனம் செய்யும். 

மடிக்க வேண்டிய துணிகள் பெருகிக் கிடக்க, மனம் ஏனோ இன்று படம் வரைவதில் மும்முரம் காட்டும். 

விடாப்பிடியாய் ஒலிக்கும் தொலை பேசியின் கைபேசியை வீட்டின் மூலைகளில் நிதானமாய் தேடும். 

காலையில் அலாரம் வைக்க மறந்த கணவரை மலர்ந்த முகத்துடன் வாழ்த்தும். அலுவலகத்தில் தாமதத்தை அருமையாய் விளக்கும் - "கொஞ்சம் தூங்கி விட்டேன்", என்று. 

நீண்டு கொண்டே போகும் பிள்ளைகளின் கதைகளில் உண்மை ஆர்வம் காட்டும். 

மலர்ந்து நிற்கும் மல்லிகைப் பூக்களை ஆசையாய் மணக்கும். உதிர்ந்து கிடக்கும் பூக்களை விரல்கள் கேசத்தில் சொருகும்.  

அமைதி நிலவும் புல்லின் வெளியில் கொஞ்சம் தலை சாய்க்கும். 

வெறுமையாய் விரிந்த வானத்தின் அழகை கண்கள் ருசிக்கும். ஒரு திட்டில்லாமல் ஒரே சீராய் அமைந்த ஊதா நிறத்தை நெஞ்சம் ரசிக்கும்.  

எனக்காகவே, என் ஒருத்திக்காகவே தினமும் மாற்றப்படும் இந்த ஆகாய ஓவியத்திற்காய் மனம் நன்றி சொல்லும். இறைவனின் கலைநயத்தை எண்ணி எண்ணி வியக்கும். 

சிரிப்பும், களிப்பும், கும்மாளமும், உல்லாசமும் வெகு விரைவில் மீண்டும் தொடரும். 

அது வரை நெஞ்சம் இளைப்பாறும், கொஞ்சம் உங்களோடு...

Wish we were camping... :(

2 comments


"ஒரு பெரீய மல, அத தாண்டி போனா ஒரு பெரீய கடல். அதையும் தாண்டி போனா இன்னொரு பெரீய மல. அப்புறம் இன்னொரு பெரீய கடல். இப்படி ஏழு மலயும் ஏழு கடலும் தாண்டி போனா அங்க ஒரு அழகான ஆறு...", இப்படித்தான் ஆரம்பிக்கும் பெரும்பாலும், சங்கரம்மாள் பாட்டியின் கதைகள்.

சிறு பிள்ளைகள் நாங்கள் கண்கள் அகல மனதில் பெரிய, பெரிய கடல்களும், மலைகளும் வந்து போக இந்த கதைகளில் ஆர்வம் கொள்வோம்.

நான் அநேகமாக இந்த வரிகளிலேயே தங்கி விட்டிருப்பேன் போலும், ஏனென்றால் எத்தனை முயன்றாலும், இதற்கு மேல் என்ன கதை சொன்னார்கள் என்பது நினைவில் வர மறுக்கிறது, ஏதோ ஆரம்பித்த வேகத்தில் கதை முடிந்து விட்டது போல...

கனவுகள் நிறைவாகும், நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சங்கரம்மாள் பாட்டியின் கதைகளும் நிறைவாகியிருக்கிறது கடந்த நாட்களில்.

சொல்கிறேன்...

சென்ற வாரம் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட முன்னூறு மைல் தொலைவில் உள்ள Lake Placid சென்று வந்தோம், சில நண்பர்கள் சூழ. வீட்டில் நான் அடுப்பறையில் வைத்திருக்கும் கரும்பலகையில் பெருமிதமாய், "Gone Camping! :)" என்று எழுதி வைத்துவிட்டு ஆரம்பித்தோம் பயணத்தை.

எத்தனை எத்தனை மலைகள் தாண்டி! எத்தனை எத்தனை கடல்கள் தாண்டி! எத்தனை எத்தனை அழகு இந்த உலகம்!! அதிலும் எத்தனை அழகு இந்த இடம்!!! Lake Placid ஒரு கண் கொள்ளா காட்சி தான்.

எத்தனை தான் சிறப்பான camera வைத்திருந்தாலும் அத்தனை அழகையும் புகைப்படமாக்குவது வெகு சிரமமாகப்பட்டது. ஆதலால் camera-வை கை விட்டு கண்களில் நிறைத்தோம் கதை உலகை. மனதுகளில் நுழைத்தோம் மலைகளின் அழகை.

கூடாரமடித்து குதூகலித்தது கூடுதல் கொண்டாட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கூடாரம்.

நாங்கள் சென்றடையும் போது மழை பெய்து கொண்டிருந்தது. அதை சற்றும் பொருட்படுத்தாது கூடாரம் அடிக்க துவங்கினோம். துவங்கினோம் என்று சொல்வதை விட துவங்கினார்கள் என்று சொல்வது தான் சரி, ஏனென்றால் நாங்கள் பெண்கள் குடை பிடித்து நின்று வேடிக்கை பார்த்ததோடு சரி. மழையில் நனைந்து கூடாரம் அடித்தது எங்கள் கணவர்கள் தான்.

ஒரு நரி பதுங்கி பதுங்கி மழையில் ஒதுங்கியது கண்டு கொஞ்சம் கலவரமும், நிறைய சந்தோஷமுமானோம். இரவில் தான் நண்பர் விளக்கினார், "'நரி முகத்தில் முழித்த மாதிரி' என்று ஒரு பழமொழி இருக்கிறது. நரியை பார்த்தது ஒரு அதிர்ஷ்டம் என்று."

அதிர்ஷ்டம் தான் போலும்! கூடாரம் முடிக்கவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. கொண்டு வந்த படுக்கை மற்றும் சாதனங்களை கூடாரத்தில் வைத்து விட்டு, இரவு உணவு பற்றி யோசிக்க ஆரம்பித்தோம். நெருப்பு மூட்ட ஆரம்பித்தார்கள் பிள்ளைகள்.

தோழி மணக்க மணக்க சமைத்திருந்த கோழி குருமாவும், ரசமும், நாங்கள் கொண்டு சென்றிருந்த சப்பாத்தியும், சுட சுட பொங்கிய சோறும், வயிறையும் மனதையும் நிரப்பியது. சாப்பிட்ட திருப்தியில் நெருப்பின் அருகில் கொஞ்ச நேரம் கதைத்தோம். கதைத்த களைப்பில் உறங்கிப்போனோம்.

விடிந்ததும் விடியாததுமாய் (விடிந்தது எங்களுக்கு, விடியாதது இன்னும் உறங்கும் பிள்ளைகளுக்கு) பகல் உணவுக்கு கொண்டு வந்திருந்த ரொட்டி, muffin, வகையறாக்களை ஒரு பிடி பிடித்தோம். காணாத குறைக்கு கொண்டு சென்றிருந்த தோசை மாவை ஊற்றி தோசையாகவும் இல்லாமல், ஊத்தப்பமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் ஒரு பதமாக சமைத்து அதையும் உள்ளே தள்ளினோம்.

பிள்ளைகள் முழித்து வரவே, அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கிறோம் என்ற பெயரில் இன்னும் ஒரு வட்டம் கட்டினோம். இவ்வளவும் சாப்பிட்டு இன்னும் ஏப்பம் விடாத நிலையில் மதிய உணவு குறித்து ஆலோசிக்கலானோம்.

இருக்கவே இருக்கிறது புதிதாய் பொங்கின சோறு. கூடவே இருக்கிறது மீதியுள்ள கோழி குழம்பு. போதா குறைக்கு புளியோதரை mix-ம், கொண்டு சென்ற ஊறுகாயும், chips-ம். முடித்து குளித்து கிளம்பி Lake Placid-க்கு சென்றோம், சுதந்திர தினத்தை கொண்டாட.

வெளிச்சம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் குளிரும் காற்றும் சுற்றி வளைத்து அடித்தது. கிளம்பி விடலாமா என்று யோசிக்கும் போது தான் நான் ஆசையாய் செய்து கொண்டுபோயிருந்த cake நியாபகம் வந்தது.

Cake என்பது பெயரில் தான். சரி ருசியிலும். ஆனால் பார்க்க என்னவோ பரிதாபமாய்தான் இருந்தது. யாரும் அதை குறை சொல்லவில்லை. ஏனென்றால் அவ்வளவு பசி, மன்னிக்கவும் ருசி!

பிள்ளைகள் lake-ல் மீன் பிடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பாவம் போல சின்னதாய் 7 மீன்கள் அவர்களிடம் மாட்டியிருந்தன. கிடைத்த வரையில் கொண்டாட்டம் என்று உற்சாகாமாய் கிளம்பினோம் வான வேடிக்கை பார்க்க.

இந்த குளிரில் எங்களால் இருக்க முடியாது என்றும், திரும்பி போய் விடுவோம் என்றும், வயிறு பசிக்கிறது என்றும் பலவாறாக பிள்ளைகளும் பெரியவர்களும் குரல் எழுப்பவே நண்பர் சமாதானம் செய்தார், "இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது, வான வேடிக்கை துவங்க. அதற்குள் சாப்பிட்டிட்டு வந்திரலாம்" என்று. "கட்டாயமாய்", என்றவாறு கிளம்பினோம் ஏதோ சாப்பிட்டு ஐந்தாறு நாட்கள் ஆன மாதிரி.

வாய்த்தது சைனீஸ் தான். ஏனோ இறங்கவில்லை. எப்படி இறங்கும் - விடாமல் தொடர்ந்து சாப்பிட்ட களைப்பில்? அதை யோசிக்காமல் சாப்பாட்டை குறை சொல்லிவிட்டு மீண்டும் ஏரிக்கரைக்கு வந்து அமரவும், இருட்டி விட்டிருந்தது.

எட்டு வயது சிறுமி ஒருத்தி கணீரென்று ஒலிபெருக்கியில் தேசிய கீதம் (Star spangled banner) பாட, கூடி வந்திருந்த மக்கள் அனைவரும், நாங்களும் கூட கொடியை நோக்கி நின்று, வலது கையை இதயத்தில் வைத்து கொடி வணக்கம் செய்தோம்.

பாடல் அறிந்த எங்கள் பிள்ளைகளும் சேர்ந்து பாட பெருமிதம் கொண்டோம். ... Oh, say does that star-spangled banner yet wave O'er the land of the free and the home of the brave?- என்ற வரிகளை பாடும்போது சற்றே சிலிர்த்து நின்றோம்.

வான வேடிக்கை துவங்கியது. ஏங்கப்பா, என்ன வானம், என்ன வெடி, என்ன வேடிக்கை! நொடிகளில் தோன்றியும் மறைந்தும் வேடிக்கை காட்டியது வெடிகள் வானில்.

என் மனதில் சிறு பிள்ளை கும்மாளங்கள் அடங்கி இறைவன் இயேசு மீண்டும் வரும் நாட்கள் பற்றி நினைவு வந்தது, "இப்படித்தான் இருக்கும் போலும். நடு வானில். மின் வேகத்தில். நொடிப் பொழுதில். தோன்றின பொழுதில் மறைய. கூட நாமும் செல்ல. எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில். அப்பப்பா!"

சிந்தனைகள் சிதற கிளம்பினோம் கூடாரம் நோக்கி. சாப்பிட்ட களைப்பு தான். நல்ல உறக்கம்.

மறு நாள் மீதி பண்டங்களை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பினோம் ஆற்றை நோக்கி. கொக்கியும் கையுமாய் காத்திருந்தது தான் மிச்சம். ஒற்றை மீனையும் காணோம்.

பரவாயில்லை. சமாதானம் ஆனோம். ஆற்றின் நீரில் ஆசை தீர விளையாடி மகிழ்ந்தோம்.

மீண்டும் கூடாரம், சமையல், சாதம், காய்கறிகளும் பிரமாதம்...

"இல்லை இது போதாது, உங்கள் இந்திய சாப்பாடை தொடர்ந்து எங்களால் சாப்பிட முடியாது. எங்களுக்கு வேண்டும் எங்கள் சாப்பாடு. அமெரிக்க சாப்பாடு.", என்று பிள்ளைகள் குரல் எழுப்பவே, உணவு விடுதி தேடி சென்றோம். வசமாய் மாட்டியது Hungry Trout - அருமையான சூழலில் அமர்ந்திருந்த அழகான restaurant.

எப்படி இருக்குமோ என்று தான் சென்றோம். பொரித்தோ அவித்தோ வைத்திருந்தார்கள் முழு மீனை. கூடவே வெண்ணையும், ரொட்டியும், அருமையாய் சமைத்த காய்கறிகளும்.  வெளுத்து கட்டிவிட்டோம் - நண்பர் பணத்தை.

அதனால் தானோ என்னவோ, மறு நாள் காலையிலேயே தப்பித்தோம் பிழைத்தோம் என்று நண்பர் கிளம்பி விட்டார். "ச ச அதெல்லாம் ஒன்னுமில்லை எனக்கு Monday வேலைக்கு போணும் அதான்", என்றார் பரிதாபமாய்.

மீதி குடும்பங்கள் மீண்டும் ஆற்றுக்கு சென்று காத்து கிடந்தோம், இன்னும் இரண்டு மீன் கிடைக்குமா என்று. கிடைக்காத பட்சத்தில் கூடாரம் திரும்பினோம், நாங்கள் மட்டும் தனியாக.

மீனோடு தான் திரும்புவோம் என்று இன்னும் காத்து கிடந்தார்கள் எங்கள் கணவன்மார்களும், சிறு பிள்ளைகளும். வெகு நேரம் பொருத்து வெறுமையாய் வந்து சேர்ந்தார்கள் - ஒரு சின்னஞ்சிறு மீனுடன் - சுண்டு விரல் அளவிருக்கும்!

புது மீன் கிடைத்த உற்சாகத்தில், நேற்று கிடைத்த ஏழு மீன்களையும் சேர்த்து, கழுவி, உப்பு, மஞ்சள், வத்தல் சேர்த்து, பொரித்து, மீதி எண்ணையில் கொஞ்சம் சோறும் விரவி... சுடச்சுட... இதல்லவா வாழ்க்கை...

வெகு நேரம் அமர்ந்து நெருப்பின் ஒளியில் பிள்ளைகளும் பெற்றவர்களுமாய் கூடி அமர்ந்து கதைகள் பேசினோம். சிரித்தோம். கூட வந்த நண்பர் காஷ்மீர் காரரானதால், அவர்கள் கதைகள் கேட்டு கண்கள் கசிந்தோம்.

நிறைந்த மனதுடன், நிம்மதியாய் ஒரு உறக்கம் போட்டு, விடிந்ததும் கூடாரம் பிரித்து, பிரிய மனமில்லாமல் ஊர் விட்டோம்...

வீட்டிற்கு வந்து சேர்ந்த நொடியில், பெருமூச்சோடு மாற்றி எழுதினோம் அடுப்பறை கரும்பலகையில், "Wish we were camping... :(" என்று...

திருநெல்வேலி மேம்பாலம்...

8 comments

அன்புள்ள நண்பர்கள் அறிய:

எல்லோரும் எப்படி இருக்கீங்க? கவிதை என்றும், காவியம் என்றும் கவணம் திரும்பியதால் கடிதங்கள் கொஞ்சம் தடை பட்டு தான் விட்டது. மன்னிக்கவும்.

New York-ல் இருந்து New Jersey-க்கு, Lincoln tunnel வழியாக வரும்போது, tunnel-லுக்குள் நுழைவதற்கு முன் இடது கை பக்கம் பார்த்தால் சரியாக திருநெல்வேலி மேம்பாலம் போல் தோன்றுகிறது - இன்று தான் கவணித்தேன்.

இது தான் சாக்கு என்று எண்ணமெல்லாம் திருநெல்வேலிக்கு சென்று விட்டது. அது தான் சாக்கு என்று நானும் இதோ இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியா என்று நினைப்பது திருநெல்வேலியைத் தான். அதுவே நான் அறிந்த இந்தியா. அழகான இந்தியா.

சொல்லுங்க, திருநெல்வேலி போயிருக்கீங்களா நீங்க? அது தான் எங்க ஊரு. அதற்காக சொல்லவில்லை, நானும் எத்தனையோ ஊருகளில் படித்திருக்கிறேன், வேலை பார்த்திருக்கிறேன், சுற்றுலா சென்றிருக்கிறேன். ஆனால் திருநெல்வேலி மாதிரி ஒரு ஊரையோ திருநெல்வேலி மக்கள் மாதிரி நல்ல மக்களையோ எங்கும் பார்த்ததில்லை.

திருநெல்வேலி மக்கள் பொதுவாக நல்லவர்கள். பிறரை மதிக்க தெரிந்தவர்கள். அண்ணன் என்றும், அண்ணாச்சி என்றும், அக்கா என்றும் தங்கச்சி என்றும் எளிதாய் யாரையும் உறவு கொண்டாடி விடுவார்கள். அன்பானவர்கள். அன்பை வெளிக்காட்ட தயங்காதவர்கள். வாங்க வாங்க வந்திட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்பார்கள்.

கடும் உழைப்பாளிகள். சென்ற காலங்களில் பனை ஏறுவதும், பயினி இறக்குவதும், கருப்பட்டி காய்ச்சுவதும், கடை வியாபாரம் செய்வதுமாக பனையும் பனையை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். (இன்று ஏனோ பனையையும் காணோம், ஏறுபவர்களையும் காணோம், அது வேறு விஷயம்.)

மீன் பிடிப்பதும், கருவாடு உணர்த்துவதும், அவற்றை விற்பதுமாக கடலையும், கடலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். நெல், பயறு, பருத்தி, என்று வயலையும் வயலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். மா, பலா, வாழை என்று இந்த முக்கனிகளை நம்பி, ஒரு கூட்டம் மக்கள்.

டீச்சர் என்றும், இன்ஜினியர் என்றும், வங்கி அதிகாரிகள் என்றும், அரசாங்க உத்தியோகத்தோர் ஒரு கூட்டம். "கடல் கடந்து வணிகம் செய்", என்ற முன்னோர் சொல்லை காப்பாற்ற வெளி நாடுகளில் வேலை பார்க்கும் ஒரு கூட்டம் மக்கள்.

இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பாய் அனுசரனையாய் ஆதரவாய் வாழும் இடம் திருநெல்வேலி.

இந்து மதத்தவர், கிறிஸ்தவர், முகமதியர் எல்லோரும் கூடி குழையும் குடும்பங்கள் தான் திருநெல்வேலி மக்கள். பெரும்பாலும் எல்லா குடும்பங்களும் அனைத்து விசேஷங்களையும் கொண்டாடுவார்கள். தீபாவாளி ஆகட்டும், முகரம் ஆகட்டும், கிறிஸ்மஸ் ஆகட்டும், எல்லோருக்கும் சந்தோஷம் தான். பொதுவாக யாவரும் வெடி வெடித்தும், மத்தாசு கொளுத்தியும், பலகாரங்கள் பரிந்தும், கொண்டாடுவார்கள்.

குறிப்பாய் கொண்டாடும் குடும்பங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களை சிறப்பு விருந்துக்கு அழைப்பார்கள். அழைத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள் விசேஷ பண்டம் பலகாரங்களை கொண்டு போய் குடுத்து ஒரு எட்டு பார்த்திட்டு வருவார்கள். சிறு பிள்ளைகளில் புத்தாடைகள் சிலு சிலுக்க அங்கும் இங்குமாக சைக்கிளில், மற்றும் ஸ்கூட்டரில் விரைந்த அனுபவங்கள் இனிமையானவை.

சமீபத்தில் சென்னையை சார்ந்த தோழி ஒருவர் கண்கள் அகல கேட்டார், "ஐயோ திருநெல்வேலி-யா? வீதிக்கு வீதி வெட்டு குத்தாமே? நீங்க நிறைய பார்த்திருப்பீங்களே?".

"என்ன சொல்றீங்க நீங்க? ரொம்ப அமைதியான ஊர் திருநெல்வேலி. வெட்டாவது குத்தாவது? எங்க கேட்டீங்க இந்த கட்டு கதையெல்லாம்?" என்றேன் கொஞ்சம் பதறலாய்.

இப்போ கண்களுடன், கைகளையும் உருட்டிய படி தோழி தொடர்ந்தார், "வேற எங்க? எல்லாம் சினிமால காட்டுறாங்களே!".

"தயவு செய்து சினிமால காட்டுறத வச்சு எங்க ஊர எட போடாதீங்க. வந்து பாருங்க", என்று பெருமிதமாய் சொல்லி வைத்தேன், வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று.

எப்படியும் திருநெல்வேலி-க்கு நிகர் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். கோயிலா, குளமா, வயலா, வரப்பா, மலையா, மேடா, கடலா, காடா எதற்கும் குறைவில்லை திருநெல்வேலி-யில். அல்வாவா, பனங்கிழங்கா, நொங்கா, பதநீரா, என்ன வேண்டும் உங்களுக்கு. எல்லாம் ருசிக்கும் திருநெல்வேலியில்.

அதனால் தான் சொல்றேன், திருநெல்வேலி-க்கு இது வரை வராதவங்க, கட்டாயமா வாங்க வாங்க வந்துட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க.

என்றும் அன்புடன்,

~NRIGirl