கண்மணி வருகிறாள்

நாங்கள் மொத்தம்  ஐம்பத்திரெண்டு பேர்!

ஆசைக்கு பெண்கள் இரன்டு பேர்; ஆஸ்திக்கு ஆண்கள் ஐம்பது பேர்!!

நாங்கள் 1993 முதல் 1996 வரை எங்கள் முதுநிலை பட்டப்படிப்பில் கூடிப்படித்தவர்கள். 

பட்டப்படிப்பு முடிந்த கையோடு உலகம் எங்கும் சிதறி விட்டிருந்தோம் நாங்கள்.

எங்கள் திருமண அழைப்புகளை ஏனோ தவற விட்டிருந்தோம்.

பிள்ளைகள் பிறந்த செய்திகளை பகிர மறந்து விட்டிருந்தோம்.

வாழ்வின் வசந்தங்கள், பயணங்கள், தொடர்புகள், தொல்லைகள், வேகம் வேகமாக எங்களைத் துறத்த கூடித்திரிந்த நாட்களை தொலைத்து தான் விட்டிருந்தோம் போங்கள்.

சமீபத்தில் ஒரு நாள்...

கூடிப்படித்த தோழி திடீரென்று தொலை பேசினாள். 'ஏய்! எப்படி?! என்ன? எங்கே? எப்போ?' ஆர்வ ஆர்வமாய் கேள்விகள் தொடர்ந்தது. 'ஓ! ஓகே! சரி. கட்டாயம். நிச்சயம். ஆமா.' என்பதாய் சுடச்சுட பதில்கள் பறந்தது.

கண்களை விரித்து வியந்து நின்ற கணவரிடம் உற்சாகமாய் சொன்னேன், "கண்மணி வருகிறாள்' என்று.

பத்தொன்பது வருடம் கழித்து பேசிக்கொள்கிறோம்! வெகு விரைவில் பார்க்கப்போகிறோம். உற்சாகம் இருக்காதா பின்னே!

வழி மேல் விழி வைத்து காத்திருந்தோம். கண்மணி வந்து சேர்ந்தாள். ஏய்! அதெப்படி? அப்படியே இருக்கிறாய்?! ஐயோ நீயும் தான்! என்றெல்லாம் வியந்து கொண்டோம்.

விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் மீண்டும் தொடர்ந்தோம். பிள்ளைகளையும் கணவன்மாரையும் சற்றே ஒதுக்கி வைத்தோம். பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம்.

குறிப்பாய் எங்கள் சக மாணவர்கள் ஐம்பது பேரை பற்றி பேசினோம். "ஒருத்தருக்காவது கவலை இருக்கிறதா பார், நம் கூட படித்த பெண்பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ, எங்கிருக்கிறார்களோ, என்ன ஆனார்களோ என்ற சிந்தையாவது இருக்கிறதா பார்", என்று சொல்லி சிரித்து வைத்தோம்.

பேசியும் சிரித்துமாய் சமையல் ஒன்றை ஆக்கி முடித்தோம்.

கீச் கீச் கூப்பிட்டது வாசல் குருவி.

யார் அங்கே? எட்டிப் பார்த்தோம். அட கண்மணி உங்களுக்குத்தான் விருந்தாளி என்று வியத்தி நின்றேன். வியந்தே தான் போனாள். ஏய். இது நம்ம நம்பி தானே. தான். தான். அவரே தான். வீட்டிற்குள் நுழைய விடாமலேயே குசலம் விசாரித்தோம்.

கீச் கீச் கீச் கீச் மீண்டும் கூப்பிட்டது குருவி.

பாஆஆ வாஆஆ! என்று வாய் பிளந்து நின்றோம்.

கண்ணுக்கெட்டா தொலைவில் இருந்து வந்திருந்த கண்மணியை பார்க்க கூப்பிடு தூரத்திலிருந்தும் எட்டிப்பார்க்காமல்  இருந்திருந்த இளையநம்பியும் பாவாவும் வந்திருந்தார்கள்.

நான் ஏதும் கேட்காமலேயே, 'ச ச அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஹி ஹி'  என்று குழைந்து நிற்க, 'சரி, சரி இப்படியாவது  வந்து சேர்ந்தீர்களே மக்களே!' என்று நெகிழ்ந்து போனேன்.


மீண்டும் மனைவி/கணவர்  மக்கள் மறந்து விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் தொடர்ந்தோம்.

ஆக்கி வைத்த ஆகாரத்தை அளவளாவி உண்டு மகிழ்ந்தோம்.

வயிறும், மனமும் நிறையவே மெல்ல எங்கள் கணவர்/மனைவி மக்களையும் சேர்த்துக்கொண்டோம் சங்கதிகளில்.

"இதுகளையும் கட்டி மேய்க்கிறார்களே" என்பதாய் எங்கள் இருவரின் கணவர்களையும் பார்த்து கொள்ளை பிரியம் கொண்டார்கள் எங்கள் கூடப்படித்தவர்கள்.

"எவ்வளவு அன்பாய் நம் நண்பர்களை கவனித்துக் கொள்கிறார்களே" என்று அவர்கள் மனைவிகளிடம் மதிப்பும் மரியாதையும் வியப்பும் விருப்பமும் கொண்டோம், பெண்கள் நாங்கள்.

இதற்கு நடுவில் ஆமா உங்கள் கல்லியான அழைப்பு ஒன்றும் வரவேயில்லையே என்று ஒருத்தருக்கொருத்தர் குறை பட்டுக்கொண்டோம். மிச்சம் உள்ள 48 பேரை பற்றியும் அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த நாங்கள் கேள்விப்பட்ட செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

சீனியர் கிளாஸ் என்றும் ஜூனியர் கிளாஸ் என்றும் விருப்பமான வாத்தியார் வாத்திமார் என்றும் நாங்களே நலம் விசாரித்தும், பகிர்ந்தும் கொண்டோம்.

இரவு நெருங்க நெருங்க, 'இனி இவர்கள் கிளம்பி விடுவார்களே. எப்படியாவது இன்னுமொரு மூன்று வருடம் இவர்களுடன் கூடிப்படித்தால்... மூன்று வருடம் என்ன ஒரு மூணு நாளாவது சேர்ந்து இருந்தால்... விடுங்கள், இன்னுமொரு மூணு மணி நேரமாவது பேசக்கிடைத்தால்... குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது...' நான் யோசித்துக்கொண்டிருக்கவே...

'சரி, அப்ப நாங்க கிளம்பறோம்!'

'நாங்களும் தான்'

'நாங்களும்.'

விடை பெற்றார்கள் நண்பர்கள்.

'ஏய்! வெயிட். இனி எப்போ எங்கே?' சொல்லாமல் சொல்லி நின்றேன்.

காற்றிலோ கற்பனையிலோ எங்கிருந்தோ பதில் ஒன்று பறந்து வந்தது,  "மீண்டும் கண்மணி வரும்போது", என்று. சிரிப்பலை ஒன்றும் தொடர்ந்ததாக நினைவு.
.
"கிண்டல் தானே!", கண்கள் கசிய சிரித்து வைத்தேன்...

இன்னுமொரு பத்தொன்பது வருடம் மனக்கணக்கில் கூட்டிப்பார்த்தேன்.

சிரிப்பு உறைந்தது. கசிவு தொடர்ந்தது...

4 comments: (+add yours?)

Sreekanth Devarajan சொன்னது…

Hi QS

Good to see your writing. How have you been? Long time!!! I got your blog link from Prakasam.

NRIGirl சொன்னது…

Hello Sreekanth: எப்படி இருக்கீங்க? ரொம்ப சந்தோஷம்!

சில்வண்டு! சொன்னது…

ரொம்ப நாளா நான் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு.

சினிமா ஷூட்டிங் பாத்திட்டு, ஷூட்டிங்ல பாத்த சீனை சினிமால பாக்க ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே அப்படி ஒரு எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. நானும் இருக்கும், எனக்கும் தெரிந்த இந்த சந்திப்பு உங்க எழுத்துல எப்படி உருவம் பெறப்போகுதுன்னு பாக்க ஒரு பேரார்வம். வழக்கம்போல, உங்க style ல “சுருக், நறுக், மொறுக்” னு பின்னிட்டீங்க.

“கண்மணி வருகிறாள்” ங்கற தலைப்பே நல்லா இருக்குது. பாசம் நேசமெல்லாம் உள்ளடக்கியது போல ஒரு சுகமான தலைப்பு. தலைப்பு மட்டுமா பிரமாதம்? எங்க தலைக்கு நீங்க வச்ச குட்டும் பிரமாதம்… !

“கண்ணுக்கெட்டா தொலைவில் இருந்து வந்திருந்த கண்மணியை பார்க்க கூப்பிடு தூரத்திலிருந்தும் எட்டிப்பார்க்காமல் இருந்திருந்த இளையநம்பியும் பாவாவும் வந்திருந்தார்கள்.” - னு ஒரு கொட்டு வச்சீங்களே அதைத்தான் சொல்லறேன்.

என்னதான் சாக்குப்போக்கு சொன்னாலும், நீங்க அத்தனை முறை கூப்பிட்டும் வராம இருந்தது சரியில்லைதான். அதனால, உங்க குட்டுக்கு நான் அருகதையுடையவந்தான். ஆதனால, சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன் குட்டினையும் குற்றச்சாட்டினையும்.

உண்மையிலேயே பிரமாதமான சந்திப்பு. இது சிறப்பான சந்திப்பா ஆகறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் உங்கள் கணவர் இஸ்ரேலும், கண்மணியின் கணவர் அண்ணாதுரையும் தான். அவங்களும் எங்களோட நீண்ட நாள் ப்ரெண்ட்ஸ் போல பழகினது எங்களை “Comfort zone” ல இருக்கவச்சது. அதனால, செயற்கைத்தனமில்லாம எல்லாராலயும் இயல்பா இருக்க முடிஞ்சது. முக்கியமா, கண்மணியின் அக்காவும், அவர் கணவரும். ஏதோ, கண்மணியோட க்ளாஸ்மேட்ஸ் அப்படீனு ஒதுக்கிடாம அவங்களும் எங்களோட ஜாலியா பேசிப் பழக, இது ஒரு மறக்க முடியாத சந்திப்பா மாறுச்சு.

உங்களோட அழகான வீடு, இயற்கை கொஞ்சும் இடம், சுவையான சாப்பாடு…, ஆஹா… நீங்க சமைச்ச பிரியாணியோட ருசிய பத்தி என்ன சொல்ல? அவ்வளோ விருப்பத்தோட ரசிச்சு நாங்க ருசிச்சு சாப்பிட்டத பாத்து அந்த பிரியாணில கெடந்த ஆடு கூட, சொர்கத்துலயிருந்து ஆனந்த கண்ணீர் விட்டிருக்கும். “இந்தப் பயக்க ஆசைக்காக நான் உயிர விட்டது worth” னு அது நெனச்சிருக்கும்.

கண்மணியோட “புளி ரசம்” + சிக்கன் மசாலா, ஆஹா, என்ன ஒரு காம்பினேஷன். எங்க வாய்க்கு ரெஸ்ட்டே குடுக்கக்கூடாதுன்னு சபதம் எடுத்ததைப் போல, ஐஸ்கிரீம், புரூட்ஸுன்னு இஸ்ரேல் ஒருபக்கம் எங்க capacity ய அளந்திட்டிருக்க, வயிறு நிரம்பியிருந்த நிலையிலயும், பக்கத்து வீட்டுலயிருந்து லேட்டா டெலிவெரி ஆன “ரம்ஜான் பிரியாணி” ஒரு சந்தோஷத்தையும், ஆர்வத்தையும் கிளப்பினது கொஞ்சம் ஓவர்தான்.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் தலைமைல ஒரு Walk!. மூச்சிறைக்க, மதியம் சாப்பிட்ட இறைச்சி கரைய, வேர்க்க விறுவிறுக்க ஒரு சூப்பர் Walk! வாக் முடிஞ்சு வந்ததும் புட்டு, பயறு, பப்படம் காத்திருந்தது. உபசரிப்பின் உச்சம் அது.

உண்மையில் நேரம் போதவில்லை. நீங்க சொன்னதுபோல, புறப்படும் நேரம் நெருங்க நெருங்க ஒரு சின்ன இழையா சோகம் நிழலாடத்தான் செஞ்சது. இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லி சிரிக்க பாக்கி இருந்தது. அது எப்பவும் அப்படித்தான் இருக்கும். இன்னும் ஒரு மூணு வருஷம் கிடைச்சாலும் போதாது.

உண்மையான பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? ரெண்டு கண்ணு போல இருக்கும் எங்க க்ளாஸ் பெண்ணுங்க ரெண்டு பேருக்குமே, அவங்கள கண்ணு போல பாத்துக்கற, அன்பான, அருமையான கணவர் அமஞ்சிருப்பதுதான். அவங்களும் எங்களோட இவ்வளோ நட்போட பழகறதுதான்.

மொத்தத்துல செம!

NRIGirl சொன்னது…

We totally enjoyed reading your comment, especially this part:

அவ்வளோ விருப்பத்தோட ரசிச்சு நாங்க ருசிச்சு சாப்பிட்டத பாத்து அந்த பிரியாணில கெடந்த ஆடு கூட, சொர்கத்துலயிருந்து ஆனந்த கண்ணீர் விட்டிருக்கும். “இந்தப் பயக்க ஆசைக்காக நான் உயிர விட்டது worth” னு அது நெனச்சிருக்கும்.

So funny. You are such fun to be with Bawa. Be that way.

Until next time,
Queen