வெந்து நொந்து வீதியில்...

அன்புள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அறிய.

எப்படி இருக்கிறீர்கள்?

அன்று New York-ல் நடந்து வரும்போது ஒரு homeless நபரை பார்த்தேன். கண்டுகொள்ளாமல் தாண்டி வந்தும் விட்டேன். ஐந்தாறு அடிகள் நடந்தபின் மனசு கேட்கவில்லை. அவசரமாய் திரும்பி விரைந்தேன்.

மதிய உணவுக்காக வைத்திருந்த பழங்களை அவருக்கு தரலாம் என்று நினைத்து, "குட் மார்னிங்! வுட் யூ லைக் ஸம் ஃப்ரூட்ஸ்?" என்று வினவிவேன். நிமிர்ந்து என் கைகளில் உள்ள பழங்களை பார்த்தார். ஒரு ஆப்பிளும், ஒரு வாழைப்பழமும் இருந்தது.

"மிக்க நன்றி. ஆப்பிள் வேண்டாம், என் பல் உடைந்திருக்கிறது. வாழைப்பழத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று நன்றியுடன் வாங்கிக்கொண்டார். அப்படியானால் என்னிடம் இன்னும் ஒரு வாழைப்பழம் இருக்கிறது. தயவுசெய்து அதையும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று நீட்டினேன். மிக சந்தோஷமாக பெற்றுக்கொண்டார்.

ஆச்சரியமாகத்தான் இருந்தது அவரின் நேர்மை.

நான் மிக காலையிலேயே அதாவது ஏழு மணிக்கெல்லாம் New York-க்கு வந்துவிடுவதால், பல homeless நபர்களை பார்க்க நேரிடும். தெரு ஓரங்களில் படுத்திருப்பார்கள். அப்பொழுதுதான் தூங்கி எழுந்துகொண்டிருப்பார்கள். தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும்.

என்னைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் பொதுவாக ஓட்டமும் நடையுமாக ஆஃபீஸ்-க்கு வந்து விடுவேன். என்றாவது அக்கம் பக்கம் பார்த்தால் மாட்டிக்கொள்வேன் மனதிடம். "ஏதாவது கொடுக்க இருக்கிறதா பார். கட்டாயம் கிடைக்கும். சில்லறை இல்லாமலா இருக்கும்" என்று பல ஏவுதல்கள் வரும். அவற்றை அசட்டை செய்து வந்து விட்டால் நாள் முழுதும் எண்ணம் அதில் தான் இருக்கும்.

அடிக்கடி கடந்து போகும் மற்றொரு நபர், ஒரு நாய் குட்டியை அணைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார். ஒரு முறை சில orange பழங்களை கொடுத்தேன். மலர்ந்த முகத்தோடு பெற்றுக்கொண்டார். சில முறை சில்லறைகளை கொடுத்திருக்கிறேன். "தாங்க்யூ, காட் ப்லெஸ் யூ" என்று ஆசீர்வதிப்பார்.

அன்று ஒரு நாள் வழக்கத்திற்கு முந்தின பஸ்-ஸில் வந்து விட்டேன். இவர் துள்ளிக்குதித்து நடந்து வந்துகொண்டிருந்தார், நாய் குட்டி பின் தொடர. அவர் என்னை கவணிக்கவில்லை. நானும் அவரை கவணித்ததாக காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் மனதில் ஒரு போராட்டம், "ஏமாந்து விட்டோமோ? ஏமாற்றி விட்டாரோ", என்று.

ஏதோ எப்போதோ என்னவோ பெரிதாய் உதவி விட்டோம் என்கிற பெருமிதத்தில், அவர் நடக்கக்கூடாது என்றும், சிரிக்கக்கூடாது என்றும் எதிர்பார்ப்பது எத்தனை அபத்தம்.

சந்தோஷப்படாமல் சங்கடப்படுகிறாயே. இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருந்தால் நீயே வைத்துக்கொள் உன் சில்லறையை, யாருக்கு வேண்டும் உன் பழங்கள். கண்ணை மூடிக்கொள். கையை பொத்திக்கொள். யாருக்கு நஷ்டம் அதனால். என்னை நானே கடிந்து கொண்டேன்.

வெந்து நொந்து வீதியில் வந்து நிற்கும் நபரிடம், "நீ நன்றாகத்தானே இருக்கிறாய். ஏதும் வேலை செய்து பிழைக்க வேண்டியது தானே", என்று வாதாடும் சிலரை பார்த்திருக்கிறேன். ஏன், எதற்கு, என்று நம்மிடம் அவர்கள் விளக்கியே ஆக வேண்டிய அவசியம் இல்லையே. முடிந்தால், மனம் இருந்தால் இரண்டு காசு கொடுத்து விட்டு அகல வேண்டிய ஒன்றே நியாயம்.

ஒரு நண்பர் கேட்டார். எப்படி தெரியும் அவர்கள் உண்மையில் தேவை உள்ளவர்கள் தான் என்று?

தேவை இல்லாவிட்டால் கேட்க மாட்டார்களே. வீடு இருந்தால் வீதிக்கு வர மாட்டார்களே.

எப்படி தெரியும் யாருக்கு கொடுக்கவேண்டும் என்று?

கேட்கிற எவருக்கும் கொடுக்க வேண்டியது தானே.

நான் ஏதோ பெரிதாய் ஒன்றை செய்துவிட்டதாய் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காக இதை எழுதவில்லை. தயங்கி நிற்கும் நண்பர்களை கொஞ்சம் தூண்டிவிடத்தான் எழுதுகிறேன்.

"கூப்பிடுகிற எவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். கேட்கிற எவரும் பெற்றுக்கொள்கிறார்கள்" என்று வேதம் சொல்லுகிறதே. அப்படியானால் நம்மை கூப்பிடுகிறவர்களுக்கு நாம் செவி மறுக்கலாமா? நம்மிடம் கை நீட்டும் நபருக்கு நாம் கை முடக்கலாமா?

கூடாது என்கிறது என் மனது...

என்றும் அன்புடன்,

~NRIGirl

1 comments: (+add yours?)

KParthasarathi சொன்னது…

பாத்திரமறிந்து பிச்சை இடு என்று வழக்கத்தில் உள்ள பழமொழி.அது எல்லா சமயத்திற்கும் பொருந்தாது என்று இன்று அறிந்து கொண்டேன்.
தேவை இருப்பவர்கள் தாம் கை நீட்டுவார்கள்.அவர்கள் நல்லவர்களா பொல்லாதவர்களா என்கிற சர்ச்சையில் போகாமல் உதவி செய்வதே நல்ல பண்பு.
உங்கள் கருணை உள்ளம் நன்றாக புலப்படுகிறது.கர்த்தர் நீங்கள் நிறைய அளவில் உதவி சைய்ய அருள் புரியட்டும்