காலம் ஓடுகிற வேகம்...

அன்புள்ள உங்களுக்கு, அன்புடன் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்.

நலம். நலம் அறிய ஆவல்.

காலம் ஓடுகிற வேகத்தைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது தான் இந்த வருடம் புது வருடமாகியிருந்தது. அதற்குள் ஐந்தாவது மாதமாகி அதிலும் பாதிக்குமேல் முடிந்து விட்டது. எதற்காக இத்தனை வேகம் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

Virginia Woolf-ன் To The Lighthouse புத்தகத்திலும் அதே வேகம் தான். கோடை விடுமுறைக்கு தங்கள் விடுமுறை வீட்டிற்கு வந்திருக்கிற குடும்பத்தில் எப்படியும் பிள்ளைகளை அவர்கள் கடலுக்கு மறுகரையில் இருக்கும் கடற்கரை விளக்குக்கு கூட்டிப் போக அம்மா Mrs. Ramsey பெரிதும் முயற்சிக்கிறார்கள்.

காற்று விட்ட பாடில்லை, மனதின் உள்ளேயும் வெளியேயும். ஆனாலும் அந்த அம்மா கடற்கரை விளக்கு பொறுப்பாளரின் மகனுக்கு வீட்டிலிருந்து என்ன கொண்டு போகலாம் என்று படங்கள், புத்தகங்கள் சில தேடி எடுத்து வைக்கிறார்கள். விடிய விடிய அமர்ந்து ராத்திரியும் பகலுமாக குளிருக்கு அவனுக்கு ஒரு stockings பின்னுகிறார்கள்.

கணவர் எப்போதும் எதிராகவே பேசுகிறார். நீங்கள் போக முடியாது. காற்று நிற்கப் போவதில்லை என்று. அவர்கள் வீட்டில் பல நண்பர்களும் தங்கி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அவர்களும் விடுமுறைக்காக வருகிற நண்பர்கள். அந்த வீட்டில் தங்கி அருகிலிருக்கும் கடலில் போய் விளையாடுவதும், மரநிழலில் அமர்ந்து சிலர் கவிதைகள் எழுதுவதும், சிலர் படங்கள் வரைவதுமாக விடுமுறையை கழிக்கிறார்கள்.

தன் கணவர் தன் ஆசைக்கு எதிர்ப்பாய் பேசினாலும் Mrs. Ramsey அவரை மதித்து நடந்து கொள்ளுகிறார்கள். பிள்ளைகளை அன்பாக கவணித்துக் கொள்கிறார்கள். கடைக்குட்டி ஜேம்ஸ்-க்கு எப்போதும் புத்தகங்களில் இருந்து படங்களை வெட்டுவது தான் பொழுதுபோக்கு. அவனை மடியில் அமர்த்தி ஜன்னலோரம் அமர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறார்கள். ஜேம்ஸ்-ம் அவனுக்கு முந்தின பிள்ளை Cam-ம் வளர்ந்துவிடாமல் இப்படியே சின்ன பிள்ளைகளாக இருந்து விட மாட்டார்களா என்று ஆசை படுகிறார்கள்.

வேலைக்காரர்களிடம் பொறுமையாய் இருக்கிறார்கள். விருந்தாளிகளை நன்றாக உபசரிக்கிறார்கள். அவர்கள் தான் வீட்டில் எல்லோரையும் இயக்கும் ஒரு இயந்திரம். பூச்செடிகள் வளர்ப்பதும், சமயம் கிடைக்கும்போது கடற்கரையில் ஒரு பாறையின் மேல் அமர்ந்து கடிதங்கள் எழுதுவதும், துணிகளை துவைத்து, காய வைத்து, மடித்து வைப்பதும், விருந்தாளிகள் ஒவ்வொருவரையும் உற்சாகப் படுத்துவதுமாக ஓய்வின்றி வேலை செய்கிறார்கள்.

இப்படியாக விடுமுறை கழிகிறது. கடற்கரைக்கு போகாமலே. அதற்கும் வருத்தப்பட்டதாக காட்டிக்கொள்ளவில்லை அவர்கள்.

அடுத்த காட்சியிலேயே பத்து வருடங்களாகி விடுகிறது. பத்து வருடம் கழித்து தான் மீண்டும் இந்த விடுமுறை வீட்டிற்கு வருகிறார்கள் அந்த குடும்பம். வீட்டை பார்த்துக்கொள்ளும் வயதான ஒரு பெண்மணி வீட்டை சுத்தம் செய்து, துணிமணிகள் மற்றும் புத்தகங்களை வெயிலில் காய வைத்து, கண்ணாடிகளை துடைத்து, வீட்டை ஒட்டிரை அடித்து, உதவிக்கு ஆட்களை அமர்த்தி, புல் பூண்டுகளை சுத்தம் செய்து ஆயத்தம் செய்கிறார்கள்.

அவர்களின் ஒரே வருத்தம், இந்த பத்து வருடங்களில் அந்த குடும்பம் இந்த வீட்டை எட்டிப் பார்க்கவில்லையே என்பது தான். பிள்ளைகளோ, தாயாரோ ஒரு கடிதம் கூட எழுத வில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் ஒரு கடிதம் வந்திருக்கிறது. "நாங்கள் வருகிறோம், வீட்டை ஆயத்தம் செய்யுங்கள்" என்று ஒரு வரியில் எழுதியிருந்தார்கள்.

எப்படியும் குடும்பம் வருகிறது. Mrs. Ramsey வரவில்லை. இந்த பத்து வருடங்களில் அவர்கள் மரித்துவிடுகிறார்கள். பழைய மாதிரி உற்சாகம் பிள்ளைகளிடமோ, வந்திருக்கிற ஒரு சில பழைய நண்பர்களிடமோ இல்லை. Mr. Ramsey-யிடமும் தளர்ச்சி தெரிகிறது. ஜேம்ஸ்-ம், Cam-ம் வளர்ந்துவிட்டார்கள். 16, 17 வயதாகிறது அவர்களுக்கு.

Mr. Ramsey எப்படியும் இந்த இரு பிள்ளைகளை-யும் Mrs. Ramsey ஆசை பட்டபடி கடற்கரை விளக்குக்கு கூட்டிப்போக விரும்புகிறார். பிள்ளைகளிடம் ஒரு உற்சாகமும் இல்லை. அப்பா என்கிற அன்பும் இல்லை. ஆனால் எதிர்த்து பேசுகிற நிலையிலும் இல்லை. கொஞ்சம் சாப்பாடும் கைகளில் எடுத்துக்கொண்டு அப்பா பின் செல்கிறார்கள்.

படகில் கடலில் செல்ல வேண்டும். கடற்கரை விளக்கு பொறுப்பாளரின் மகன் வந்திருக்கிறான் படகில் கூட்டிச்செல்ல. ஜேம்ஸ் தான் தண்டு வலிக்கிறான். ஜேம்ஸ்-ஓ Cam-ஓ ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை அப்பாவிடம். Mr. Ramsey புத்தகம் ஒன்றை வாசித்தவாறு வருகிறார்.

எப்படியும் கடற்கரை துறைமுகத்திற்கு வந்து சேருகிறார்கள். 'Well done James!' என்று தன் மகனை பாராட்டுகிறார். முதன் முறையாக தன் தந்தையின் பாராட்டை கேட்ட James நெஞ்சம் நெகிழ்கிறான். இப்படியாக கதை முடிகிறது...

இப்படித்தான் நம் கதைகளும் என்று நினைத்துக்கொண்டேன். இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்ய வேண்டும். தள்ளிப்போடுவதில் அர்த்தம் ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன். பாராட்டோ, பரிந்துரையோ, ஆறுதலோ, அரவணைப்போ, இன்றே கொடுப்பது நன்று.

காலம் ஓடுகிற வேகத்தில் நம் பிள்ளைகளை, துணைவரை, பெற்றோரை, உடன்பிறப்புகளை, நண்பர்களை ஆதாயம் செய்ய வேண்டுமானால் நாமும் கொஞ்சம் ஓடியே ஆக வேண்டும்.

கொஞ்சம் பிரயாசப்படத்தான் வேண்டும் - நம் அன்பை வெளிக்காட்ட. முடிந்தவரை நம் அன்பர்களின் ஆசைகளை நிறைவேற்றத்தான் வேண்டும் - நம் விருப்பங்களுக்கு மாறாக இருந்தாலும் கூட. மற்றபடி வேகமான இந்த வாழ்க்கையில் பிரயோஜனம் தான் என்ன? என்று உணர்ந்து கொண்டேன்.

உங்களின் ஆசைகள் நிறைவேற என்றும் என் வாழ்த்துக்கள். உங்களவர்களின் ஆசைகள் நிறைவேற மேலும் என் வாழ்த்துக்கள்.

சந்தோஷமாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் உங்களுக்கு சொல்லுகிறேன் (பரிசுத்த வேதாகமம்).

என்றும் அன்புடன்,

~NRIGirl