திருநெல்வேலி மேம்பாலம்...

அன்புள்ள நண்பர்கள் அறிய:

எல்லோரும் எப்படி இருக்கீங்க? கவிதை என்றும், காவியம் என்றும் கவணம் திரும்பியதால் கடிதங்கள் கொஞ்சம் தடை பட்டு தான் விட்டது. மன்னிக்கவும்.

New York-ல் இருந்து New Jersey-க்கு, Lincoln tunnel வழியாக வரும்போது, tunnel-லுக்குள் நுழைவதற்கு முன் இடது கை பக்கம் பார்த்தால் சரியாக திருநெல்வேலி மேம்பாலம் போல் தோன்றுகிறது - இன்று தான் கவணித்தேன்.

இது தான் சாக்கு என்று எண்ணமெல்லாம் திருநெல்வேலிக்கு சென்று விட்டது. அது தான் சாக்கு என்று நானும் இதோ இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியா என்று நினைப்பது திருநெல்வேலியைத் தான். அதுவே நான் அறிந்த இந்தியா. அழகான இந்தியா.

சொல்லுங்க, திருநெல்வேலி போயிருக்கீங்களா நீங்க? அது தான் எங்க ஊரு. அதற்காக சொல்லவில்லை, நானும் எத்தனையோ ஊருகளில் படித்திருக்கிறேன், வேலை பார்த்திருக்கிறேன், சுற்றுலா சென்றிருக்கிறேன். ஆனால் திருநெல்வேலி மாதிரி ஒரு ஊரையோ திருநெல்வேலி மக்கள் மாதிரி நல்ல மக்களையோ எங்கும் பார்த்ததில்லை.

திருநெல்வேலி மக்கள் பொதுவாக நல்லவர்கள். பிறரை மதிக்க தெரிந்தவர்கள். அண்ணன் என்றும், அண்ணாச்சி என்றும், அக்கா என்றும் தங்கச்சி என்றும் எளிதாய் யாரையும் உறவு கொண்டாடி விடுவார்கள். அன்பானவர்கள். அன்பை வெளிக்காட்ட தயங்காதவர்கள். வாங்க வாங்க வந்திட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்பார்கள்.

கடும் உழைப்பாளிகள். சென்ற காலங்களில் பனை ஏறுவதும், பயினி இறக்குவதும், கருப்பட்டி காய்ச்சுவதும், கடை வியாபாரம் செய்வதுமாக பனையும் பனையை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். (இன்று ஏனோ பனையையும் காணோம், ஏறுபவர்களையும் காணோம், அது வேறு விஷயம்.)

மீன் பிடிப்பதும், கருவாடு உணர்த்துவதும், அவற்றை விற்பதுமாக கடலையும், கடலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். நெல், பயறு, பருத்தி, என்று வயலையும் வயலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். மா, பலா, வாழை என்று இந்த முக்கனிகளை நம்பி, ஒரு கூட்டம் மக்கள்.

டீச்சர் என்றும், இன்ஜினியர் என்றும், வங்கி அதிகாரிகள் என்றும், அரசாங்க உத்தியோகத்தோர் ஒரு கூட்டம். "கடல் கடந்து வணிகம் செய்", என்ற முன்னோர் சொல்லை காப்பாற்ற வெளி நாடுகளில் வேலை பார்க்கும் ஒரு கூட்டம் மக்கள்.

இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பாய் அனுசரனையாய் ஆதரவாய் வாழும் இடம் திருநெல்வேலி.

இந்து மதத்தவர், கிறிஸ்தவர், முகமதியர் எல்லோரும் கூடி குழையும் குடும்பங்கள் தான் திருநெல்வேலி மக்கள். பெரும்பாலும் எல்லா குடும்பங்களும் அனைத்து விசேஷங்களையும் கொண்டாடுவார்கள். தீபாவாளி ஆகட்டும், முகரம் ஆகட்டும், கிறிஸ்மஸ் ஆகட்டும், எல்லோருக்கும் சந்தோஷம் தான். பொதுவாக யாவரும் வெடி வெடித்தும், மத்தாசு கொளுத்தியும், பலகாரங்கள் பரிந்தும், கொண்டாடுவார்கள்.

குறிப்பாய் கொண்டாடும் குடும்பங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களை சிறப்பு விருந்துக்கு அழைப்பார்கள். அழைத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள் விசேஷ பண்டம் பலகாரங்களை கொண்டு போய் குடுத்து ஒரு எட்டு பார்த்திட்டு வருவார்கள். சிறு பிள்ளைகளில் புத்தாடைகள் சிலு சிலுக்க அங்கும் இங்குமாக சைக்கிளில், மற்றும் ஸ்கூட்டரில் விரைந்த அனுபவங்கள் இனிமையானவை.

சமீபத்தில் சென்னையை சார்ந்த தோழி ஒருவர் கண்கள் அகல கேட்டார், "ஐயோ திருநெல்வேலி-யா? வீதிக்கு வீதி வெட்டு குத்தாமே? நீங்க நிறைய பார்த்திருப்பீங்களே?".

"என்ன சொல்றீங்க நீங்க? ரொம்ப அமைதியான ஊர் திருநெல்வேலி. வெட்டாவது குத்தாவது? எங்க கேட்டீங்க இந்த கட்டு கதையெல்லாம்?" என்றேன் கொஞ்சம் பதறலாய்.

இப்போ கண்களுடன், கைகளையும் உருட்டிய படி தோழி தொடர்ந்தார், "வேற எங்க? எல்லாம் சினிமால காட்டுறாங்களே!".

"தயவு செய்து சினிமால காட்டுறத வச்சு எங்க ஊர எட போடாதீங்க. வந்து பாருங்க", என்று பெருமிதமாய் சொல்லி வைத்தேன், வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று.

எப்படியும் திருநெல்வேலி-க்கு நிகர் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். கோயிலா, குளமா, வயலா, வரப்பா, மலையா, மேடா, கடலா, காடா எதற்கும் குறைவில்லை திருநெல்வேலி-யில். அல்வாவா, பனங்கிழங்கா, நொங்கா, பதநீரா, என்ன வேண்டும் உங்களுக்கு. எல்லாம் ருசிக்கும் திருநெல்வேலியில்.

அதனால் தான் சொல்றேன், திருநெல்வேலி-க்கு இது வரை வராதவங்க, கட்டாயமா வாங்க வாங்க வந்துட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க.

என்றும் அன்புடன்,

~NRIGirl

8 comments: (+add yours?)

ACE ENGLISH CLUB சொன்னது…

Vow! what a great expression of Tirunelveli!
Shermila.A

NRIGirl சொன்னது…

Thank you Shirmila Akka! Nice hearing from you. Hope all is well at your end.My love to Aunty!

KParthasarathi சொன்னது…

யாருக்குமே தங்கள் சொந்த ஊரைப்பற்றி ஒரு பெருமிதம் இருக்கும்.அதில் நியாயம் இருக்கலாம் சில சமயங்களில் குறைவாக இருக்க கூடும்.ஆனால் திருநெல்வேலியின் மக்களுக்கோ அந்த அபாயம் சற்று கூட கிடையாது.
அந்த ஊரை பற்றி சொன்னாலே ஒரு மணம்,ஒரு மென்மை,இதமான பேச்சு, சுமுகமாகவும் அன்பாகவும் பழகும் தன்மை என்கிற சிறப்புகள்தான் மனதில் தூக்கி நிற்கிறது.வற்றாத ஆறும்,வேலிபோல் சுற்றி உள்ள வயல்களும் ஒரு பசுமையை தருகிறது.படித்தவர்கள் அதிகம்.வியாபார நுணுக்கம் தெரிந்தவர்கள். தங்கள் ஊரின் ஆட்களை விட்டு கொடுக்கமாட்டார்கள் .தூக்கிவிடத்தான் செய்வார்கள்..
நீங்கள் பாக்யசாலி

NRIGirl சொன்னது…

ரொம்ப சந்தோஷம் KP - உங்கள் விடுகைக்கு! எவ்ளோ நாளாச்சி!

இப்ப நீங்க என்ன பண்ண போறீங்க, நீங்க miss பண்ணின எல்லா பழைய posts-யையும் வாசித்து இரண்டு வரி எழுத போறீங்க. சரியா?

NRIGirl சொன்னது…

Also, யாராவது Bawa-வை எங்காவது பார்த்தால் ஒரு எட்டு வந்துட்டு போக சொல்லுங்க...

bkaseem சொன்னது…

யாரு? என்னையா தேடுதாஹ.... என்னல சொல்லுதீய..... ஆமா.... அது எம்பேருதாம்லே.... ஓ அப்படியா.... ஏ நான் இங்கதானே கெரங்கிட்டு கெடக்கேங்...... இந்தா ஓடி வாரேன்....

bkaseem சொன்னது…

நாகர்கோவில் காரனான எனக்கு திருநெல்வேலி பக்கத்து ஊர். பக்கத்து ஊராயினும் நான் அதிகம் பாக்காத ஊர். குறை சொல்ல முடியாது ஏனெனில் நான் பிறந்த நாகர்கோவிலையே நான் இன்னும் சரியாகப் பார்த்தது கிடையாது.

உங்கள் சென்னைத் தோழி கேட்டது நியாயம்தான். தற்போது வரும் திரைப்படங்களில் திருநெல்வேலி என்றால் வீச்சருவா... வெட்டு... குத்து என்பதற்கான கதைக்களம் என்றாகிவிட்டது. நீங்கள் குறிப்பிட மறந்த முக்கியமான இன்னொரு குணாதிசயம், திருநெல்வேலி பெண்கள் இயற்கையாகவே தைரியம் மிக்கவர்கள். திறமைசாலிகள் என்பதாகும். "ரோஜா" திரைப்படம் இதற்கு சாட்சி என்று உங்கள் சென்னைத் தோழிக்கு சொல்லுங்கள்.

திருநெல்வேலி எனும்போது என் மனதிற்குள் கலவையான உணர்கள் தோன்றும். ஆனந்தம், பயம், மதிப்பு, பெருமை என்று பல உணர்வுகளை ஒருசேர உண்டாக்கும் ஊர்தான் நெல்லை எனக்கு. ஏன் எனும் காரணத்தை கீழே சொல்கிறேன்.

பெரும்பாலும் நாங்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களிலே தங்கியிருந்ததாலும் விடுமுறை காலங்களில் மட்டும் ஊருக்கு வருவதாலும் பெரும்பாலும் ஊருக்குப் போகும் பயணம் முதல் நாள் மாலை அல்லது இரவு புறப்பட்டு மறுநாள் காலையில் நாகர்கோவிலை அடைவதாகவே இருக்கும். அந்த பயணங்களில் பெரும்பாலும் பொழுது விடிந்ததும் சென்றடையும் ஊர் திருநெல்வேலி யாக இருக்கும். பாஷை மாறி இருக்கும், காற்றில் வாசம் கூடியிருக்கும். ஊரு வரப்போகுது எனும் ஆனந்தம் பெரும்பாலும் திருநெல்வேலியில்தான் மனதில் பொங்கும். ஆகவே நெல்லை என்றால் இப்போதும் மனதில் அந்த ஆனந்தம் தோன்றிப்போகும்.

பிறகு, பயம் ஏன்? பயத்திற்கு காரணம் "அல்வா" தான். ஊருக்கு "அல்வா" வாங்கிச்செல்ல திருநெல்வேலி பஸ் நிலையத்தில் இறங்கிச்செல்லும் அப்பா, பஸ் புறப்படும் முன் வந்துவிடவேண்டுமே எனும் பதட்டம் தரும் பயம் இருக்கிறதே.... இரண்டு மூன்று முறை பஸ் புறப்பட்டு நகர்ந்து கிட்டத்தட்ட பேருந்தை விட்டு வெளியேறத் துவங்கும் சமயம் வரையும் அப்பா வராதிருக்க... நிக்கர் அணிந்த பொடியனான நான் பதட்டப்பட்டு பயந்து கண்ணில் கண்ணீரோடு நின்ற உணர்வு இப்போதும் திருநெல்வேலி என்றதும் தலை தூக்குவதால்தான் பயம்.

இந்த பயத்தின், பதட்டத்தின் விளைவாக திருநெல்வேலி "அல்வா" மீதே எனக்கு வெறுப்பு ஆகிப்போனது. அந்த வெறுப்பின் காரணமாக திருநெல்வேலி அல்வாவை பார்த்தாலே பொத்துக்கொண்டு வரும் கோவம், அந்த அல்வாவை எடுத்து வாயில் இட்டு அரைத்து, கடித்து துவம்சம் செய்து விழுங்கி அதை இல்லாது ஆக்கும் வரை அடங்குவதே இல்லை என்பது கிளைச்செய்தி.

எங்கள் குடும்பத்தில் மூன்று மருத்துவர்களை உருவாக்கித்தந்தது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிதான். சில பட்டதாரிகளை உருவாக்கியதும் திருநெல்வேலிதான். ஆதலால், இவ்வூர் மீது மதிப்பு அதிகம். என் ஷெரீன் மைனியை முதன் முதலில் டாக்டர் கோலத்தில் பார்த்து, ஏதோ நானே டாக்டர் ஆனது போன்ற உணர்வோடு
பெருமை பொங்க நான் நின்றிருந்தது இன்றும் என் நினைவில் மாயாது உள்ளது.

முக்கியமாய் என் திருமதிக்கு முகூர்த்தப் பட்டு எடுத்ததும் திருநெல்வேலியில்தான் (போத்தீஸ் அப்போது வேறெங்கும் கிளைகள் இல்லை!).

முத்தாய்ப்பாய், நீங்கள் உட்பட மிகச்சிறந்த இரண்டு தோழியரை எனக்கு சன்மானித்ததும் இந்த திருநெல்வேலிதான்.

பதநீரும் நொங்கும் சுவைத்துதான் எத்தனை காலம் ஆகிறது? திருநெல்வேலியில் "டபுள் பிரிட்ஜ்" இருக்கிறது என்று கேள்விப்பட்டதுண்டே தவிர இதுவரை பார்த்ததில்லை. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம், வெரஜானோ நேரோ பிரிட்ஜ் போன்ற "டபிள் பிரிட்ஜ்" ஐ பார்த்திட்டாலும் இந்த பாலங்கள் எனக்குள் உண்டாக்காத குதூகுலத்தை திருநெல்வேலி மேம்பாலம் எனக்குள் உண்டாக்கும் என்பது உறுதி.

ஆதலால் சொல்கிறேன்.... அடுத்த பாரதப் பயணத்தின்போது கட்டாயமாக திருநெல்வேலி செல்கிறேன்.... ஆயாசமாக இருந்து சாப்பிட்டு வருகிறேன். அழைப்பிற்கு மிக்க நன்றி!

NRIGirl சொன்னது…

Thank You Bawa! ரொம்ப நாளா ஆளையே காணோமேனு தான் சொல்லி அனுப்பினேன்.

ஆனாலும், அல்வா மீது இவ்வளவு கோபமா? ஏனோ எங்களுக்கு சிரிப்புத்தான் வருகிறது உங்களின் இந்த கோப வரிகளை வாசிக்கும்போது: "திருநெல்வேலி "அல்வா" மீதே எனக்கு வெறுப்பு ஆகிப்போனது. அந்த வெறுப்பின் காரணமாக திருநெல்வேலி அல்வாவை பார்த்தாலே பொத்துக்கொண்டு வரும் கோவம், அந்த அல்வாவை எடுத்து வாயில் இட்டு அரைத்து, கடித்து துவம்சம் செய்து விழுங்கி அதை இல்லாது ஆக்கும் வரை அடங்குவதே இல்லை என்பது கிளைச்செய்தி."

அதெல்லாம் சரி, இங்க பக்கத்தில இருக்கிற Connecticut-ல இருந்துகிட்டு New Jersey பக்கம் எட்டிக் கூட பாக்காமலிருப்பது நியாயமா சொல்லுங்க? என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ, இந்த வருஷம் கட்டாயமா இளயநம்பியையும் கூட்டிட்டு குடும்பமா ஒரு எட்டு வந்திட்டு போறீங்க. சரியா?