ஒரு அண்ணன் என்ன விலை?

அன்புள்ள நண்பர்கள் அறிய,

எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு அண்ணன் உண்டா? உங்கள் அண்ணன் எப்படி இருக்கிறார்கள்? எனக்கு ஒரு அண்ணன் இல்லை என்பது மட்டும் ஒரு பெரிய குறை தான். யோசித்தாலே வருவது ஒரு பெருமூச்சு தான். ம்ம்ம்ஹூம்!

சிறு வயதில் நான் அடிக்கடி தோழிகளிடம் பேரம் பேசுவதுண்டு, "ஒரு அண்ணன் என்ன விலை?", என்று. என் கூட படித்த கோமதிக்கு ஐந்து அண்ணன்கள் - கூடப்பிறந்தவர்கள் மூன்று பேர், சித்தப்பா பிள்ளைகள் இரண்டு பேர். மீரா பானுவுக்கு மூன்று அண்ணன்கள். 

அவர்களுக்கெல்லாம் நிறைய அண்ணன்கள் இருக்கும்போது எனக்கு ஒரு அண்ணனும் இல்லை என்பது என் சின்ன மனதின் பெரிய வருத்தமாகவே இருந்தது.

அவர்களும் நாளொன்றுக்கு ஒரு விலை சொல்லுவார்கள் - அது அவர்கள் மன நிலையை பொறுத்து. அண்ணன்களிடம் அன்று சண்டை போட்டிருந்தால் விலை ரொம்ப குறைவாகவே இருக்கும் - 5 பைசா மிட்டாய் போதும். அண்ணன்களிடம் பாசம் உள்ள நாட்களில் ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வேண்டும் என்று விலை கூடி இருக்கும். 

இதிலெல்லாம் கூத்து என்னவென்றால், இந்த விஷயம் அண்ணன்களுக்கு தெரியக்கூடாது. அவர்களை அண்ணன் என்று கூப்பிடவும் கூடாது. அந்த நிபந்தனையில் தான் அண்ணன்களை விற்றிருப்பார்கள். அதுவும் அந்த ஒரு நாள் மட்டும் தான் ஒரு அண்ணன் எனக்கு சொந்தம்.

பொதுவாக வீட்டில் அம்மா ஆங்காங்கே வைத்து பிறகு காணாமல் போன பைசாக்கள் இப்படி அண்ணன்கள் வாங்கவே செலவாகிவிடும். அண்ணன்களுக்காக பைசா செலவு செய்வதில் கொஞ்சமும் சங்கடப்பட்டது கிடையாது. 

ஒரு முறை என்னை நிறுத்தி கேட்டேன், 'உனக்கு எதற்காக அண்ணன் வேண்டும்?", என்று. அதற்கு தெளிவான பதில் இல்லை. "அண்ணன் வேண்டும் அவ்வளவு தான்", என்று பிடிவாதமாகத்தான் பதில் வந்தது.

சில சமயம் விடுமுறை வேதாகம பள்ளிகளில் பாடல் மற்றும் கதைகள் சொல்லிக்கொடுக்க சில அண்ணன்கள் வருவார்கள். அதில் எல்லா அண்ணன்களையும் ரொம்பவும் பிடித்து விடும். எல்லோரையும் அப்படியே வீட்டுக்கு கூட்டிப்போனால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்பது என் கற்பணையாயிருக்கும். அந்த வகுப்புகளின் முடிவில் அழுகை அழுகையாக வரும், இனி அந்த அண்ணன்களை பார்க்க முடியாது என்பதால்.

வளர வளர அண்ணன் ஆசை அதிகமானதே தவிர குறையவில்லை. புதிதாய் எந்த சொந்தக்காரர்கள் அறிமுகமானாலும் முதலில் விசாரிப்பது ஒரு அண்ணன் உண்டா என்பது தான்.

வளர்ந்து விட்ட பிறகும் அண்ணன் யாராவது எங்கேயாவது நமக்கு உண்டா என்று ஆராய்ந்திருக்கிறேன். ஒரே ஒரு அண்ணன் இருக்கிறார்கள் - அருள்ராஜ் சித்தப்பா மகன் - என்று அறிந்து மிகவும் சந்தோஷம். ஆனால் அவர்களை பார்த்ததோ பேசியதோ கிடையாது. 

வளர்ந்தது திருநெல்வேலி-யாதலால் பெயர் தெரியாத பெரியவர்களை அண்ணாச்சி என்றும், அண்ணன் என்றும் அழைப்பது முறை. இப்படியாக கடைக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் எல்லோரும் அண்ணன்களாகவோ, அண்ணாச்சிகளாகவோ மாற்றப்பட்டார்கள். சொந்தமாகவே கருதப்பட்டார்கள், என்னால்.

மினி மார்கெட் அண்ணன், அரிசி கடை அண்ணன், லக்ஷ்மி ஸ்டோர் அண்ணன், ப்ரிமியர் டைலர் அண்ணன் என்று ஒவ்வொருத்தருக்கும் பெயர். அன்பாகத்தான் வைத்திருந்தோம் இந்த அண்ணன்மார்களை. ஆனால் இந்த அண்ணன்களில் ஒருவரையும் என் திருமணத்திலோ மற்ற வைபவங்களிலோ பார்த்ததாக நினைவில்லை. அவ்வளவு தான் அவர்கள் பாராட்டிய உறவும் கொண்டாடிய உரிமையும்.

அண்ணன் ஆசை இன்னும் விட்டபாடில்லை. இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். உங்களுக்கும் சொல்லி வைக்கிறேன், அண்ணனின் தகுதிகளை: 10-Aug-1973-க்கு முன் பிறந்திருக்க வேண்டும்; ஆண்மகனாக இருக்க வேண்டும். 

இவை இரண்டு மட்டுமே. எங்கேயாவது பார்த்தால் சொல்லுங்கள், தங்கை ஒருத்தி தேடிக்கொண்டிருக்கிறேன் என்று...

உங்கள் அண்ணனையும் அன்புடன் விசாரித்ததாக சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,

~ NRIGirl

2 comments: (+add yours?)

KParthasarathi சொன்னது…

உங்களை போல எனக்கும் அண்ணன் இல்லை.அதை குறையாகவே கருதவில்லை.மற்ற கூட பிறந்தவர்கள் இருந்தால் போதுமே.இருந்தும் மூத்த அண்ணன் தந்தைக்கு சமம் என்று சொல்லுவார்கள்.சாதரணமாக பொறுப்புடனும் ஆசையாகவும் இருப்பார்கள்.
ஆனால் அண்ணன்கள் எல்லோருக்கும் பாசம் பொங்கி வழியும்
என்று சொல்ல முடியாது.பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்கிறவர்களையும் பார்த்து இருக்கிறேன்.

ராமலிங்கம் சொன்னது…

எனக்கு அண்ணன்கள், அக்கா, தம்பி அனைவரும் உண்டு. இந்தக் கடிதம் நான் சிறுவனாக என் அக்கா கையைப் பற்றிக் கொண்டு பள்ளியிலிருந்து திரும்பிய நாட்களை ஞாபகப் படுத்துகிறது. அக்காவின் தோழிகள் "டீ உன் தம்பி கையை நான் பிடித்துக் கொண்டு வருகிறேன்" என்று என் அந்த நாளில் மிருதுவான என் கைகளைப் பிடித்துக் கொள்ள வருவார்கள். தம்பிகளையும் கடன் பெறும் பழக்கம் இருந்தது.