வசந்த கால வாழ்த்துக்கள்

அன்புள்ள உங்களுக்கு, வசந்த கால வாழ்த்துதல் சொல்லி NRIGirl எழுதும் கடிதம்...
வடக்கு துருவ பகுதிகளில் வசந்த காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது; சரியாக இன்று பிற்பகல் 12:47 மணியிலிருந்து.

வசந்த காலத்திற்கான மற்ற அறிகுறிகள் ஏதும் இன்னும் தென்படவில்லை. குளிர் இன்னும் விட்டபாடில்லை. பூக்கள் ஏதும் மலரவும் இல்லை. 

Robin-பறவைகளோ, சிட்டுக்குருவிகளோ, அண்ணங்களோ, அணில்களோ, முயல் குட்டிகளோ, மான்களோ, கரடிகளோ ஏதும் இன்னும் விழித்து வரவில்லை. (நாங்கள் வசிக்கும் பகுதியில் இவை எல்லாம் சகஜம்). 

ஆனால் ஒரு நாளும் இல்லாத திருநாளாய் நேற்று ஒரு raccoon வந்தது. பிள்ளைகள் சமையல் அறையில் அமர்ந்து பாடம் எழுதிக்கொண்டிருக்க, வெளியே ஒரு அனக்கம். யார் என்று பார்த்தால், நம்ம raccoon தான். 

இதற்கு முந்தி அதை நேரில் பார்த்தது கிடையாது. இருந்தாலும் சின்ன பிள்ளைகளில் இருந்தே நாம் அதை புஸ்தகங்களில் படங்களில் பார்த்திருந்ததால் அது "நம்ம raccoon" தான் என சட்டென அறிய முடிந்தது. பிள்ளைகளுக்கு முதலில் சந்தோஷம் - ஒரு அரிய பிராணியை பார்த்ததில். 

பிறகு பயம். கேள்விக்கு மேல் கேள்வி. Raccoon நல்லதா, கெட்டதா, கடிக்குமா, பிரண்டுமா, நம்மள பார்த்து பயப்படுமா, பாயுமா, வேற என்ன பண்ணும், என்ன தான் சாப்பிடும், ஏன் நம்ம வீட்டுக்கு வந்தது? அதற்கு என்ன தான் வேண்டும்? வேலி எங்காவது உடைந்திருக்கா? அது வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்? என்று பல கேள்விகள். இவர்கள் கேள்விகளுக்கு யாரால் தான் பதில் சொல்லி முடியும். யாருக்குத்தான் பதில் தெரியும். நீங்களே தேடி கண்டுபிடியுங்கள், எங்களுக்கும் சொல்லுங்கள் என்று சொல்லித் தப்பித்தோம்.


இப்படித்தான் ஒரு முறை இந்தியாவில் முதல் முறையாக பல்லியை பார்த்துவிட்டார்கள். நாங்கள் உறங்கி விட்டோம். கேட்டார்களே கேள்வி. பேசினார்களே பேச்சு. நமக்கு போதும் போதும் என்றாகியிருக்கும். ஆனால் அம்மா ரொம்ப பாராட்டினார்கள். பரவாயில்லை உன் பிள்ளைகள், கெட்டிக்கார பிள்ளைகள் என்று ரொம்பவும் மெச்சிக்கொண்டார்கள். முடிந்த வரை பதிலும் சொன்னார்கள், தூக்கத்தை விட்டு, அவர்கள் கேள்விகளுக்கு.

சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உற்சாகாமாய்? சந்தோஷமாய்? நல்லது, அப்படித்தான் இருக்க வேண்டும். கவலைப்பட்டு என்னதான் சாதிக்கப்போகிறோம்? சந்தோஷமாய், உற்சாகாமாய்த்தான் முயற்சி பண்ணுவோமே. 

உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற, சுக பெலன் நன்கு அமைய, மற்றும் இந்த வசந்த காலம் மிகவும் வசந்தகரமாய் இருக்க வாழ்த்துக்கள். 

என்றும் அன்புடன்,

~ NRIGirl

6 comments: (+add yours?)

Paradesi at New York சொன்னது…

வசந்தம் வருமுன்னே கோடை வந்து விடும்போல் தெரிகிறது .என்னத்தை சொல்ல ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இங்கு ஏப்ரல் மே மாதங்களை நினைத்து இப்போதே பயமாக இருக்கிறது...!

KParthasarathi சொன்னது…

இன்னும் சில தினங்களில் நீங்கள் வசிக்கும் பிரதேசத்தில் வசந்த கால பருவம் பூரிப்புடன் தொடங்கும்.தீவிர குளிரிலிருந்து விடுபட்ட எல்லோருக்கும் மனதில் ஒரு உற்சாகம்,ஒரு துள்ளல் கட்டாயம் இருக்கும். மரங்கள் செடிகளில் இலை துளிர் விட ஆரம்பிக்கும்.பூக்களும் மலரும்.தரை பச்சை வண்ண போர்வையாய் தோன்றும்.
பறவைகளும்,பிராணிகளும்வெளியில்வரும்.குழந்தைகள் விளையாட தொடங்குவார்கள்.
உங்களுக்கு எனது வசந்த கால வாழ்த்துகள் ..

YL சொன்னது…

பிள்ளைகளுக்கு 'கீரிப்பிள்ளையும் பாம்பும்' கதை சொல்லி கொடுத்தீர்தகளா? சில நாட்களுக்கு முன் ஒரு கீரிப்பிள்ளயை நம் வீட்டிற்குப் பக்கத்து வளாகத்தில் பார்த்தோம். வலை தளத்தில் கீரிபிள்ளை குறித்த அனைத்து தகவல்களயும் அறிந்துகொள்ளச் செய்யுங்கள்.

bkaseem சொன்னது…

வெளியே ஒரு "அனக்கம்"

நாஞ்சில் நாட்டுத் தமிழ்! இந்த ஒரு வார்த்தை என்னை அப்படியே ஊருக்கு அழைத்துச் சென்றது. திருநெல்வேலித் தமிழுக்கும் நாகர்கோவில் தமிழுக்குமே நிறைய வித்தியாசம் காண முடியும்.

நான் பொடிப்பயலாக இருக்கும்போது ஊரில் எங்கள் தெருவில் தினமும் ஒருவர் மாலைகளில் கீழ்கண்டவாறு உரக்கச் சொல்லிக்கொண்டே வருவார்...

"அப்பன் உளுந்தாண்டேய்ய்ய்...." என்று கூறி ஒரு இடைவெளி விட்டு அவரே "ஆமடேய்ய்ய்ய்...." என்பார்.

அவர் திண்பண்டங்கள் விற்பவர். முன்பெல்லாம் தெருக்களில் இப்படி திண்பண்டங்கள் விற்பவர்கள் வருவார்கள். அவர் விற்கும் பலகாரங்களைத்தான் இப்படி கூவி விற்கிறார்... அதாவது...

"அப்பம்... உளுந்தவடை...ஆம வடை" இதைத்தான் அவர் ராகமாக நீட்டி முழக்கும்போது "அப்பன் உளுந்தாண்டேய்.... ஆமடேய்..." ஆகிப்போகிறது.

அவர் இப்படி கூவும்போதெல்லாம் என் குறும்புக்கார குட்டியாப்பா.. "உங்கப்பன் உளுந்தா எனக்கென்ன டேய்ய்ய்ய்...." என்று அதே ராகத்தில் பதில் கூவி ரகளை செய்வார்.

கடந்த காலத்திற்கு என்னை சஞ்சரிக்க வைத்த உங்கள் சொற்பிரயோகத்திற்கு நன்றி தோழி!

NRIGirl சொன்னது…

ரொம்ப சந்தோஷம் Bawa! உங்கள் comment வருகைக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது. அவ்வளவு interesting-ஆக இருக்கிறது வாசிக்க. த்யாங்க் யூ!