பயண அனுபவம்

அன்புள்ள உங்களுக்கு அன்புடன் NRIGirl மீண்டும் எழுதிக்கொள்ளும் கடிதம்...

என்னவென்று தெரியவில்லை, இந்த வலை தளத்தை ஆரம்பித்த இந்த இரண்டு தினங்களில் மனதில் அப்படி ஒரு சந்தோஷம். வலை தளம் எனக்கு புதிதல்ல. சில வருடங்களாக NRIGirl மற்றும் Coffee with Jesus என்ற தலைப்புகளில் எழுதிக்கொண்டு தான் வருகிறேன். ஆனால் தமிழில் எழுதுவது எனக்கு புதிது. அதனால்தானோ என்னவோ எப்போதும் இல்லாத சந்தோஷம் இப்போது இந்த வலை தளம் மூலம் உணர்கிறேன்.  
இருக்கட்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 

உங்கள் வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி/கணவர், மக்கள் மற்றும் நீங்கள் சுகமா? ஏன் கேட்கிறேன் என்றால், எல்லோரும் நல்லாயிருந்தாதானே நாமும் நல்லா இருக்க முடியும். எங்கள் வீட்டில், யாவரும் சுகம். அதனால் நானும் சுகம். 

சரி, விசாரிப்புகள் முடிந்த பட்சத்தில் விசயத்திற்கு வருவோம். நேற்று நடந்த ஒரு சுவாகசிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தினமும் ந்யூ யார்க் நகருக்கு பேருந்தில் வேலைக்கு சென்றுவருகிறேன். தினமும் செல்வதால் மொத்தமாக டிக்கெட் வாங்கி வைத்திருப்பது வழக்கம். புதிதாக வருபவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு $12 பணம் கொடுத்தால் ஓட்டுனர் அவர்களை ஏற்றிக்கொள்வார். 

பேருந்துக்கு காத்திருக்கும்போது வரிசையில் நிற்கவேண்டும். பேருந்து வந்த உடன் வரிசை பிரகாரம் ஏற வேண்டும். நேற்று ஒரு பெண் வரிசையில் எனக்கு முன் நின்றாள். அவள் முறை வந்த போது, கொஞ்சம் பதட்டமாக, ஒதுங்கி நின்றுகொண்டாள். நான் ஏறி முதல் வரிசை இன்னும் காலியாக இருந்ததால் அதில் அமர்ந்துகொண்டேன். வரிசையில் நின்ற ஒவ்வொருவரும் எறிக்கொண்டிருந்தார்கள். அந்த பெண் பாவமாய் ஓரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டிருந்தாள்.

அனைவரும் எறிய பிறகு மெதுவாய் வந்து ஓட்டுனரிடம், டிக்கெட்டின் விலை விசாரித்தாள். அவர் $12 என கூறினார். அப்பொழுது அவள், என்னிடம் cash இல்லை, க்ரெடிட் கார்ட் மூலம் பணம் வாங்கிக்கொள்வீர்களா என்று விசாரித்தாள். ஓட்டுனர், "மன்னிக்கவும்; க்ரெடிட் கார்ட் வசதி இல்லை" என்று மறுத்தார். அவள் மீண்டுமாக தன் கைப்பையில் துளாவினாள். பிறகு ஏக்கமாக, "என்னிடம் $7 தான் உள்ளது" என்று கூறி நின்றாள். ஓட்டுனர் கை விரித்துவிட்டார். அவளும் அங்கிருந்து நகல ஆரம்பித்தாள்.

பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பொறுக்கவில்லை மனது.

"நான் உனக்கு ஒரு டிக்கெட் தருகிறேன்", என்று சொன்னேன். காலை நேரத்தில் சத்தம் மெதுவாகத்தான் வந்தது; அவளுக்கு நான் சொன்னது கேட்கவில்லை. ஓட்டுனர் அவளுக்கு அதை உரக்க
டுத்துரைத்தார். அவள் நன்றியோடு என்னை பார்த்தாள். நான் ஒரு டிக்கெட்டை எடுத்து ஓட்டுனரிடம் கொடுக்க, அவளும் எறிக்கொள்ள வண்டி பறந்தது ந்யூ யார்க் நகர் நோக்கி.

அவள் பல முறை நன்றி சொல்லிக்கொண்டாள். அக்கம் பக்கத்தில் அமர்ந்தவர்களெல்லாம் என்னை பெரிதும் பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள். "இப்படி ஒரு செயலை பார்த்தது கிடையாது; உனக்கு என்ன ஒரு பெருந்தன்மை", என்று பலதும் சொன்னார்கள். எனக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. எப்படியும் ஒருவருக்கு உதவ முடிந்ததில்
சிறு சந்தோஷம்.

பேருந்து கொஞ்சம் தூரம் சென்றதும் அவள் உற்சாகமாய் என்னிடம் வந்தாள், ஒரு $20 தாளை கையில் வைத்திருந்தாள். "தேடி கண்டுபிடித்துவிட்டேன்; என்னிடம் பணம் இருக்கிறது இப்போது; தயவு செய்து வாங்கிக்கொள்ளுங்கள்", என்று சந்தோஷமாக நீட்டினாள். நானும் பெற்றுக்கொண்டு சில்லறையை கொடுத்தேன்.

ஆக மொத்தத்தில், நேற்றைய பயண அனுபவம், பலர் மனதிலும் கொஞ்ச நாள் நினைவில் நிற்கும்படி அமைந்தது.  

பயணம் ஒரு தொடர்கதை அல்லவா? தொடரட்டும் உங்கள் பயண அனுபவங்கள். தொடருகிறேன் நானும்.
என்றும் அன்புடன்,
~ NRIGirl

8 comments: (+add yours?)

வே.நடனசபாபதி சொன்னது…

பயண அனுபவத்தை சுவையாய் சொல்லியிருக்கிறீர்கள். மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்!

KParthasarathi சொன்னது…

'கொஞ்சம் உங்களோடு...' வலைப்பூவை ஆரம்பித்ததில் மிகவும் சந்தோஷம் எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்/நண்பிகளுக்கு இதை பற்றி தெரிவிக்கிறேன்.

எடுத்த எடுப்பிலேயே ஒரு அட்டகாசமான பதிவை போட்டு என்னை பிரமிப்பில் ஆழ்த்தி விட்டீர்கள்.பிறருக்கு உதவுவது அதுவும் முன்பின் தெரியாத நபருக்கு உதவுவது மிகவும் உயர்ந்த குணம்.எல்லா மதத்திலும் முக்கியமாக கிறித்துவ மதத்தில் (Giving) கொடுப்பது உன்னத குணமாக கருதப்படுகிறது.எனக்கும் அந்த பெண் மாதிரி உதவி வாங்கும்படியான சந்தர்பம் ஏற்பட்டது Frankfurt ல் .அதனால் எனக்கு அவள் உள்ளம் எப்படி நிறைந்து இருக்கும் என தெரியும்.

நிறைய எழுதுங்கள் .ஆங்கிலத்தில்தான் புலமை என்று நினைத்து இருந்தேன்.தமிழிலும் உங்கள் கைவண்ணம் புலப்படுகிறது.
மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயணம் இனிமை... தொடர வாழ்த்துக்கள்...

மோகனன் சொன்னது…

அருமை... இன்னும் பல சுவாரசியத் தகவல்களோடு எழுதுங்கள்...

Chitra சொன்னது…

Very nice experience.
Thank you for sharing

NRIGirl சொன்னது…

ரொம்ப சந்தோசம் உங்களெல்லோருடைய உற்சாக வரவேற்பை பார்த்து. மிக்க நன்றி. சீக்கிரமாய் வந்து உங்கள் பக்கங்களை பார்க்கிறேன்.

YL சொன்னது…

அன்புள்ள குயின்மாவிற்க்கு அன்புடன் அம்மா எழுதும் வாழ்த்து மடல்
உன்னுடைய தமிழ் வலைப்பூ தளம் நல்ல முறயில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்!
உனக்கு நேரிட்டதைப் போல பல பயண அனுபவங்கள் எனக்கும் நேரிட்டதுள்ளது.
ஒரு முறை எக்மோர் ரயில் நிலயத்தில் ஒரு வாலிபன் என்னிடம் ' நான் உங்கள் எதிர் வீட்டு பையன், எனக்கு ஊருக்கு போக பணம் இல்லை, ஒரு டிக்கெட் எடுக்க பணம் வேண்டும், ஊருக்கு வந்ததும் தந்து விடுவேன்' எனக் கூறி பணம் வாங்கினான். எனக்கு அந்த பையனை தெரியாவிட்டாலும், அவனை பார்த்த ஞாபகம் இருந்தபடியாலும், அவனது சகோதரி மட்டும் அம்மாவை தெரிந்தபடியாலும், என் கையில் பணம் இருந்தபடியாலும் அவனுக்கு உதவினேன். திருநெல்வேலி ஜங்க்ஷன் வந்தவுடன் அவனை தேடினேன். கணவில்லை. அவனது வீட்டிலிருந்து யாராவது வந்து பணத்தை தாருவார்கள் என எதிர்பார்த்தேன், நடக்கவில்லை. அவர்கள் வீட்டில் விசாரித்தேன். ' அவன் இப்படிதான், அனேகரிடம் பணம் வாங்கியுள்ளான், நாங்கள் என்ன செய்ய' என சொல்லிவிட்டார்கள். அவர்களது நிதி நிலமை சரியில்லை என எனக்கு தெரிந்தபடியால் நான் வற்புறுத்தவில்லை.
ஒருவேளை நான் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த நாள் வரயிலும் என் மனம் உறுத்திகொண்டே இருந்திருக்கும். என் பையனைப் போல ஒரு பையன் பணம் இல்லாததால் எதோ ஒரு காரணத்தை சொல்லி பணம் பெற்றுக் கொண்டான் என திருப்தியே அடைகிறேன்.
இன்னும் பல அனுபவங்களோடு மீண்டும் எழுதுகிறேன். இப்போதைக்கு அன்புடன் நிறுத்துகிறேன்
அன்புடன் அம்மா

Paradesi at New York சொன்னது…

நல்ல மனம் வாழ்க , நாடு போற்ற வாழ்க.
அடுத்த தடவை NJ பயணத்தில் கூட வர விருப்பம் .டிக்கெட் போட ஆள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை.