அறிமுகம்...

அன்புள்ள உங்களுக்கு அன்புடன் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்...

நலம். நலம் அறிய ஆவல்.

கொஞ்சம் உங்களோடு மூலம் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். கடிதம் எழுதுவது பெரும்பாலும் மறைந்து வருகிற இந்த காலத்தில், கடிதம் மூலமாகவே உங்களை தொடர்பு கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். நீண்ட நாட்களாக விரும்பியும் இப்பொழுதுதான் வசதி வாய்த்திருக்கிறது.

சிறுவயது முதலே கடிதம் எழுதுவது என் பொழுது போக்கு. பாட்டி அம்மாவுக்கு கடிதம், பப்பாவுக்கு கடிதம், நண்பர்களுக்கு கடிதம், உறவினருக்கு கடிதம், பேனா நண்பர்களுக்கு கடிதம், என அடிக்கடி கடிதம் எழுதுவதுண்டு. சமீபகாலத்தில் தான் எப்போதோ எங்கேயோ அந்த பழக்கத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். அதை மீண்டும் தேடி கண்டெடுத்ததில் சந்தோஷம்.

அதெல்லாம் சரி, யார் நீ NRIGirl? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

உங்களை மாதிரி அல்லது உங்கள் மனைவி, மகள், மருமகள், தோழி, அம்மா மாதிரி NRIGirl ஒரு சராசரி பெண். தான் உண்டு தன் வேலை உண்டு, தன் குடும்பம் உண்டு என்று முழு மூச்சாக உங்களையும் உங்களை சுற்றியும் இயங்கும் ஒரு சராசரி குடும்ப பெண் போல் தான் NRIGirl.

பிறந்து வளர்ந்தது திருநெல்வேலியில்; பெற்று வளர்ப்பது அமெரிக்காவில். NRI-யாகவும் பெண்ணாகவும் இருப்பதால் எனக்கு நானாகவே வைத்துக்கொண்ட பெயர் தான் NRIGirl.

இங்கேயும் அங்கேயுமாக மனம் தத்தளிக்கத்‌தான் செய்கிறது. ஆனாலும், யோசித்துப்பார்த்தால் அமெரிக்காவுக்கே வராமல் இந்தியாவிலேயே வாழ்க்கை அமைந்திருந்தால் அதை தோல்வியாகவே எண்ணியிருப்பேன், ஏனென்றால் அமெரிக்கா எனது சிறுவயது கணவு. அதனால் மனம் நிறைந்த நன்றியோடு, இறைவன் தந்த இந்த அழகான வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறேன்.

குளிர் தான். வேலை அதிகம் தான். வீட்டையும் அலுவலையும் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும், "தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது", என்கிற வேத வசனம் என்னை உற்சாகப்படுத்துகிறது.

சரி சரி உனக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா? என்று நீங்கள் கேட்டால், தலைக்கு மேலே வேலை இருக்கத்‌தான் செய்கிறது. இருந்தாலும் ஆசை ஆசையாய் ஆரம்பித்திருக்கிறேன் இந்த கடித தளத்தை.

அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம். உங்களுக்கும் சந்தோஷம் தான் என நம்புகிறேன்.

உங்களை அறிமுகம் செய்து ஓரிரு வார்த்தைகள் முடிந்தால் காமெண்ட் (comment) எழுதுங்கள், .கடிதம் விரும்பும் உங்கள் நண்பர்களுடன் இந்த வலை தளத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த கடிதத்தை இப்போதைக்கு முடிக்கிறேன். வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,

~ NRIGirl

4 comments: (+add yours?)

Paradesi at New York சொன்னது…

நீ அனுப்புவது கடிதம் அல்ல ,உன் உள்ளம் .
உன் கடிதங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் தோழன் ,

NRIGirl சொன்னது…

மிக்க நன்றி தோழரே! தங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிமுகப் பகிர்வு நன்று...

வலையுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... தொடர வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…


கடிதம் - எல்லோரின் இளவயதிற்கு கூட்டிசென்று
விடுகிறது . பழமொழி 31:10-31 வசனம் என் நினைவிற்கு
வருகின்றது
..................................கர்த்தர் உங்கள் குடுமபத்தின் அனைவரோடு இருப்பாராக